Ad

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

``நீட் தேர்வை ரத்து, முதல் கையெழுத்து என்றார் ஸ்டாலின்; 10 மாதங்கள் ஆகிவிட்டது!" - ஒ.பன்னீர்செல்வம்

மதுரை மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் 100 வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பழங்காநத்தத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசினார்.

அதிமுக கூட்டம்

அப்போது அவர், ``அதிமுகவை எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கினார்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நூற்றுக்கு நூறு நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா மட்டும்தான். யாராலும் குறை சொல்ல முடியாத ஆட்சியை செய்தவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா.

சட்டமன்ற தேர்தலில் பொய்யை சொல்லி, மக்களை நம்ப வைத்து குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

மதுரை அதிமுக கூட்டம்

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்து முதல் கையெழுத்துப் போடுவதாக முக.ஸ்டாலின் சொன்னார். ஆனால் இதுவரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. 10 மாதங்களாக கையெழுத்து போட்டுக் கொண்டே இருக்கிறார். நீட் தேர்வை நாடாளுமன்ற தீர்மானம் மூலம் ஜனாதிபதிதான் கையெழுத்திட்டு ரத்து செய்ய முடியும் என்பது கூட தெரியவில்லை.

மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் தருவதாக சொல்லியும் நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் 35 லட்சம் மக்களையும் ஏமாற்றி விட்டது திமுக அரசு.

கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்

பொங்கல் தொகுப்பை முறையாக வழங்காததால் முதல்வர் வெளியே கூட்டம் போட்டு பேச முடியவில்லை. இதையெல்லாம் பார்த்து இன்னும் 4 ஆண்டுகள் மக்கள் பொறுக்க மாட்டார்கள்.

உறுதியாக தமிழகத்தில் மறுமலர்ச்சியும், புரட்சியும் ஏற்படும். ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை தமிழக மக்கள் ஓயமாட்டார்கள்.

ஓ.பன்னீர்செல்வம்

பத்து மாதங்களாக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. எந்த திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை. ஆட்சியை எடை போட்டு மக்கள் தீர்ப்பு வழங்கும் தேர்தலாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைய உள்ளது.

ஆட்சி பொறுப்பேற்ற 10 மாதங்களில் மக்கள் மத்தியில் வெறுப்பை பெற்றுள்ள நிலை இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை.

அதிமுக கூட்டம்

இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி வாகை சூடும் என்ற முடிவை மக்கள் எடுத்துள்ளார்கள். நிச்சயம், மதுரை மாநகராட்சியை அதிமுக கைப்பற்றும். அதற்கு கழகத்தின் உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்" என்று பேசினார்.

ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி நடத்தப்பட்ட இந்த தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களான செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயலுமார், ராஜன் செல்லப்பா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.



source https://www.vikatan.com/news/politics/ops-local-body-election-campaign-at-madurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக