Ad

புதன், 29 செப்டம்பர், 2021

`லடாக்கை தொடர்ந்து உத்தரகாண்ட்... குறிவைக்கிறதா சீனா?!' -எல்லையில் நடந்தது என்ன?

உலக வரைபடத்தில் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தியாவும் - சீனாவும், எல்லைப் பிரச்னை காரணமாகப் பல ஆண்டுக்காலமாக மோதல் போக்கைக் கடைப்பிடித்துவருகின்றன. எல்லையில் மாறி மாறி வீரர்களைக் குவிப்பது, அவ்வப்போது ஆயுத மோதலில் ஈடுபடுவது என இரு நாட்டு ராணுவத்தினரின் இந்த எல்லை மோதல் அண்மைய காலங்களில் தீவிரம் அடையத் தொடங்கியிருக்கிறது. அதற்கு, கடந்த ஆண்டு, ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் அரங்கேறிய தாக்குதல் சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம். இந்திய - சீன எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் பயன்படுத்தத் தடை உள்ள நிலையில், தடிகள், கற்கள் உள்ளிட்டவற்றைக்கொண்டு இருநாட்டு வீரர்கள் மோதிக்கொண்டனர். அந்தத் தாக்குதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர். சீனா தரப்பில் ஐந்து வீரர்கள் உயிரிழந்ததாகப் பல மாதங்கள் கழித்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதல், உலக அளவில் பேசுபொருளானதை அடுத்து, இந்தியா - சீனா இடையே எல்லை விவகாரத்தில் சுமுகத் தீர்வுகாணும் வகையில் பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அரசியல், ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடந்த அந்தப் பேச்சுவார்த்தைகளின் பலனாக இரு நாடுகளும் எல்லையில் குவிந்துகிடந்த தங்கள் படைகளைக் கணிசமான அளவில் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தன. அதன்படி, லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தங்கள் வீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் தொடங்கின. ஆனால், அடுத்த சில வாரங்களிலேயே எல்லைப் பகுதியில் மீண்டும் போர் மேகம் சூழ்ந்தது. காரணமே இல்லாமல், சீன ராணுவத்தினர் எல்லைப் பகுதியில் அதிக அளவில் குவிந்தனர். அதையடுத்து, இந்தியா தரப்பிலும் அதிக அளவில் வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

லடாக்

அதன் காரணமாக, மீண்டும் பெரிய அளவிலான மோதல் வெடிக்கும் என்ற பதற்றம் தொற்றிக்கொண்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. பதற்றம் மட்டும் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கிறது. சமீபத்திய கள நிலவரப்படி, லடாக் எல்லைப் பகுதியில் சீனா தரப்பில் (லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்) கட்டுப்பாட்டுக் கோட்டில் வீரர்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் ஊடுருவலை எதிர்கொண்டு பதிலடி கொடுக்கும்விதமாக இந்தியாவும் 50,000 வீரர்களை நிலைநிறுத்திம் தயார்நிலையில் இருக்கிறது.

லடாக் எல்லைப் பகுதியில் சீனா அடிக்கடி அத்துமீறி வருவதால், இந்திய ராணுவம் சீன ராணுவத்தினரின் அசைவுகளை மிகத் தீவிரமாக கவனித்துவருகிறது. இந்திய ராணுவத்தின் கவனம் லடாக் எல்லையில் இருக்கும் வேளையில், சீன ராணுவத்தினர் உத்தரகாண்ட் மாநில எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கண்காணித்துவிட்டுச் சென்றிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: தாலிபன்: முக்கியப் பங்காளி சீனா; இந்தியாவுக்கு எந்த வகையில் பின்னடைவு?

இந்திய ராணுவ வட்டாரத்திலிருந்து இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், 30-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தின் எல்லைப் பகுதியான பராஹோதியில் சீனாவின் லிபரல் ராணுவத்தைச் சேர்ந்த 100 வீரர்கள் ஆயுதங்களுடன் குதிரையில் ஊடுருவி நுழைந்ததாகவும், உள்ளே வந்தவர்கள் சுமார் மூன்று மணி நேரம் அந்தப் பகுதியில் முகாமிட்டு, அங்கிருந்த நடைப்பாலம், கட்டடங்கள் சிலவற்றைத் தகர்த்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல், சீன வீரர்களின் இந்த ஊடுருவல் குறித்து இந்திய ராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்து, அவர்கள் அந்தப் பகுதிக்கு விரைவதற்குள் அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஊடுருவலின்போது இருநாட்டு வீரர்களுக்கு இடையே எந்தவித மோதலும் இல்லாதபோதிலும், சீனாவின் இந்த அத்துமீறல் அந்தப் பகுதியில் பதற்றநிலையை உருவாக்கியிருக்கிறது.

உத்தரகாண்ட் - பராஹோதி

ஆனால், இந்த ராணுவ வட்டாரத் தகவலை மறுத்திருக்கும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங், "சீன வீரர்கள் கடந்த மாதம் மாநில எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக எந்தவிதத் தகவலும் இல்லை" என்று விளக்கமளித்திருக்கிறார். ஏற்கெனவே, சீனா லடாக் எல்லையில் டாஷிகோங், மான்சா, ஹாட் ஸ்பிரிங்ஸ், சுருப் போன்ற பகுதிகளில் தங்குமிடங்கள் அமைத்து, தாக்குதல்களை எதிர்கொள்ளும் அதி நவீன ஏவுகணைகளையும் நிலை நிறுத்தியுள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநில எல்லைக்குள் அத்துமீறியிருப்பதாக வெளியான தகவல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.



source https://www.vikatan.com/news/india/more-than-100-chinese-troops-transgress-into-uttarakhand-border-says-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக