Ad

திங்கள், 27 செப்டம்பர், 2021

`கருவேல மரத்தில் இளம்பெண் உடல்; காதலன் தலைமறைவு?!' - தற்கொலையா.. கொலையா..?

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் ஜெயஸ்ரீ (22). பி.பி.ஏ பட்டதாரியான இவர் படித்து முடித்து விட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஓராண்டுக் காலமாக ஜெயஸ்ரீயும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்ற இளைஞரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஜெயஸ்ரீ, இளவரசனைக் காதலிப்பதற்கு அவரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், இளவரசனின் பெற்றோர் ஜெயஸ்ரீ பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனராம்.

இளம்பெண் ஜெயஸ்ரீ

இளவரசன் தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, இளம்பெண் ஜெயஸ்ரீயைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று வீட்டிலிருந்து வழக்கம் போல் வேலைக்குச் சென்ற இளம்பெண் ஜெயஸ்ரீ, வீட்டிலிருந்து வெளியேறிய சில மணி நேரங்களிலேயே அருகிலுள்ள முட்புதரில் கருவேலமரம் ஒன்றில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், கருவேலமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்த தங்கள் மகள் ஜெயஸ்ரீயைக் கண்டு கதறி அழுத படி, சம்பவம் தொடர்பாக மப்பேடு காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், கருவேலமரத்தில் துப்பட்டாவைப் பயன்படுத்தித் தூக்கிட்டுக் கொண்ட இளம்பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், இளம்பெண்ணின் பெற்றோரிடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜெயஸ்ரீயின் பெற்றோர், தங்கள் மகள் மரணத்தில் அவர் காதலித்து வந்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்ற இளைஞர் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

Also Read: அம்மாவை இழந்த சோகம்; 20 வயது இளைஞர் கூவம் ஆற்றில் குதித்துத் தற்கொலை!

அதையடுத்து, சந்தேகத்தின் பேரில் இளவரசனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த மப்பேடு போலீஸார், அவரை அழைத்து விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டனர். அதே போல், இளம்பெண்ணின் உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்ததாலும், வேலைக்குச் செல்லும் போது அவர் எடுத்துச் சென்ற செல்போன், பணப்பை உள்ளிட்ட பொருள்கள் சம்பவ இடத்தில் இல்லாததாலும், சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

தற்கொலை (Representational Image)

இதற்கிடையில், போலீஸார் தன்னை தேடி வரும் தகவலிருந்து, இளவரசன் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், உயிரிழந்த ஜெயஸ்ரீயின் தந்தை சுந்தரமூர்த்தி மப்பேடு காவல்நிலையத்தில், தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தாங்கள் சந்தேகிப்பதாகப் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார், இளம்பெண்ணின் மரணம் கொலையா...தற்கொலையா..? என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/tiruvallur-mysterious-suicide-case-police-tighten-investigation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக