Ad

புதன், 29 செப்டம்பர், 2021

`வங்கிகளில் நகைக்கடன் முறைகேடு; முதலில் உதயநிதி மீதுதான் வழக்கு பதிய வேண்டும்!’ - அண்ணாமலை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``தமிழகத்தில் கொலைக் குற்றங்களைத் தடுப்பதற்காகக் காவல்துறையினர் எடுத்துவரும் நடவடிக்கைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பல மன அழுத்தங்களால் மாணவர்கள் உயிரிழந்துவரும் நிலையில், தமிழக அரசு அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தொடர்ந்து அரசியல் செய்துவருகிறது.

செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை

எனவே, மாணவர்களின் உயிரிழிப்பைத் தடுப்பதற்கு அவர்களைக் குழப்பாமல், திமுக அமைதியாக இருந்தாலே போதும். தேர்தல் வரும்போதெல்லாம் திமுக நீட் தொடர்பாகப் பேசி, ஆதாயம் தேடிக்கொள்கிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மாணவர்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கக் கூடிய அரசு, ஏன் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பெரியவர்களை கோயிலுக்குச் செல்ல அனுமதிக்க மறுக்கிறது? டாஸ்மாக்குக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட கோயில்களுக்குத் தரவில்லையே...

Also Read: `தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நீட் எதிர்ப்பு இல்லாதது ஏன்?' - ஓர் அலசல்

எனவே, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். இந்த அரசு எல்லா மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டும். அனைவருக்கும், அனைத்து நிலையிலும் சரியான முடிவை எடுக்க வேண்டும். `கரீப் கல்யாண் அன் யோஜனா’, `தடுப்பூசித் திட்டம்’ உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க நினைக்கிறது தமிழக அரசு. மத்திய அரசு கொண்டுவந்த அனைத்துத் திட்டங்களிலும் மாநில அரசு, பாரத பிரதமரின் படத்தைக்கூட வெளியிடாமல் அனைத்தையும் மாநில அரசே செய்வதாக சொல்லிக்கொள்வது எப்படி மக்களுக்கான அரசாக இருக்க முடியும்? கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது திமுக ஆட்சி அமைந்ததும், `வங்கிகளில் அடமானம் வைத்துள்ள நகைகளுக்குக் கடன்‌ தள்ளுபடி கிடைக்கும்.

தேர்தல் பிரசாரம்

எனவே, நகை அடமானம் வைக்காதவர்கள் இப்போதே வங்கியில் நகை கடன் பெற்றுக்கொள்ளுங்கள். திமுக ஆட்சி அமைந்ததும் கடன் தள்ளுபடி பெறலாம்’ என உதயநிதி ஸ்டாலின்தான் பிரசாரம் செய்தார். ஆனால், இன்று முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் பேசும்போது `வங்கிகளில் முறைகேடாக நகை அடமானம் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவிக்கிறார். நியாயப்படி பார்த்தால், முதலில் உதயநிதி ஸ்டாலின் மீதுதான் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதெல்லாம் திமுக அரசியலுக்காகப் போடுகிற நாடகம்” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/annamalai-press-meet-in-tuticurin-regarding-political-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக