Ad

செவ்வாய், 28 ஜூன், 2022

வெளிநாட்டு வேலையில் கணவன்... இறப்பு சான்றிதழ் மூலம் 25 லட்சம் மோசடி செய்த மனைவி - நடந்தது என்ன?

மேற்கு வங்க முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் நூர் ஜமால் ஷேக். இவர் சவுதி அரேபியாவில் கடந்த 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் தனது மனைவி மீது காவல்நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், "நான் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்தேன். அதனால் நான் வங்கியில் டெபாசிட் செய்து வைத்த பணத்துக்கு எனது மனைவிக்கு தான் பொறுப்பளித்திருந்தேன்.

பணம்

இந்த நிலையில், நான் வெளிநாட்டிலிருந்து வரத் தாமதமானதால் என் மனைவி என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவதாகக் கூறினார். அதன் பிறகு அவர் என்னை பிரிந்து சென்று விட்டார் என்பதால், வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க இந்தியா வந்தேன். அப்போதுதான் என் பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டதை அறிந்தேன். எனது இறப்புச் சான்றிதழைக் காண்பித்து, என் மனைவி பணத்தை எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல். இந்த சான்றிதழை வைத்து எனது சொத்துகளை அவர் பெயருக்கு மாற்றிக்கொண்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

டெபாசிட்

மேலும், எனது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் தொகையையும் பெற்றுள்ளார். வங்கி நிர்வாகத்திடம் இதைத் தெரிவித்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. சுமார் ரூ.25 லட்சம் என்னிடம் மோசடி செய்துள்ளார். மேலும் எனது மனைவிக்கு திருமணம் தாண்டிய உறவு இருந்ததும் தெரியவந்துள்ளது. எனவே எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்து வருகிறது.



source https://www.vikatan.com/news/crime/woman-used-fake-death-certificates-to-claim-rs-26-lakh-of-husband-while-he-was-abroad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக