Ad

செவ்வாய், 30 ஜூன், 2020

சீர்காழி அதிர்ச்சி: பழிவாங்க ஃபேஸ்புக்கில் போட்டோ பதிவிட்ட காதலன்! -தீக்குளித்த காதலி

காதலித்தபோது எடுத்த புகைப்படங்களைக் காதலன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டதாலும், வீடு புகுந்து தன்னையும், தன் சகோதரியையும் தாக்கியதாலும் அவமானம் தாங்க முடியாமல் இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சீர்காழியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உதயபிரகாஷ் சுபஸ்ரீ

நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் ஊராட்சி ராதாநல்லூரைச் சேர்ந்த கலியமூர்த்தி மகள் சுபஸ்ரீ. கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவந்த சுபஸ்ரீ, படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவர் அதேபகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரிஷியன் உதயபிரகாஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில், உதயபிரகாஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால், அவரிடம் பேசுவதை கடந்த சில நாள்களாகத் தவிர்த்துள்ளார். இதையடுத்து, உதயபிரகாஷ் சுபஸ்ரீயுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதனால், உதயபிரகாஷுடன் பேசுவதை முற்றிலும் நிறுத்தியுள்ளார் சுபஸ்ரீ.

Also Read: `மனைவி மீது சந்தேகம்; குடும்பத்துக்கே தீ வைத்த ஊழியர்’ -சென்னையில் தாய், மகனுக்கு நேர்ந்த கொடூரம்

இதனால் கோபமடைந்த உதயபிரகாஷ், கடந்த 24-ம் தேதி சுபஸ்ரீயின் வீட்டுக்குச் சென்று அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைத் தட்டிக்கேட்ட சுபஸ்ரீயின் சகோதரி கர்ப்பிணியான கலைமதியையும், சுபஸ்ரீயையும் உருட்டுக்கட்டையைக் கொண்டு உதயபிரகாஷ் கடுமையாகத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

இதை அவமானமாகக் கருதிய சுபஸ்ரீ தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். எரியும் தீயோடு வீட்டைவிட்டு வெளியே அலறிக்கொண்டு ஓடிவந்தவரை, அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 85 சதவிகித தீக்காயங்கள் இருந்ததால் மேல்சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உயிருக்குப் போராடியவர், இன்று காலை உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மருத்துவமனை

இதுபற்றி சுபஸ்ரீயின் உறவினர்களிடம் பேசினோம். ``சீர்காழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உடலெங்கும் தீக்காய எரிச்சல் காரணமாய் நடந்த முழு விவரத்தையும் நீதிபதியிடம் சொல்லமுடியல. தானாகவே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டதாக மட்டுமே சுபஸ்ரீ கூறினாள். அதனடிப்படையில், சீர்காழி போலீஸார் தற்கொலை முயற்சி என வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதன்பின்னர், மயிலாடுதுறையில் அனுமதிக்கப்பட்ட சுபஸ்ரீயிடம் அன்று நடந்த கொடுமையை அவளிடம் கேட்டு அதை செல்போனில் படமாக்கியுள்ளோம். இதைப் போலீஸிடம் சொல்லியுள்ளோம். சுபஸ்ரீயின் உயிரிழப்புக்குக் காரணமான உதயபிரகாஷை கைது செய்து அவன்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீரோடு கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``சீர்காழி நீதிபதியிடம் சுபஸ்ரீ கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இறந்துவிட்ட நிலையில், எஸ்.பி. உத்தரவின் பேரில் சுபஸ்ரீயை தற்கொலைக்குத் தூண்டியதாக உதயபிரகாஷ் மீது வழக்கு பதிந்து அவரைக் கைது செய்ய உள்ளோம் " என்றனர்.



source https://www.vikatan.com/social-affairs/crime/young-woman-commits-suicide-near-sirkali

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக