Ad

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

தேனி: யானை தந்தம் கடத்தல்; குற்றவாளிகள், முன்னாள் வனத்துறை அதிகாரியிடம் விலை கேட்டு சிக்கினார்களா?!

தேனி மாவட்டம் பெரியகுளம் - வத்தலகுண்டு சாலையில் யானை தந்தங்கள் கடத்தி வரப்படுவதாக தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜ் மற்றும் பெரும்பள்ளம் வனத்துறையினர் 25 பேர் 3 குழுக்காளாகப் பிரிந்து தேனி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தேனி மாவட்ட எல்கை பகுதியில் சந்தேகிக்கும்படி கும்பலாக இருந்தவர்களை சோதனை செய்ததில் 2 யானை தந்தங்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்களை கைது செய்ய முற்பட்ட போது பெரும்பள்ளத்தை சேர்ந்த வனக்காவலர் கருப்பையா என்பவரை யானை தந்தம் விற்பனை கும்பல் அடித்து தள்ளி விட்டத்தில், அவருக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால் அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கைதானவர்கள்

இதனிடையே 2 யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற வழக்கில் தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (35), பிரகாஷ் (29), பாக்கியராஜ் (30), முத்தையா (57), உசிலம்பட்டியைச் சேர்ந்த சின்னராசு (29), சிவக்குமார் (42), தேனியைச் சேர்ந்த சரத்குமார் (30), விஜயகுமார் (60) வத்தலக்குண்டைச் சேர்ந்த அப்துல்லா (34) ஆகிய 9 நபர்களையும் கைது செய்து தேவதனப்பட்டி வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானை தந்த விற்பனையில் முக்கிய குற்றவாளியான சுரேஷ் தப்பினார். அவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட்ராஜாவிடம் கேட்டோம். ``ரகசியத் தகவலின் அடிப்படையில் தான் யானை தந்தம் கடத்தியவர்களை பிடித்தோம். அவர்கள் பல்வேறு வாகனங்களை பயன்படுத்தி தந்ததை கடத்தியுள்ளனர். நாங்கள் அவர்களை பிடிக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்தனர். இதில் ஒருவரைத் தவிர தொடர்புடைய அனைவரையும் கைது செய்து விட்டோம்.

அவர்களிடம் முழுமையாக விசாரித்தால் மட்டுமே எங்கிருந்து தந்தம் கொண்டுவரப்பட்டது. யாரிடம் விற்க முயன்றனர் என்பது தெரியவரும். மேலும் முன்னாள் வனத்துறை அதிகாரி ஒருவரிடம் குற்றவாளிகளை விலை கேட்டதாக கூறப்படும் தகவல் தவறானது. அதேபோல போடி ஜமீனில் இருந்து கொண்டுவந்து விற்க முயன்றனர் என வெளிவரும் தகவல்களும் உண்மையில்லை'' என்றார்.

கடத்தல்

இதற்கிடையே தேவதானப்பட்டி வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், கைது செய்தவர்களை அடித்து துன்புறுத்தியதாக கூறி தேவதானப்பட்டி வனச்சரக அலுவலகம் முன்பு கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து வனச்சரக அதிகாரி டேவிட் ராஜ் கைது செய்யப்பட்ட 9 நபர்களையும் உறவினர்கள் முன்பு நிறுத்தி யாரையும் அடித்து துன்புறுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்தி கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வாகனத்தில் ஏற்றி புறபட்டார். அப்போதும் உறவினர்கள் வாகனத்தை மறித்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது



source https://www.vikatan.com/news/crime/ivory-smuggling-in-theni-9-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக