Ad

சனி, 27 ஜூன், 2020

உடலில் ஏற்பட்ட குறைபாடு; மன உளைச்சல்! -சந்தேகத்தில் மனைவியைக் கொன்ற முதியவர்

திருப்பத்தூர் தியாகி சிதம்பரனார் தெருவைச் சேர்ந்தவர் சேஷாசலம் (65), நகை அடகுக் கடையில் வேலை செய்துவந்தார். இவரது மனைவி மல்லிகா (60). இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகிவிட்டது. சேஷாசலமும் மல்லிகாவும் தனியாக வசித்துவந்துள்ளனர். இந்தநிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைத் தழும்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் சேஷாசலம்.

சேஷாசலம்

உடலின் பல்வேறு இடங்களிலும் வெள்ளைத் தழும்புகள் ஏற்பட்டதால், கணவரைக் காயப்படுத்தும் வகையில் மல்லிகா பேசிவந்ததாகவும், அவரைக் கவனிப்பதில்லை என்றும் சொல்கிறார்கள். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுவந்துள்ளது. ஆத்திரத்தில் இருந்த சேஷாசலம் மனைவியைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம்போல் இருவரும் தூங்கச் சென்றனர்.

Also Read: ரௌடி நட்பு; பாத்ரூமில் புதைக்கப்பட்ட கணவன்! -மஞ்சள், பினாயிலால் சிக்கிய மனைவி

இரவு 11 மணி அளவில், நல்ல உறக்கத்தில் இருந்த மனைவி மல்லிகா மீது பெட்ரோலை ஊற்றி சேஷாசலம் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. உடல் முழுவதும் தீ பரவியதால் அலறித்துடித்த மல்லிகா சிறிது நேரத்தில் மரணமடைந்துள்ளார். தகவலறிந்து, விரைந்து வந்த திருப்பத்தூர் நகர போலீஸார் கருகிய நிலையில் கிடந்த மல்லிகாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மல்லிகா

மேலும், இதுதொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்து முதியவர் சேஷாசலத்தை போலீஸார் கைது செய்தனர். ‘திருமணமாகி சுமார் 40 ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்திலிருந்தே என் மனைவியின் செயல்கள் சரியில்லை. எப்போதும் போனும் கையுமாகத்தான் இருப்பாள். எனக்கு வெள்ளைத் தழும்பு ஏற்பட்ட பிறகு என்னை அருவருப்பாகப் பார்த்தாள். மன உளைச்சலுக்கு ஆளாகி மனைவியைக் கொன்னுட்டேன்’’ என்று சேஷாசலம் வாக்குமூலம் கொடுத்ததாகக் காவல் துறையினர் தெரிவிக்கிறார்கள்.



source https://www.vikatan.com/social-affairs/crime/husband-killed-his-wife-in-tirupattur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக