Ad

வியாழன், 30 செப்டம்பர், 2021

அமராவதி ஆற்றில் சாயக்கழிவு கலப்பு விவகாரம்: 3 வது முறையாக ஆய்வு மேற்கொண்ட பசுமை தீர்ப்பாயக்குழு!

கரூர் அமராவதி ஆற்றில் சாயக்கழிவு மற்றும் நகராட்சி கழிவுநீர் கலப்பது குறித்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயக்குழு 3 வது முறையாக ஆய்வு செய்திருக்கிறது.

அமராவதி ஆற்றில் சோதனை

Also Read: `தேர்தல் புறக்கணிப்பு' அறிவித்த கிராம மக்கள்; படையெடுத்த அதிகாரிகள்; தொடங்கப்பட்ட பணிகள்!

கரூரில் நகரின் வழியாக செல்லும் அமராவதி ஆறு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் இருந்து தொடங்கி, கரூர் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடலூரில் உள்ள காவிரியில் கலக்கிறது. இந்த நிலையில், அமராவதி கரைகளில் இருந்த சாய்ப்பட்டறை ஆலை கழிவுகளால், இந்த ஆறு விஷமானது. நிலத்தடி நீரும் கெட்டுப்போனது என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாக உள்ளது. இதனால், விவசாயிகள் வழக்கு தொடர்ந்ததையடுத்து, 15 வருடங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகள் இழுத்து மூடப்பட்டன. ஆனால் தற்போதும், 60 க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், மறுபடியும் அமராவதி ஆற்றில் சாயக்கழிவை ஆலைகள் திறந்துவிடுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆய்வு மேற்கொள்ளும் மேக்னா

அதனால், கரூர் அமராவதி ஆறு மற்றும் கிளை வாய்க்கால்களில் சாயக்கழிவு மற்றும் கரூர் நகராட்சி கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவை சுமோட்டாவாக இவ்விவகாரத்தினை விசாரணைக்கு எடுத்தன. தொடர்ந்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அனைத்துத் துறையினர் அடங்கிய குழுவை அமைத்து அமராவதி ஆறு, கிளை வாய்க்கால்கள், சாயக்கழிவு, கரூர் நகராட்சி கழிவு நீர், திடக்கழிவுகள் கலப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 11, 12 ஆம் தேதிகளில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் நீதிமன்றம் திருப்தி அடையாததால், கடந்த ஜூன் மாதம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாயப்பட்டறைகளில் மட்டுமே தனியே ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் நகராட்சி கழிவுநீர், திடக்கழிவுகள் அமராவதி ஆற்றில் கலப்பது குறித்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை மறு ஆய்வு செய்து, ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, கடந்த ஜூலை 22 ஆம் தேதி மறு ஆய்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, தென்னிந்திய பசுமைத்தீர்ப்பாயம் மூன்றாவது முறையாக கரூர் அமராவதி ஆற்றில் நேற்று ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வு மேற்கொள்ளும் மேக்னா

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானிகள் மேக்னா, கார்த்திகேயன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், அமராவதி ஆறு நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் முருகேசன், நகராட்சி பொறியாளர் நக்கீரன் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். அவர்கள், கரூர் அமராவதி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானி மேக்னா, "தென்னிந்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பிலான குழு அமராவதி ஆற்றில் இரு நாள் ஆய்வை தொடங்கி உள்ளோம். கடந்த இரு முறை நடந்த ஆய்வுகளின் போது விடுப்பட்ட சில தகவல்களை சேகரிப்பதற்காக, தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் நகருக்குள் அமராவதி ஆறு வருவதற்கு முன்புள்ள செட்டிப்பாளையம், அமவராதி கதவணை தொடங்கி நகரில் அமராவதி செல்லும் பகுதிகளில் இருந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி, ஆறு இடங்களில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அமராவதி ஆற்றங்கரையில் உள்ள 11 தொழிற்சாலைகளின் கழிவு நீர் மற்றும் திடக்கழிவுகள் எதுவும் அமராவதி ஆற்றில் கலக்கவில்லை.

பேட்டியளிக்கும் மேக்னா

ஆய்வை முடித்து, ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். ஆய்வு முறையாக நடத்தப்படுகிறது. அக்டோபர் 22 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்வோம்" என்றார். ஆனால், 'மேக்னாவுக்கு இந்தி, ஆங்கிலம் மட்டும் தெரியும் என்பதால், தமிழ் தெரியாத அதிகாரியை அனுப்பி ஆய்வு செய்ய சொல்வது, தவறு. இதனால், ஆய்வு முறையாக நடக்காது' என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.



source https://www.vikatan.com/news/environment/karur-amaravati-river-environment-issue-third-time-investigation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக