Ad

சனி, 28 நவம்பர், 2020

சென்னை: ஈசிஆர் பங்களா; ஆடம்பரமாக நடிக்க ஆடி கார்! - போலி பிசினஸ்மேன்கள் சிக்கியது எப்படி?

சென்னை வேளச்சேரி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளர் தில்லைகோவிந்தன், சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் புகாரளித்தார். அதில், சென்னையில் உள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் கார் லோன்களை மோசடியாகப் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாதல் ஒரு கும்பல் 2 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். மத்தியக் குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோரின் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

பாலவிஜய்

துணை கமிஷனர் முனைவர் கே.சரவணக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்தது. அதன்பேரில் 27-ம் தேதி அதிகாலையில் சென்னை நீலாங்கரை, முட்டுக்காடு பகுதிக்கு தனிப்படை போலீஸார் சென்றனர். அப்போது அங்கு சொகுசு பங்களாவில் பதுங்கியிருந்த நீலாங்கரையைச் சேர்ந்த முகமது முசாமில் (34), நீலாங்கரைச் சேர்ந்த அய்யாதுரை (32), கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பாலவிஜய் (35) ஆகிய 3 பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கைதானவர்கள் ஆடம்பரமாக வாழ்வதைப் போல நடிக்க கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை, முட்டுக்காடு, பனையூர் பகுதியிலிருக்கும் சொகுசு பங்களாக்களை வாடகைக்கு எடுத்திருக்கின்றனர். பின்னர், அந்தப் பங்களாக்கள் முன் விலை உயர்ந்த சொகுசு கார்களை நிறுத்தி, வங்கி அதிகாரிகளையும் புரோக்கர்களையும் நம்ப வைத்திருக்கின்றனர். அதனால் இவர்கள் மூன்று பேரையும் தொழிலதிபர்கள் என நம்பி, வங்கிகள் இவர்களுக்குக் கோடி கணக்கில் கடன்களைக் கொடுத்திருக்கின்றன.

Also Read: `புல்லட் புரூப் கார் வாங்கியதில் மோசடி?!'- கேரள டி.ஜி.பி-யைச் சுற்றும் சர்ச்சை

முகமது முசாமில்

இவர்கள், நுங்கம்பாக்கத்தில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவின் கிளை, எழும்பூரில் உள்ள விஜயா வங்கிக் கிளை, வேளச்சேரி, திருவான்மியூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளைகள், அடையாறு யுகோ வங்கிக் கிளை, ஆழ்வார்பேட்டையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் கடன் வாங்கி மோசடி செய்திருக்கின்றனர். புரோக்கர்கள் மூலம் வங்கியில் உள்ள அதிகாரிகளை அணுகியிருக்கின்றனர். கடன் வாங்குவதற்கு தங்களது வருமானம் அதிகளவில் இருப்பது போன்று போலியான வருமான வரி தொடர்பான ஆவணங்களைத் தயாரித்து வங்கிகளில் கொடுத்திருக்கின்றனர். அதை உண்மையென நம்பி வங்கிகளும் கடன்களை கொடுத்திருக்கின்றன.

மேலும், வாகனப் பதிவிலும் இவர்கள் நூதனமுறையில் மோசடி செய்திருக்கின்றனர். வாகனங்களை சட்டவிரோதமாக வாடகைக்கும் விட்டிருக்கின்றனர். வங்கியில் கொடுத்த செல்போன் நம்பர்கள், முகவரிகளைப் பலதடவை மாற்றியிருக்கின்றனர். வாகனக் கடன் தொகையைத் திரும்பச் செலுத்தால் இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாகியிருக்கின்றனர். இந்தக் கும்பல் 3.86 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிக்கு இழப்பீடு செய்திருக்கிறது. வங்கிகளில் பெற்ற வாகனக் கடன்கள் மூலம் ஆடி, பிஎம்டபுள்யூ போன்ற சொகுசு கார்களை வாங்கிப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். கைதான 3 பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார்களை வங்கிகளிடம் ஒப்படைத்திருக்கிறோம்.

மோசடி

வங்கி மேலாளர்கள், வாகனக் கடன்களை கொடுக்கும்போது தனிக்கவனம் செலுத்துவதோடு ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு வழங்க வேண்டும்" என்றனர்.

வாகனக் கடன் மோசடியில் ஈடுபட்டவர்களை துரிதமாக செயல்பட்டு பிடித்த இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்.ஐ- பிரபாகரன், தியாகராஜன், தலைமைக் காவலர்கள் ஸ்டாலின் ஜோஸ், ஜெகநாதன், குமார், முதன்மை காவலர் நிஷா, காவலர்கள் சுந்தர், கவியரசன் ஆகியோரை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டினார்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-three-over-car-loan-fraud

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக