Ad

வெள்ளி, 27 நவம்பர், 2020

திருநள்ளாறு : பந்தக்கால் முகூர்த்தத்தோடு தொடங்கியது சனிப்பெயர்ச்சி விழா!

காரைக்கால்  அருகேயுள்ள திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளதையொட்டி நேற்று  பந்தல்கால் முகூர்த்தம் சிறப்பாக  நடைபெற்றது.

சனிப்பெயர்ச்சி விழா

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சந்ததிகொண்டு  அனுக்கிரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சனிப்பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறுகிறது. அப்போது இக்கோயிலில் திரளான பக்தர்கள் நாடெங்குமிருந்து வந்து  கலந்துகொண்டு தரிசனம் செய்வர்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 27 -ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைகிறார். அப்போது  இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்து  சிறப்பு ஆராதனை செய்யப்படும்.

சனிப்பெயர்ச்சி நாள் முதல் தொடர்ந்து 2 மாதங்கள் சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் வருகைதந்து  தரிசனம் செய்வர்.

சனிப்பெயர்ச்சி விழா  தொடங்குவதற்கான பூர்வாங்கப் பணிகளின்  தொடக்கமாக பந்தல்கால் முகூர்த்தம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

சிவாசார்யர்கள் பந்தல்காலுக்கு அபிஷேக, ஆராதனைகளை செய்து வளாகத்தில் பந்தக்கால் நடப்பட்டது. இந்நிகழ்வில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியரும், கோயில் நிர்வாக அதிகாரியுமான ஆதர்ஷ், தருமபுர ஆதின கட்டளை  கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பல பிரமுகர்கள்  கலந்துகொண்டனர்.

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா

நிகழ்வின் நிறைவில் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் கமலக்கண்ணன், "வழக்கமாக சனிப்பெயர்ச்சி விழாவுக்கு முன்பாகச் செய்யக்கூடிய பணிகள் போன்று இந்தாண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது கொரோனா தொற்றுள்ள காலமாக இருப்பதால்,   விதிகளுக்குட்பட்டு சனிப்பெயர்ச்சி நாளில் தரிசனத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

சிறப்பு ரயில், பேருந்து போக்குவரத்துகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். நளன் தீர்த்தக் குளத்தில் பக்தர்கள் நீராடவும், பக்தர்களுக்கான குடிநீர், உணவு, கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை சிறந்த முறையில் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்றார்.



source https://www.vikatan.com/spiritual/temples/sanipeyarchi-vizha-started-in-thirunallar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக