Ad

சனி, 27 ஜூன், 2020

புதுக்கோட்டை: மகனைக் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய தந்தை! - மதுப்பழக்கத்தால் விபரீதம்

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே உள்ள மேல்நிலைப்பட்டியைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன் (54). பாலச்சந்திரனின் இரண்டாவது மகன் அருண்குமார் (25). கார் மற்றும் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். மதுப்பழக்கத்துக்கு அடிமையான அருண்குமார் தினமும் மது குடித்துவிட்டு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சென்னையில் வேலை செய்து குடும்பத்தைக் கவனித்த வந்த பாலச்சந்திரன், தற்போது ஊரடங்கு என்பதால், சொந்த ஊருக்கு வந்துவிட்டார். பாலச்சந்திரன் வீட்டிலேயே இருக்கும் நிலையில், அருண்குமார் கடந்த சில தினங்களாகவே மது குடித்துவிட்டு வந்து பாலச்சந்திரனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

Also Read: ஊரடங்கில் சிகரெட், மதுப்பழக்கம் குறைந்திருக்கிறதா?! #LongRead

இருவரையும் சமாதானப்படுத்துவதுதான் பாலச்சந்திரனின் மனைவி இந்திராகாந்திக்கு வேலையாக இருந்துள்ளது. சமாதானம் செய்து ஓய்ந்துபோன இந்திரகாந்தி, கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்தநிலையில்தான், மாடுகள் தொடர்ந்து கூக்குரல் இடவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வீட்டைப் பார்த்தனர். வீட்டின் உள்பக்கம் பூட்டி இருந்துள்ளது. உடனே, இதுகுறித்து இந்திராகாந்திக்கும் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.

உடனே வீட்டிற்கு வந்து ஜன்னல் வழியாகப் பார்த்த இந்திராகாந்திக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. மகன் ரத்தவெள்ளத்தில் இறந்துகிடக்க, கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் விசாராணையில்,``சம்பவத்தன்று பாலச்சந்திரனுக்கும் அருண்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மது குடித்து குடித்து வீணாகிவிட்டானே என்ற ஆத்திரத்தில் பாலச்சந்திரன் அருண்குமாரை கட்டையால் தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக அடித்துள்ளார்.

தந்தை, மகன்

இதில், மயக்கமடைந்து விழுந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். மூச்சு நின்று போனதை அறிந்த பாலச்சந்திரன், ஆத்திரத்தில் பெற்ற மகனையே அடித்துக் கொன்று விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் உடனே பாலச்சந்திரன், வீட்டைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்'’ என்று தெரியவந்துள்ளது. மகனைக் கொன்றுவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுக்கோட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/father-kills-son-and-commits-suicide-in-pudukottai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக