Ad

வெள்ளி, 28 ஜனவரி, 2022

கேரளா: `பழங்குடி மாணவிகள் தான் டார்கெட்...' காதல் வலை வீசும் கஞ்சா மாஃபியாக்கள் -பறிபோகும் உயிர்கள்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் விதுரா, ஊருபொய்கா, விட்டிக்காவு, இடிஞாறு, ஈயக்கோடு, பெருங்கமலா போன்ற மலையோர கிராமங்கள் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டிருக்கின்றன. இந்த கிராமங்களிலிருக்கும் மக்கள் அனைவரும் விவசாய கூலி வேலைக்கு செல்பவர்கள். விதுரா மலையோர கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் கடந்த 10-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் தற்கொலை தொடர்பாக போலீஸார் விசாரணையில் இறங்கியதில், அந்த மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. கடந்த சிலமாதங்களாக மலையோர கிராமங்களில் தொடர்ச்சியாக மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது அந்தப் பகுதி மக்களை அச்சப்படவைத்தது. இது தொடர்பாக, கணக்கெடுத்து பார்த்தபோது கடந்த ஐந்து மாதங்களில் ஐந்து மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அதேபோல, இரண்டு மாணவிகள் தற்கொலைக்கு முயன்றபோது காப்பாற்றப்பட்டனர்.

இந்த தொடர் தற்கொலை சம்பவங்களின் பின்னணியில், ட்ரக் மாஃபியாக்கள் மாணவிகளை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி, பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கியதும், அதன் காரணமாக மாணவிகள் தற்கொலைக்கு தூண்டப்பட்ட தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

மலையோர கிராமங்களில் எஸ்.பி திவ்யா கோபிநாத் விசாரணை

இந்த அதிர்ச்சி ரக தகவல்கள் குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``மலையோர கிராமங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் காலையிலேயே விவசாய வேலை செய்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிடுவார்கள். குழந்தைகள்தான் வீட்டில் இருப்பார்கள். கொரோனா காரணமாக ஆன்லைனில் வகுப்புகள் நடப்பதால் மாணவிகள் வகுப்பை கவனிக்க மொபைல் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். மலைக்கிராமங்களின் அருகில் உள்ள இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமை ஆகி ட்ரக் மாஃபியாக்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் மலை கிராமங்களில் இரண்டு, மூன்று நாள்கள் சுற்றிவிட்டு, மாணவிகளின் மொபைல் எண்களை வாங்கிவிடுகிறார்கள். பின்னர் அவர்களை காதல் வலையில் வீழ்த்திவிடுகிறார்கள். மாணவிகள் உண்மையாகக் காதலிக்கின்றனர். ஆனால், அந்த இளைஞர்கள் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தொடர்பை துண்டித்துவிடுகிறார்கள். இதனால் மன உளைச்சலில் மாணவிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஆனால், அதைப்பற்றி கவலைப்படாத போதை இளைஞர்கள் அடுத்த மாணவிக்கு வலைவீச சென்றுவிடுகிறார்கள். காதல் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு இறந்தவர்கள் பட்டியலில் பள்ளி மாணவிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை உள்ளனர். அனைத்து மாணவிகளுமே நன்றாக படிக்கக்கூடியவர்கள்" என்றவர்கள், சில தற்கொலைக்கான காரணங்களை விரிவாகக் கூறினார்கள்.

Also Read: நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு; நடிகர் திலீபிற்கு எதிராக ஆடியோ வெளியிட்ட இயக்குநர்!

``இடிஞாறு வெட்டிக்காவில் 16 வயது மாணவி கடந்த நவம்பர் 1-ம் தேதி உயிரிழந்தார். போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. இறந்த மாணவி, தான் சதிக்குழியில் வீழ்ந்து விட்டதாக இருக்கலாம் முன்பு தன் தந்தையிடம் கூறியிருந்தார். அதுபற்றி தந்தை பாலோடு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பல வாரங்களுக்குப்பிறகு இடிஞாறு பகுதியைச் சேர்ந்த அலன் பீட்டர் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். ட்ரக் மாஃபியாவைச் சேர்ந்த அலன் பீட்டருக்கு உதவிய சிலரை போலீஸார் தேடிக்கொண்டிருக்கிறார்கள். பெருங்கமலப் பகுதியில் 16 வயது மாணவி கடந்த நவம்பர் 21-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவர் பெற்றோர் படிக்க வாங்கிகொடுத்த மொபைல் மூலம் தன் காதலனிடம் பேசியது தெரியவந்தது. மாணவி இறந்ததை அறிந்ததும் அவர் மொபைலில் இருந்த ஆவணங்களை அழிக்க இடிஞாறு வெட்டிக்காவு பகுதியைச் சொந்த சேம் என்ற பிபின் குமார் அங்கு வந்திருக்கிறார். அப்போது அவரை போலீஸார் கைது செய்தனர்.

பலியாகும் மாணவிகள்

டி.டி.சி படித்த 19 வயது பெண் ஒருவரும் நவம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். அந்த பெண்ணும் தனக்கு ஒரு காதலன் இருப்பதாக மட்டும் அம்மாவிடம் கூறியிருக்கிறார். அது யார் என்று இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. விதுரா ஆனப்பாறை பகுதியில் 18 வயது மாணவியை காதலித்த ஸ்ரீஜித் என்ற இளைஞன் அவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி நெருங்கியிருக்கிறான். ஆனால், அவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது அந்த மாணவிக்கு தெரியவந்துள்ளது. இதுபற்றி கேட்டபோது அந்த மாணவியை திருமணம் செய்யமாட்டேன் எனகூறி அசிங்கப்படுத்தியிருக்கிறான். இதையடுத்து அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் ஸ்ரீஜித் கைது செய்யப்பட்டார். காதல் வலையில் வீழ்த்திய மாணவியை தங்கள் பகுதிக்கு அழைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரங்களும் நடந்திருக்கின்றன. இதுவும் தற்கொலைக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. பக்கத்து வீடுகளைச் சேர்ந்த மாணவிகளிடம் தொடர்பு ஏற்படுத்திதரும்படி சில மாணவிகளை மிரட்டவும் செய்திருக்கிறார்கள் இந்த ட்ரக் மாஃபியாக்கள். சில மாணவிகளை காதலில் வீழ்த்தி, அவர்களுக்கு மொபைல் போனும் வாங்கிகொடுத்திருக்கிறார்கள். விதுரா உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துகளில் கஞ்சா மாஃபியா ஆதிக்கம் அதிகம். இவர்களால்தான் பெண்கள் சதிக்குழியில் வீழ்கிறார்கள். வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இந்த மாஃபியாக்களின் அராஜகங்களை ஒடுக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை" என்றனர்.

Also Read: நடிகர் திலீப்புக்கு வில்லனான இயக்குநர் நண்பர்! - நடிகைக்கு பாலியல் தொல்லை வழக்கில் நடப்பது என்ன?

இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏர்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி திவ்யா கோபிநாத் பழங்குடியின கிராமங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினார். இதுபற்றி நம்மிடம் பேசிய திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி திவ்யா கோபிநாத், ``நான் விசாரணை நடத்திய அளவில் அவை நேச்சுரல் டெத் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் ஒவ்வொரு விஷயங்கள் இருக்கின்றன. காதல் விவகாரங்களும் உண்டு. சில வழக்குகள் போக்‌சோவும் கூட. பழகிய ஆண்கள் ஆன்லைன் மூலம் மாணவிகளிடம் பேசி வந்துள்ளனர். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பாலியல் தொல்லை

பழங்குடி கிராமங்களில் விசாரணைக்குச் சென்ற மற்றொரு போலீஸ் அதிகாரியிடம் பேசினோம், ``இந்த பகுதிகளில் போதைப்பொருள் மாஃபியாக்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்கள்தான் மாணவிகளை காதல் என்ற போர்வையில் வீழ்த்துகிறார்கள். செட்டில்மெண்ட் காலனியில் உள்ள மாணவிகளுக்கு விழிப்புணர்வு குறைவாக உள்ளது. இளைஞர்கள் காதலிப்பதாக நடிக்கிறார்கள். ஆனால், மாணவிகள் உண்மையாக காதலிக்கிறார்கள். காதல் தோல்வியில் முடியும்போது மாணவிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்துவதற்கும், அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வெளியில் இருந்து கிராமங்களுக்கு வரும் நபர்களை அடையாளம்காணும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறோம். அதேபோல, வனத்துறையினருடன் இணைந்து ரோந்து செல்வதை அதிகரிக்க இருக்கிறோம்" என்றார்.

கஞ்சா மாஃபியாக்களை ஒழித்து மாணவிகளை காப்பாற்ற போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் மலைவாழ் மக்கள்.

Also Read: ஊட்டி: 13 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை; 54 வயது மதபோதகர் போக்சோவில் கைது!



source https://www.vikatan.com/social-affairs/crime/article-about-kerala-drug-mafias-and-tribal-girls-suicide-cases

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக