Ad

புதன், 11 ஆகஸ்ட், 2021

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட மாணவி; காதலன் கவலைக்கிடம்!

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரின் மகள் முத்துலட்சுமி (18). முத்துலட்சுமி செங்குன்றம் அருகே தனியார் கல்லூரி ஒன்றில் நர்ஸிங் படித்துவந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முத்துலட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருண் (21) என்ற இளைஞருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மலரவே, முத்துலட்சுமி அருணுடன் தினமும் செல்போனில் நீண்ட நேரம் பேசிவந்திருக்கிறார். தங்கள் மகளின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியவே, முத்துலட்சுமியின் பெற்றோர் அவரை விசாரித்திருக்கின்றனர்.

அப்போது முத்துலட்சுமி, அதே பகுதியைச் சேர்ந்த அருணை தான் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் முத்துலட்சுமியைக் கண்டித்துவிட்டு, அடுத்த சில நாள்களிலேயே முத்துலட்சுமிக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிக்க ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.

தற்கொலை

பெற்றோரின் திருமண ஏற்பட்டால் கடந்த சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்ட முத்துலட்சுமி, நேற்று முன்தினம் இரவு தனது படுக்கையறையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர், கதவை உடைத்துக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், தூக்கில் துடித்துக்கொண்டிருந்த முத்துலட்சுமியை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

முத்துலட்சுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தன் காதலி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதை அறிந்த அருண் சோகத்தில் எலி மருந்தைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அருணை மீட்ட அவரது உறவினர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அருணுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். இந்தநிலையில், நர்ஸிங் மாணவி காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, சோழவரம் போலீஸார் வழக்கு பதிந்து அவருடைய பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: ஆன்லைன் ரம்மி: `₹38 லட்சத்தை அவர் இழந்தது சூதாட்டம் இல்லையா?’ - தற்கொலை செய்துகொண்ட விஜயகுமார் மனைவி



source https://www.vikatan.com/news/crime/youngster-attempted-suicide-after-his-girlfriend-ends-her-life

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக