Ad

சனி, 28 நவம்பர், 2020

கோவிட்-19: ஐந்தில் ஒருவருக்கு மனநல பாதிப்புகள் ஏற்படலாம்... எப்படி எதிர்கொள்வது?

மனநலப் பிரச்னை உள்ளவர்களுக்கான ஆலோசனை மையங்களின் தொலைபேசிகள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இமெயில்கள் வந்து குவிகின்றன. கோவிட்-19 இன்னும் என்னென்ன பிரச்னைகளையும் ஆச்சர்யங்களையும் வைத்துள்ளதோ என்று எண்ணும்படியாக மனநலமும் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுகிறது என்பது குறித்த புள்ளிவிபரங்கள் அண்மையில் வந்துள்ளன.

கோவிட்-19 பாதித்தவர்களில் 20 சதவிகிதம் பேருக்கு மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, ஐந்தில் ஒருவருக்கு பிரச்னை ஏற்படலாம்.

Mental Health problems

ஏதாவது ஒரு மனநோய்க்கு ஏற்கெனவே சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால் அந்தப் பிரச்னை வீரியம் கொண்டு மீண்டும் எழுவதற்கு இது ஒரு வாய்ப்பாகவும் இருக்கலாம். அல்லது புதியதாக ஒரு மனநோயினுடைய வெளிப்பாடாகவும் இருக்கலாம் என்றும் அந்த முடிவுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. ‌அமெரிக்காவில் 60,000-க்கும் மேற்பட்ட கோவிட்-19 பாசிட்டிவ் நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

கோவிட்-19 தாக்கியவர்களுக்கு மனநலப் பிரச்னைகள் ஏன் உண்டாகின்றன?

இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் மூளையையும் நரம்புகளையும் பாதிப்பதாலும் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட தீவிர மனஅழுத்தத்தாலும் மனநலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஏற்கெனவே மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்துதல் மற்றும் பொதுமுடக்கம் போன்றவையும் மனநல பாதிப்புகள் அதிகரிக்கவும் வெளிப்படவும் காரணமாகின்றன.

covid-19

என்னென்ன பிரச்னைகள் ஏற்படலாம்?

கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 90 நாள்களுக்குள் நான்கு விதமான மன பாதிப்புகள் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

1. மனப்பதற்றம் (anxiety)

கவலையுடன்கூடிய அதீதமான பதற்றம். நிச்சயமற்ற முடிவைப் பற்றிய அதிகப்படியான நினைவு. அமைதி இழந்து ஒருவிதமான பீதியுடன் காணப்படுதல். மனப்பதற்ற நோய்க்கான அறிகுறிகள்.

2. மனச்சோர்வு (depression)

உற்சாகமின்றி மந்தமான மனநிலையுடன் இருப்பது.

3. உறக்கமின்மை (insomnia).

தூக்கத்தில் விருப்பமின்மை, தூக்கமின்மை, ஆழ்ந்த உறக்கமின்மை, குறைவான தூக்கம். இதனால் விழித்திருக்கும் நேரத்தில் சரியாகச் செயல்பட முடியாததன்மை.

4. மறதி நோய் (dementia)

மிகுந்த மனச்சோர்வால் உண்டாகும் ஞாபக மறதி.

5. இறுதியாகத் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளுதல் (suicide)

இவற்றுள் என்ன விதமான பாதிப்பு, எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதைப் பொறுத்து முழுமையாகக் குணமடையும் வாய்ப்புகளும் உண்டு. தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டிய பிரச்னைகளும் உள்ளன.

கோவிட்-19 பாதிப்பால் ஏற்படும் மனநலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மனநல மருத்துவர்களால் மருந்து, மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. கொரோனா தொற்றுக்கான சிகிச்சையைத் தொடர வேண்டியதும் முக்கியம். முக்கியமாக, சத்தான சரிவிகித உணவு, நல்ல தூக்கம் ஆகியவை மிக அவசியம்.

வீட்டிலிருந்து வேலை செய்தாலும், வீட்டில் இருந்தாலும் நமக்கென்று காலையில் எழுவது, குளிப்பது, உணவு உண்பது, வீட்டு வேலைகளைச் செய்வது, நடைப்பயிற்சி, புத்தகங்கள் வாசிப்பது என்பது போல ஓர் ஒழுங்கு முறையைப் பின்பற்றுவது அவசியம். நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வதும் மனநலத்துக்கு அவசியம்.

மனதுக்கு ஆறுதல் அளிக்கும் இசையைக் கேட்பது, பாடுவது, யோகா மற்றும் தியானப் பயிற்சிகளும் நல்லது. எதிர்பார்ப்பு இல்லாமல் மற்றவருக்கு உதவி செய்வது நமது மனபலத்தை அதிகரித்து மனநோய்களில் இருந்தும் பாதுகாக்கும்.

Dr. Jayashree Sharma

வராமல் எப்படித் தடுக்கலாம்?

கொரோனா பெருந்தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மனதளவில் தைரியத்தை அளித்தால் மனநலப் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். நோயின் ஆரம்ப அறிகுறி தோன்றும்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது தீவிரமான நோய் பாதிப்புக்கு உள்ளாவதிலிருந்து காப்பாற்றும்.

தமிழகத்தில் லாக்டௌன் காலத்திலும், தளர்வுகள் அறிவித்த பிறகும்கூட மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பாதித்த சிலர் தற்கொலை செய்துகொண்டதையும் கேள்விப்படுகிறோம். கொரோனா பாதிப்பால் மனநலப் பிரச்னைகள் ஏற்பட்டவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு சிறப்பு ஆலோசனை மையங்களையும் அரசு திறந்துள்ளது.

Mental health and physical health

Also Read: கோவிட்-19: இந்தியா முதல் அலையிலிருந்து மீண்டுவிட்டதா?

கோவிட்-19 பாதிப்பால் ஏற்படும் மனநலப் பிரச்னைகளின் தீவிரத்தை நாம் இன்னும் முழுவதுமாகக் கணிக்கவில்லை என்கிறது அறிவியல் உலகம்.

இந்தப் பூமியில் உள்ள அனைவருமே ஒரே அணியாகத் திரண்டு கொரோனாவையும், அதைத் தொடர்ந்து ஏற்படும் உடல், மனநலப் பிரச்னைகளையும் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம் என்ற வலுவான எண்ணம் நமக்குத் தேவை. திடமான மனது, திடமான உடலைத் தரும்.



source https://www.vikatan.com/health/healthy/how-to-tackle-mental-issues-which-occur-due-to-covid-19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக