உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவில் பரவத் தொடங்கி கடந்த ஓர் ஆண்டுகளுக்கு மேலாக அடைப்படை வாழ்வாதாரத்தையும் முடக்கிப்போட்டது. அண்மை மாதங்களில் தொற்று பரவல் சற்று குறைந்துள்ளதால் சகஜமான வாழ்க்கை சூழலுக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர் பொதுமக்கள். அதுமட்டுமின்றி, மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. அதாவது, கடந்த செப்டம்பர் 1 -ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும், கட்டாயம் வர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏதும் கிடையாது என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகளுக்கு பேருந்து வழியாக பயணிக்கும் மாணவர்களுக்கு, இலவசமாக அரசு பேருந்தில் பயணம் செய்ய அனுமதியும் வழங்கப்பட்டது.
Also Read: மூன்றாம் அலை அச்சம், பள்ளிகள் திறப்பு; நமக்கான பொறுப்புகள் என்ன? - விளக்கும் மருத்துவர்கள்
அதுபோல கல்லூரிகளும் சுழற்சி முறையில் நடைபெறும் என கூறப்பட்டதோடு, 18 வயது நிரம்பிய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்து, தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. இதில், மாணவர்களின் நலனுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மகிழ்ச்சிப் பொங்க கல்வி நிலையங்களுக்கு வர துவங்கினர்.
இந்நிலையில் கடந்த 7-ம் தேதி அன்று மாலை, விழுப்புரம் சிக்னல் அருகே நடந்த காட்சி பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மீதான கேள்வியை எழுப்பியது. 'சேந்தநாடு' என பதாகை வைத்து வந்த அரசு பேருந்தில் இருக்கைகள் பயணிகளால் நிரம்பி இருக்க... பள்ளி மாணவர்கள் கூட்டமாகச் சென்று முண்டியடித்தபடி பேருந்தில் ஏறிய காட்சிகள் மனதை உலுக்கின. நிற்பதற்கும் இடமில்லாத அந்த பேருந்தில் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணித்தனர். கூட்ட நெரிசலால் அந்த பேருந்தில் ஏற முடியாமல் பல பெண்பிள்ளைகள் தயங்கியபடி கீழே நின்றனர். என்னதான் பள்ளிகளில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வகுப்புகளுக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டாலும், இதுபோன்ற பயணங்களின் மூலம் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழும்பியது. இந்த காட்சிகளை வீடியோவாக அன்றைய தினமே(07.09.2021) முதன்முதலில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டது விகடன்.
இதுதொடர்பான கேள்விகளுடன், மறுதினமே(08.09.2021) மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அலுவலகத்திற்கு நேரில் சென்றோம். விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (CEO) கிருஷ்ணபிரியா-விடம் இதுகுறித்துப் பேசியபோது, "பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தினமும் மாலை 3.30 மணி முதலே ஒவ்வொரு வகுப்பு வாரியாக மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கும்படி பள்ளிகளில் கூறியுள்ளோம். ஏனெனில், அந்த இடைவெளியில் மாணவர்கள் அவரவர் வீடுகளுக்கு கூட்டம் கூடாமல் பாதுகாப்பாக செல்வார்கள் என்பதற்காக. அதேபோல முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளையும் சரியாக பின்பற்றும்படி மாணவர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்" என்றார்.
பேருந்துகளில், ஆபத்தான முறையில் கூட்டமாக பயணிப்பதன் மூலம் வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதே..! மாணவர்களின் பாதுகாப்பிற்காக கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை அவர் முன் வைத்தோம்.
"இதுபோன்ற புகார் எனக்கு வந்துள்ளது. அது தொடர்பாக தான் மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசிக்க தற்போது செல்கிறேன். நல்ல முடிவு எட்டப்படும் என நினைக்கிறேன்" என்றார்.
Also Read: `அரசுப் பள்ளி வறுமை அல்ல, பெருமை’ - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சும் எதிர்பார்ப்பும்!
அதன்படி நேற்று (09.09.2021) மாலை 4 மணி அளவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் எஸ்.பி உடன் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன். பள்ளி மாணவர்கள் பாதுகாப்புடன் பயணிப்பதற்காக 'பள்ளி மாணவர்கள் மட்டும்' என பதாகை வைத்த கூடுதலாக ஐந்து பேருந்துகளை துவக்கி வைத்துள்ளார். இந்த பேருந்துகள் காலையும், மாலையும் பள்ளி மாணவர்கள் பயணிக்க தொடர்ந்து இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதோடு, "பேருந்துகள் நிரம்பிவிட்டால் மாணவர்கள் கூட்டமாக படியில் தொங்கியபடி பயணிக்க வேண்டாம். சிறிது நேரத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.
உடன், கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வையும், தடுப்பூசிகளின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களிடம் எடுத்துரைத்து சென்றுள்ளார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்.
source https://www.vikatan.com/news/general-news/villupuram-district-collector-has-ordered-to-run-additional-government-buses-for-students
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக