Ad

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

தேசிய அளவில் அணி திரட்டும் கே.சி.ஆர்... காங்கிரஸ் இல்லாமல் பாஜக-வை வீழ்த்துவது சாத்தியமா?!

சமீபகாலமாக பா.ஜ.க-வுக்கு எதிராகச் சரவெடிகளைக் கொளுத்திப்போடும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், கடந்த பிப்ரவரி 20-ம் தேதி அன்று, இரண்டு முக்கியச் சந்திப்புகளை மேற்கொண்டிருக்கிறார். தேசிய அளவில் கவனம் ஈர்த்த அந்தச் சந்திப்புகள் தற்போது விவாதப் பொருளாகியிருக்கின்றன.

தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிரியச் சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ், மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்ரேவை நேரில் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரையும் நேரில் சந்தித்தார். சில காலம் முன்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியையும் நேரில் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார். தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணி திரட்டவே இந்தச் சந்திப்புகளை சந்திரசேகர் ராவ் நடத்திவருவதாகத் தெரிகிறது.

உத்தவ்-சந்திரசேகர் ராவ்

இந்தச் சந்திப்பு குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான `சாம்னா'வில், ``ஞாயிற்றுக்கிழமை நடந்த சந்திப்பு, பா.ஜ.க-வுக்கு எதிராகத் தேசிய அளவில் புதிய அணி விரைவாக உருவாக வழிசெய்யும்'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது குறித்துப் பேசிய சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளரும், அந்தக் கட்சியின் எம்.பி-யுமான சஞ்சய் ராவத், ``பா.ஜ.க-வுக்கு எதிராகக் காங்கிரஸ் இல்லாமல் ஓர் அணியை உருவாக்க முடியாது. பா.ஜ.க-வுக்கு எதிராகக் கட்சிகளை அணி திரட்டும் திட்டம் பற்றி மம்தா சொன்னபோது, அவரிடம் அதில் காங்கிரஸையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னதே சிவசேனாதான். தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டும் திறமை சந்திரசேகர் ராவ்விடம் இருக்கிறது!'' என்று கூறியிருக்கிறார்.

சஞ்சய் ராவத்தின் கருத்துகள் வெளியான பின்னர், மூன்றாவது அணி அமைப்பதில் சிவசேனாவுக்கு விருப்பமில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் காங்கிரஸோடு கைகோர்த்து நிற்பதையே சிவசேனா விரும்புகிறது என்பதும் உறுதியாகியிருக்கிறது. இந்த நிலையில், `காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க மம்தா ஒப்புக் கொள்வாரா?' என்கிற விவாதங்கள் தேசிய அளவில் கிளம்பியிருக்கின்றன. `காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த முடியுமா?' என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இது குறித்து தேசிய அரசியலை உற்று நோக்கும் சிலர், ``தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக மம்தா சில முயற்சிகளை எடுத்துவந்தார். ஆனால், `மூன்றாவது அணி சரி வராது; காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே பா.ஜ.க-வை வீழ்த்தலாம்' என்பதில் சிவசேனா தெளிவாக இருப்பதாகவே தெரிகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் உள்ளிட்ட சிலர் மட்டுமே காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கத் தயக்க காட்டுவார்கள் எனத் தோன்றுகிறது. காங்கிரஸுடன் கூட்டணியிலிருக்கும் தி.மு.க, பா.ஜ.க-வை வீழ்த்துவதை பெரும் குறிக்கோளாக வைத்திருக்கும் தெலங்கானா ராஷ்டிரியச் சமிதி, மகாராஷ்டிராவில் காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சியிலிருக்கும் சிவசேனா ஆகிய கட்சிகளுக்குக் காங்கிரஸுடன் கைகோர்க்க எந்த தயக்கமும் இருக்காது என்றே தெரிகிறது. உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எதிராகப் போட்டியிட, காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. எனவே நாடாளுமன்றத் தேர்தலில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கப் பெரிய தயக்கம் இருக்காது என்றே தோன்றுகிறது.

ஸ்டாலின், மம்தா

ஆம் ஆத்மி இல்லாவிட்டாலும், மம்தாவை ஒப்புக் கொள்ளவைத்து காங்கிரஸ் கூட்டணியில் இணைத்துவிட்டால், அது பலமான கூட்டணியாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின்கீழ் கூட்டணி அமைந்தால் மட்டுமே பா.ஜ.க-வை வீழ்த்த முடியும் என்ற நிலையே தற்போது நிலவுகிறது. ஒருவேளை சில கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைத்தால், அதன் மூலம் வாக்குகள் சிதறி, பா.ஜ.க-வுக்கு சாதகமாக மாறும் வாய்ப்புகளே அதிகமிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதால், தேசிய அரசியலில் நிகழவிருக்கும் மாற்றங்களைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டியதும் அவசியம்!'' என்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-third-front-formation-in-2024-elections

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக