Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2020

`தீவிரவாதத்துக்கு எதிரான போரிலிருந்து பிரான்ஸ் ஒருபோதும் பின்வாங்காது!’- இம்மானுவேல் திட்டவட்டம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் நீஸ் நகரில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் கடந்த 29-ம் தேதி அன்று காலை 9 மணியளவில் உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கே இருந்த மூன்று பேரைக் கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்தார். இந்த தாக்குதலானது பிரான்ஸ் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்த விசாரணையில் கொலையாளி ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பிலிருப்பது தெரியவந்தது.

பிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்

முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிகையான `சார்லி ஹெப்டோ’வில் (Charlie Hebdo) வெளிவந்த முகமது நபியின் கார்ட்டூனானது சர்ச்சையை ஏற்படுத்தியது. அது, இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாக சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து சார்லி ஹெப்டோ அலுவலகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் அப்போது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி இந்த கார்ட்டூனை, தனது வகுப்பறையில் மாணவர்களுக்குக் காட்டி பாடம் நடத்தியதற்காக சாமுவேல் பேட்டி (47) என்னும் பள்ளி ஆசிரியர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 18 வயது இளைஞரால் பள்ளி அருகிலேயே தலைதுண்டித்துக் கொல்லப்பட்டார்.

Also Read: `இதோடு நிற்கப்போவதில்லை; தாக்குதல்கள் தொடரலாம்!’ - எச்சரிக்கும் பிரான்ஸ் அமைச்சர்

இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறிய கருத்தானது உலக அளவில் சர்ச்சையாக எரியத் துவங்கியது. உலகமெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் பிரான்ஸுக்கு எதிராகவும், மேக்ரானுக்கு எதிராகவும் கண்டனக் குரல், போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மேக்ரானின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே பாரிஸில் தேவாலயத் தாக்குதலானது நிகழ்ந்துள்ளது என விசாரணையில் தெரியவந்தது. மேலும், இது போன்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனால், பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதமாக 7,000 பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். மறுபுறம் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கும் பகுதிகளைத் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இம்மானுவேல் மேக்ரான்

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அரபு செய்தி ஊடகமான அல் ஜசீரா-வுக்கு (Al Jazeera) அளித்த நேர்காணல் ஒன்று நேற்று (சனிக்கிழமை) ஒளிபரப்பானது, அதில் பேசிய அவர்,``பத்திரிகையில் வெளியான கேலி சித்திரத்தால் புண்பட்ட இஸ்லாமியர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். அதே நேரத்தில் பிரான்ஸ் அரசு அந்த கேலி சித்திரத்தை ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை. கருத்துத் தெரிவிப்பதும், எழுதுவதும் கார்ட்டூனைகளை வெளியிடுவதும் ஊடகங்களின் கருத்து சுதந்திரத்துக்கு உட்பட்டது. அதனால், எனது நாட்டில் இது போன்ற உரிமைகளைப் பாதுகாப்பது என் கடமையாகும். அதேபோல், பிரான்ஸ் இஸ்லாமியர்களை எதிர்க்கும் நாடல்ல!

அதேநேரம், தீவிரவாதிகளின் இந்த இரக்கமற்ற தாக்குதல் செயலானது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றமாகும். தீவிரவாதத்துக்கு எதிரான போரட்டத்திலிருந்து, பிரான்ஸ் ஒருபோதும் பின்வாங்காது’’ என்று தெரிவித்துள்ளார்.

தாக்குதலின்போது போலீஸாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட கொலையாளி, தற்பொழுது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சந்தேகத்தின் அடிப்படையில் கொலையாளியுடன் தொடர்பிலிருந்த இருவரைக் கைதுசெய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கொலையாளி பாரிஸ் நகரில் ஊடுருவியது குறித்த விபரங்களை, அவரது பயண விபரங்களின் மூலமாகவும், தொலைபேசி அழைப்புகளின் வாயிலாகவும் போலீஸார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/international/france-will-never-back-down-from-the-war-on-terror-emmanuel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக