Ad

செவ்வாய், 14 ஜூன், 2022

``தேவரிஷிகுப்பம் ஊர்ல உயரமா ஒரு அத்தை இருந்தாங்க...’’ - பென்ஷன் கதை சொன்ன அமைச்சர் துரைமுருகன்

காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கே.ஆர்.தாங்கல் கிராமத்தில் தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. தொகுதியின் எம்.எல்.ஏ என்ற முறையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், ‘``இப்போது, நான் அமைச்சர் மட்டுமின்றி தி.மு.க-வின் பொதுச்செயலாளராகவும் இருக்கின்றேன். இந்தப் பதவியை கட்சியில் வகித்தவர்கள் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன். அடுத்து நான். எங்கேயோ ஒரு கிராமத்தில் பிறந்து, ஒரு குடிகாரனுடைய மகனாக வளர்ந்து கஷ்டப்பட்டு படித்து, கட்சியில் தியாகங்களைப் புரிந்து, மிசாவில் ஒரு வருட காலம் சிறைச்சாலையிலிருந்து என இப்படி பலக் கஷ்டங்களையும் பட்ட காரணத்தினால்தான் அண்ணா, பேராசிரியர் உட்கார்ந்த இடத்தில் நான் உட்கார வைக்கப்பட்டிருக்கிறேன்.

துரைமுருகன்

இது, என்னுடைய திறமையல்ல. காட்பாடி மக்கள் கொடுத்த வாழ்வு. தொடர்ந்து, என்னை ஜெயிக்க வைத்தீர்கள். ‘இதுவரை காட்பாடி தொகுதியில் எத்தனை முறை நின்றிருக்கிறீர்கள்?’ என்று எல்லோரும் கேட்பார்கள். ‘எனக்கே நியாபகமில்லை. 10, 12 முறை நின்றிருக்கிறேன்’ என்று சொல்லுவேன். அதற்கு அவர்கள், ‘அது, எப்படி ஒரே தொகுதியில் நிற்கிறீர்கள்? நாங்களெல்லாம் இரண்டாவது, மூன்றாவது முறைச் சென்றாலே ஊருக்குள் விடுவதில்லை’ என்று மறு கேள்விக் கேட்பார்கள். ‘என்ன பண்ண ஒரே பொண்டாடியோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஓட்டுப்போட்ட பகுதியை நீ தொகுதியாக நினைக்கிறாய். நான், திருக்கோயிலாகக் கருதுகிறேன். ஓட்டுப் போட்டவர்களையும் தெய்வங்களாக கருதுகிறேன்’ என்று சொல்லுவேன்.

சட்டமன்றத்தில் கலைஞர் 56 ஆண்டுகள் உட்கார்ந்திருந்தார். நான் 53 வருஷமாக உட்கார்ந்திருக்கிறேன். 56 வருஷத்தை தொட எனக்கு இன்னும் மூன்று வருஷங்கள்தான் இருக்கின்றது. இந்த வைபவம் இந்தியாவில் வேறு எந்த தொகுதியிலும் கிடையாது. இந்த வாழ்வைக் கொடுத்தவர்கள் நீங்கள்தான்’’ என்று பேசியபோது உணர்ச்சிவசப்பட்ட துரைமுருகன் மக்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.

பிறகு பேச்சை தொடர்ந்தவர், ‘‘வாக்காளர்களாக உங்களைக் கருதவில்லை. தெய்வங்களாகத்தான் கருதுகிறேன். போன முறையும், அதற்கு முந்தைய முறையும் அ.தி.மு.க ஆட்சியிலிருந்தது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த அந்த ரெண்டு முறையும் எனக்குதான் நீங்கள் ஓட்டுப்போட்டீர்கள். பத்து வருஷத்துக்கு முன்னாடி நான் மந்திரியாக இருந்தபோது, என் தொகுதியில் மட்டும் 38 ஆயிரம் பேருக்கு முதியோர் பென்ஷன் வாங்கிக் கொடுத்தேன். தமிழ்நாட்டிலேயே வேற எவனும், இந்த அளவுக்குக் கொடுக்கலை.

பொதுக்கூட்டம்

முதியோர் பென்ஷன் என்றால் என்ன...? மகனால் கைவிடப்பட்டு, மருமகளால் வீட்டை விட்டு வெளியில் துரத்தப்பட்டு ரோட்டில் பிச்சைக்காரியைப்போல நிற்பவர்களுக்குக் கொடுப்பது. ஆனால், அட்டிகை போட்டது, புல்லாக்குப் போட்டது, நிலம் வைச்சிறக்கிறது, டீச்சரா வேலை செய்யிறதுனு எல்லோருக்குமே முதியோர் பென்ஷன் கொடுத்திருக்கிறேன். அப்படி கொடுக்கக் கூடாதுதான். தேவரிஷிகுப்பம்னு ஒரு ஊர் இருக்குது. ஒரு முறை அங்கப்போய் உட்கார்ந்தேன். எல்லோரும் வந்து முதியோர் பென்ஷன் வாங்குனாங்க. அந்த ஊர்ல உயரமா எனக்கு ஒரு அத்தை இருக்குது. அது வீட்டுலருந்து எட்டிப்பார்த்து, ‘என்னடா முருகா எப்ப வந்தேன்’னு கேட்டுச்சி.

ஊர்ப்பக்கம் போனால் மந்திரி, கிந்திரி எல்லாம் மறந்துடணும். அத்தை அப்படித்தான் கூப்பிடும். அத்தையும் பென்ஷன் கேட்டுச்சி. ‘உனக்குதான் மூணு பையன் இருக்கிறான். நல்லா வசதியா இருக்கிற. உனக்கு எதுக்கு பென்ஷன்’னு கேட்டதுக்கு, ‘டேய், கொடுக்கிறியா, இல்லையா?’னு அத்தை சத்தம் போடவே... ஊர்ல பெரியக் குடும்பம். 500 ஓட்டு தேறும். சரி, சண்டாளினு நெனச்சிக்கிட்டே கூட வந்திருந்த அதிகாரியைப் பார்த்து, ‘டேய், அந்த அம்மாவுக்கு ஒண்ணு கொடுடா’னு சொன்னேன். அதிகாரி கொடுக்க வேண்டாம்னு சொன்னான். உடனே, அவனைப் பார்த்து, ‘கன்னியாகுமரி தெரியுமா?’னு கேட்டேன். அவனும் மாத்திடுவேன்னு புரிஞ்சிக்கிட்டு அத்தைக்கும் பென்ஷன் கொடுத்தான்.

துரைமுருகன்

ஒருக் காலத்தில் நானும் மறைந்துப் போவேன். ஆனால், அடுத்த 50 ஆண்டுகள் ஆனாலும் என் பெயர் நிலைத்து நிற்க வேண்டும். கலைஞரையே எம்.ஜி.ஆர்தான் அறிமுகம் செஞ்சுவெச்சாரு. அதற்கு முன்பு கலைஞரை எனுக்குத் தெரியாது. கே.வி.குப்பத்துல ஒருக் கூட்டத்துக்கு ரெண்டுப் பேரும் வந்திருந்தாங்க. எம்.ஜி.ஆர் முன்னாடியே தெரியும். அதன்பிறகு தான் கலைஞர் எனக்கு நண்பர் ஆனார். அந்த நேரம் சட்டக்கல்லூரியில் படிக்கின்றபோது, ஸ்டாலின் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்தார். ‘என்ன தம்பி ஸ்கூல் போறியா’னு கேட்டேன். ‘ஆமா அண்ணே’னு சொன்ன என்னுடைய தலைவர் மகனை இன்றைக்கு நான் தலைவராக ஏற்றுகொண்டிருக்கிறேன்’’ என்றார் துரைமுருகன்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/minister-duraimurugan-tells-the-story-of-pension

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக