Ad

வெள்ளி, 27 நவம்பர், 2020

மதுரைக்கு வந்து சாப்பிட்டுப் பாருங்க மக்களே... வாசகரின் அனுபவம்! #MyVikatan

மதுரையில குட்டிக் குட்டித் தெருக்கள்லகூட சுவைமிக்க சாப்பாட்டுக் கடைகள் இருக்கு. அதனால, இங்க சொல்லப்போற லிஸ்ட்ல நான் எதையாச்சும் மிஸ் பண்ணிட்டா உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு மன்னிச்சிருங்க!

முதல்ல ஸ்வீட்லருந்து ஆரம்பிப்போம். இது நம்ம பாரம்பர்ய ஸ்வீட்டு... அதிரசம்! தானப்ப முதலி தெருவுலயிருந்து வடக்கு ஆவணி மூலவீதி தொடங்கற முக்குல ஒரு கடை இருக்கு. அந்தக் கடையில அதிரசம் திங்கணும்... சும்மா டரியலா இருக்கும்! அந்த வெளிப்புற மொறுமொறுப்பு... ஆனா கடிச்சதும் உள்ள அம்புட்டு மிருதுவா இருக்கும். ஒன்ன எடுத்து திங்க ஆரம்பிச்சா அங்கயே நின்னு நாலஞ்ச திண்ணாத்தான் மனசு ஆறும்!

அதிரசம்

காலை டிபனுக்கு, காளவாசல் தேவகி ஸ்கேனுக்கு எதிர் சந்துல நேரா போய் எஸ்.எஸ் காலனில ஸ்டேட் பேங்க்குக்கு சைடு ரோட்டுல போனா 'கெளரி'ன்னு ஒரு கடை இருக்கு.

பைபாஸ் ரோடு 'கெளரிகிருஷ்ணா' இருக்கில்ல... இது குட்டிக்கடை. இட்லி, தோசை, பூரி, பொங்கல்னு எல்லாமே நல்லாருக்கும். அங்க என்ன ஸ்பெஷல்னா... அந்த சாம்பார்ர்ர்ர்ர்ர்... செம்மையா இருக்கும். கையில வாங்கிங் குடிக்கலாம். அதோட, டெய்லி ஒரு ஸ்பெஷல் சட்னி அரைப்பாங்க... எல்லாமே கெத்து காட்டும்.

பெரும்பாலும் மதுரையில காலை நேர டிபனை கடையில சாப்பிடுற வழக்கம் குறைவு. அதனால, அங்கங்க இருக்குற டிபன் கடைகளும் பெரும்பாலும் சைவக்கடைகளாதான் இருக்கும்.

11 மணிக்கெல்லாம் மத்தியானச் சோத்த ரெடி பண்ணிருவாய்ங்க. 'ஆறுமுகம் மெஸ்'னு ஒரு கடை தல்லாகுளம் பெருமாள் கோவில் கிரவுண்டுல ஓரமா இருக்கு. முன்னல்லாம் ரோட்டுக்கடையா இருந்தது. இப்போ பக்கத்துலயே நல்ல ஹோட்டலா பெருசாக்கி நடத்துறாங்க. அங்க மட்டன் பிரியாணி நல்லாருக்கும். நாட்டுக்கோழியோட சேத்து சொலட்டிக்கிட்டு அடிக்கலாம்.

பக்கத்துலேயே அம்மா மெஸ்ஸு, குமார் மெஸ்ஸு எல்லாம் இருக்கு. அங்க போறதுக்குனே ஒரு கூட்டம், போயிக்கிட்டே இருக்கும்.

அடுத்து கீழவெளி வீதி 'அம்சவள்ளி பிரியாணி'. கொஞ்சம் குழைவா இருக்கும். அங்க விற்கிற 'கோழிச் சில்லரை' குழம்பு அயிட்டத்துக்கு 20 பேர் எப்பவும் வரிசையில நிப்பாய்ங்க. பிரியாணி மதியம் 2:30-க்கெல்லாம் காலியாகிடும். அங்க ஒரு புரூட் மிக்சர் விப்பாய்ங்க... பிரியாணிய ஒரு ஏத்து ஏத்திட்டு ஒரு மிக்சர போட்டோம்னா... ஃபினிஷிங்குக்கு வந்துரும்.

அப்புறம் காமராஜர் சாலையில 'கிருஷ்ணன் மெஸ்'னு ஒரு கடை இருக்கு. அங்க நல்லி பிரியாணி மெரட்டலா இருக்கும். அந்த நல்லி எலும்புல கொத்தா ஒட்டி இருக்குற கறி, அப்புடியே நல்லி எலும்ப பிடிச்சு ரெண்டு ஆட்டு ஆட்டுனா பூவா உதிரும் பாத்துக்கங்க. அங்க புறா, காடை, முயல்னு எல்லா சைட்டிஷ்ஷும் பட்டயக் கெளப்பும்.

நான் சொன்னா எல்லாக் கடையிலயுமே சீரகசம்பா பிரியாணிதேன். இங்க பாஸ்மதி பிரியாணிய பெரும்பாலும் யாரும் விரும்ப மாட்டாய்ங்க. 'ராவுத்தர் கடை'யில மட்டும் அது கிடைக்கும்.

பிரியாணி

மதியச் சாப்பாட்டுக்குன்னே சில கடைகள் இருக்கு. தமிழ்சங்கம் ரோடு 'ஜானகிராம்'ல அயிரமீன் குழம்பு வாங்கிச் சோத்துல குழைச்சு அடிச்சோம்னா எம்புட்டு திங்கிறோம்னே தெரியாம உள்ள எறங்கும். மூணு தடவ கொழம்ப ஊத்தி தின்னுப்புட்டு, மறுக்கா சோத்த வாங்கி அந்த எலும்பு ரசத்த ஊத்திப் பிசைஞ்சு... அம்புட்டு ருசி. கரண்டி ஆம்லேட்டோட வச்சு இழுத்தோம்னா எப்புடி இருக்கும்?! ஆங் அப்டி இருக்கும்!

இதெல்லாம் மக்களுக்குத் தெரிஞ்ச கடைங்கதேன். சில கடைங்க சிலருக்கு மட்டுமே தெரிஞ்சது. அதுல ஒண்ணுதேன் காளவாசல் தேவகி ஸ்கேனுக்கு பக்கத்துல வெளிய தெரியாத அளவுக்கு அடக்கமா ஒரு குட்டிக்கடை. 'லெட்சுமி மெஸ்னு ஒரு பழைய ஸ்டேண்டிங் போர்டு இருக்கும். அங்க சோத்துக்கு குடல் குழம்பு, கறிக்குழம்பு, மீன் குழம்பு, நாட்டுக்கோழிக் குழம்புனு பட்டயக் கெளப்பும். ஒவ்வொண்ணையும், பெருமாள் கோயில் தீர்த்தம் மாதிரி கைய குழிவா வெச்சு வாங்கிக் குடிக்கலாம். சோத்துல குழம்புகள குதூகலமா வெளாட விட்டு எடுத்து, செங்கச்சூளைல மண்ண அப்புன மாதிரி ஒரு கட்டு கட்டலாம். சைட் டிஷ்லாம் தரம்ம்ம்மா இருக்கும். ஒரு ஊறுகா வைப்பாய்ங்க... அதுல என்ன மாயம் செய்வாய்ங்களோ... அம்புட்டுப் பயலும் கறிக்கொழம்புக்கே ஊறுகாயத் தொட்டு வெளுப்பாய்ங்க!

வெத்தலப்பேட்ட பக்கத்துல 'நூரி மெஸ்'னு ஒரு பாய் கடை. நெய் சோறும் குடல் குழம்பும் அந்தரா இருக்கும். வடக்கு ஆவணி மூலவீதியிலருந்து மீனாட்சியம்மன் கோவிலுக்கு போற சந்துகள்ல ரெண்டாவது சந்துல ஒரு செட்டியார் கடை இருக்கு. செட்டிநாட்டு ஸ்டைல்ல பயமுறுத்திவிடுவாய்ங்க. அங்க புறா கறி சாப்பிட்டுப் பாருங்க.

கீழவாசல்ல 'அருளானந்தம்'னு ஒரு கடை இருக்கு. சோத்துச் சொர்க்கம்யா... திண்ணுட்டு அங்கனயே ஓரமா எடம் கிடைச்சா தூங்கிரலாம்னிருக்கும். சைட்டிஷ்லாம் மயக்குவானுக!

சைவ சாப்பாட்டுக்கு பைபாஸ் ரோடு 'லட்சுமி மெஸ்', டவுன்ஹால் ரோடு பக்கத்துல 'சபரீஸ்', காமராஜர் சாலை 'சபரீஸ்'னு பெரிய கடைகளும்... இன்னும் இருக்கு! சைவச் சாப்பாட்டோட வெங்காய பக்கோடா வெச்சு சாப்பிடுறது மதுரக்காரனுக வழக்கம்.

நாட்டுக் கோழி குழம்பு

மத்தியானத்துலேயே பெரும்பாலான ஹோட்டல்ல புரோட்டாவும் குஸ்காவும் கிடைக்கும். இருந்தாலும் டின்னர் ஸ்பெசல்ல அத தனியா சொல்றேன். இப்ப சிறுதீனி மற்றும் டீ, காபி, கூல்ட்ரிங் பக்கம் போவோம்.

தல்லாகுளம் 'விசாலம் காபி'ல காபி சாப்பிட்டுப் பாருங்க. சாப்ட்டு அரைமணி நேரமானாலும் அந்தக் காபி கசப்பு தொண்டைல நிக்கும். அப்பிடி ஒரு டேஸ்ட்டு! அடுத்து தண்ணி குடிக்கக்கூட மனசு வராது.

ரயில்வே ஸ்டேசனுக்கு எதிர்ல 'பிரேம விலாஸ்'னு ஒரு மிட்டாய் கடை. ஸ்வீட் கடைதான், அந்தக் காலத்துலருந்து இருக்கிறதால மிட்டாய்க்கடைன்னே வழக்காகிடுச்சு. தாமரை இலைல அப்டியே பொசுக்கப் பொசுக்க(சுடச்சுட) அல்வா எடுத்துப் போட்டு குடுப்பாய்ங்க. ரெண்டா பிச்சு வாய்ல போட்டா அப்டியே கரையும்யா! அங்க விக்கிற ஸ்பெசல் மிச்சர்தான் இங்க பாதி பேர் வீட்ல சோத்துக்கு வெஞ்சணம்(சைட் டிஷ்). அந்த அல்வாவ அங்கனயே நின்னு திங்கிற கூட்டமே எப்பயும் 10 பேரு இருப்பாய்ங்க. அல்வா கடை வாசல்லயே மல்லியப்பூ வச்சு நாலஞ்சு அக்காக்க விக்கும்ங்க... எம்புட்டு நேக்கா யாவாரம் பண்ணுவாய்ங்க தெரியுமா..?! `ஏப்பா தம்பி அல்வா மட்டுமா வாங்கிட்டுப்போற... வீட்டுக்காரப்புள்ளைக்கி பூ வாங்கிட்டுப்போய்யா...'ன்னு அதுக கேட்கும்போதே எல்லாருக்கும் வீட்டுக்காரம்மா நெனப்பு வந்துடும்.

நேதாஜி ரோட்டுல தங்க மயில் ஜுவல்லரிக்கு பின்னாடி 'நர்சிங்'னு ஒரு ஸ்வீட் கடை இருக்கு. நார்த் இந்தியன் ஸ்வீட்டுகள் அங்க மட்டுந்தேன் திங்குறது. கச்சோரியும், மசால்பூரி, பானிபூரியும் அங்க நல்லாருக்கும்.

சாயங்காலத்துல கோவில சுத்தி நிறைய ஸ்நாக்ஸ் விப்பாய்ங்க. 'ஷப்னம்' வாசல்ல விக்கிற காரப்பொரிக்கு காத்துக் கெடக்கலாம்யா. பருப்பு போளி, பச்சப்பயறு, காரப்போளி, சுண்டலு, உளுந்தம்பருப்புன்னு எல்லாத்தையும் அவிச்சு விப்பாய்ங்க. தள்ளுவண்டிகள்ல முள்ளுமுருங்கக்கீர வடை அப்பப்ப போட்டுத் தருவாய்ங்க. ரெண்டு ரூவா வடைக்கெல்லாம் சொத்தெழுதி வைக்கலாம்யா!

மதுரை

ஜிகர்தண்டா... மதுரையோட அடையாளமாவே மாறிப்போச்சு. விளக்குத்தூண் ஃபேமஸ் ஜிகர்தண்டா கடை ஒண்ணுதேன் இருக்கும் அப்பல்லாம். இப்ப அங்கங்க நிறைய இருக்கு. வெளியூர்கள்லயும் இருக்கு. நாங்க பெரும்பாலும் ஜிகர்தண்டாவ... மஞ்சணக்காரத்தெரு முக்குல ஒரு பாய் விக்கிறாப்புள... அங்கதான் சாப்பிடுறது. டேஸ்ட்டு நம்மள திண்ணுரும்!

முனிச்சாலைலயிருந்து செயின்ட் ஜோசப் கேர்ள்ஸ் ஸ்கூல் போற வழியில போஸ்ட்டாபீஸு பக்கத்துல பத்திரீசியார் ஸ்கூலுக்கு முன்னாடி ஒரு பொட்டிக்கடைல `க்ரேப்'னு கேட்டீங்கன்னா ஒரு ஜூஸ டம்ளர்ல மோந்து குடுப்பாய்ங்க. யோவ்வ்வ்வ் அதெல்லாம் குடிச்சுப் பாக்கணும்யா!

முனிச்சாலையில சிக்னல் பக்கத்துலயே புகழ்பெற்ற 'கோவிந்தராஜ் பருத்திப்பால் கடை' இருக்கு. ஒரு டம்ளர் குடிச்சா பசியாறிடும்!

டின்னர மதுரையில கொண்டாடலாம்யா! பரோட்டா மதுரயோட ஊர் உணவு. கொத்துப் பரோட்டாவ மியூசிக்கோட கொத்துறது எங்கூர்ல ஆரம்பிச்சதுதேன். பெஸ்ட் பரோட்டான்னா அண்ணா நகர் நியூ மாஸ் ஓட்டல் பரோட்டாதான். அங்க போடுற மடக்கு பரோட்டாவ பிச்சம்னா அப்பிடியே பூவா பிரியும் பாத்துக்கங்க. சால்னா அங்க சுமாராத்தான் இருக்கும்.

அண்ணா பஸ் ஸ்டாண்ட்லருந்து ஆவின் போற வழியில இருக்க' கூரைக்கடை'யில உக்காந்து சாப்பிட ரெண்டு டேபிள்தான் இருக்கும். ஆனா அந்த நைட்டுக் கடையில கூட்டம் அம்மும். சுக்கா, குடலு , ரத்தப்பொரியலு, நாட்டுக்கோழி சாப்ஸு, நெஞ்சு சாப்ஸுன்னு அத்தனையுமே கெரங்கடிக்கும்.

ஆவின் பக்கத்துலயிருக்க 'பன் பரோட்டா' கடையில 3 பரோட்டா வயிறு ரொம்பீரும். தலைக்கறி ரோஸ்ட்லாம் தெறிக்கவிடும். குழம்பெல்லாமே அடிச்சுத் தூக்கும்.

பரோட்டா

தெற்குவாசல் 'சுகன்யா'ல பரோட்டாவ வீசி வெளாடுவாய்ங்க. டேஸ்ட்டும் அந்தல சிந்தலயா இருக்கும். க்ராஸ் ரோடு 'கீர்த்தனா' ஓட்டல்லாம் வெரட்டி வெரட்டி திங்கலாம். கரிமேடு மீன் மார்க்கெட் பக்கத்துல ஒரு குட்டிக்கடையில விருதுநகர் பொரிச்ச புரோட்டா கெடைக்கும். நொறுக்கிப்போட்டு கொழம்புகள கொழச்சு அடிச்சோம்னா விருதுநகர்லயே போய் தின்னுட்டு வந்த மாதிரி இருக்கும்.

சைவக்கடைகளும் நைட்ல களை கட்டும். கீழவாசல் 'நாகலெச்சுமி அனெக்ஸ்', 'ரேவதி டிபன் சென்டர்'லயெல்லாம்... வெண்பொங்கல், தக்காளிப்பொங்கல்(வெரைய்ட்டி ரைஸ செளராஷ்ட்ரா கடைகள்ல அப்பிடித்தான் சொல்லுவாய்ங்க), புளியோதர, லெமன்சாதம்னு எல்லா சாதமும் டின்னருக்குக் கிடைக்கும். இந்த அயிட்டங்கள்ல செளராஷ்ட்ரா கைப்பக்குவத்த அடிச்சுக்க முடியாது. அங்கயெல்லாம் போனா மிலிட்ரி முறைதான். எல்லா வெரெய்ட்டியும் ஒவ்வொரு வாய் சாப்பிட்டாலே போதும்னு எல்லாத்தையும் ஆர்டர் பண்ணி சுத்துல விட்டு சாப்பிடுவோம். பில்ல சரியா பங்கு போட்டுக்குவோம்.

மதுரையின் ரோட்டுக்கடைகள எண்ண‌வே முடியாது. அதுல ஒண்ணு, ரெண்ட சொல்றேன். அண்ணா நகர் 'அக்கா கடை'ன்னு ஒரு கடை 40 வருஷமா இருக்கு. ஒரு மரத்தடில ஆரம்பிச்சது. இப்பவும் அதே மரத்தடில ஒரு வீட்டயே ஓட்டலா மாத்தி நடக்குது. அங்க முட்ட சப்பாத்திக்கொத்து ஒண்ணு போடுவாய்ங்க. ருசி அள்ளும்.

பைபாஸ் ரோட்டுல கேஎஃப்சி இருக்கு. அது நமக்கு வேணாம். அதுக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு அக்கா கடை போட்டிருக்கு... முட்டதோசயெல்லாம் பத்துக்கும் மேல தின்னுட்டு அடுத்த தோசைக்கு தட்ட நீட்டிட்டே நிப்போம். அந்தக்கா போதும் போடான்னு வய்யும்!

ஆம்னி பேருந்து நிலையம் - மதுரை

யானைக்கல்தேன் மதுரைக்கு தூங்கா நகர்னு பேர் வாங்கிக்கொடுத்த இடம். அங்க 'பரமேஸ்வரி' , 'ராஜேஸ்வரி'ன்னு ரெண்டு கடை எதிரெதிரா இருக்கு. சோறு, சாம்பார், ரசம், மோர் பாயசம்னு நைட்டு 3 மணிக்கும் சாப்பிடலாம். வெங்காயக்குடல் அங்க ரொம்ப நல்லாருக்கும்.

அடுத்து 'சுல்தான் கடை'. நைட்டு 3 மணி வரை பிரியாணி, பரோட்டா, சைட்டிஷ்னு எல்லாம் கிடைக்கும். வெளியூர்லருந்து சாப்பிடாம லேட்டா சிக்குள்ள வர்றவங்களுக்கு அதுதான் புகலிடம்.

நிறைய சொல்லாம விட்டது போலத்தேன் இருக்கு. இன்னொரு நாள்ல விட்டத லிஸ்ட் பண்ணிச் சொல்றேன். கொரோனா லாக்டௌன் முடிஞ்சு உலகம் நார்மல் மோடுக்கு வந்ததும் மதுரைக்கு வந்து சாப்பிட்டுப் பாருங்க மக்களே!

- நிதர்சன்



source https://cinema.vikatan.com/food/my-vikatan-story-about-madurais-special-foods

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக