Ad

ஞாயிறு, 19 ஜூன், 2022

இளைஞர்களின் போராட்டத்தால் பற்றியெரியும் `அக்னி’ இந்தியா - மத்திய அரசு பின்வாங்குமா?!

மத்திய பா.ஜ.க அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்தின்படி, இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுபவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே ராணுவத்தில் பணிபுரிய முடியும். இத்திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இத்திட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

மோடி

இன்னொருபுறம், நாடு முழுவதும் வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் அக்னிபத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இத்திட்டத்தை மத்திய அரசு அறிவித்தவுடன், வீதியில் இறங்கி இளைஞர்கள் போராடிவருகின்றனர். குறிப்பாக, பீகார் மாநிலத்தில் ரயில்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டுமென்று வலியுறுத்தி பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உட்பட பல மாநிலங்களில் இளைஞர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள்.

ஐந்து நாள்களாக நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் கல்வீச்சு, தீவைப்பு போன்ற சம்பவங்கள் பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் நடைபெற்றன. உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் சாலைகளில் பேரணிகளை நடத்தினர். அப்போது, வாகனங்களை அவர்கள் அடித்துநொறுக்கினர். ஜான்பூர் - பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு அரசுப் பேருந்துகளுக்கு அவர்கள் தீவைத்தனர்.

முதல்வர் யோகி

உத்தரப்பிரதேசத்தில் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைச் சமாதானப்படுத்த முயன்ற காவல்துறையினர் சிலர், தாக்குதலுக்கு உள்ளானார்கள். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். ஆனாலும், அந்த இளைஞர்கள் தொடர்ந்து போராடிவருகிறார்கள். இந்தப் போராட்டத்தையொட்டி, பீகார் மாநிலத்தில் பல இடங்களில் இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, ரயில்வே போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், உயிரிந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

சந்திரசேகர ராவ்

பீகாரில் இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்து உக்கிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் தாக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று மத்திய உளவுப்பிரிவு அளித்த அறிக்கையின் அடிப்படையில், அந்த எம்.எல்.ஏ-க்களின் வீடுகள், அலுவலகங்களுக்கு சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவுப்படி இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிப்பட்டிருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் இளைஞர்களின் போராட்டமும் வன்முறையும் தொடரும் நிலையில், இது குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

ராகுல் காந்தி

இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்தை வாபஸ்பெற வேண்டுமென்று எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். அக்னிபாத் திட்டத்தை வாபஸ்பெறவும், இந்திய இளைஞர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்கவும் நிர்ப்பந்திக்கப்படுவார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், அக்னிபாத் போன்ற திட்டங்களைக் கொண்டுவருவதற்கு முன்பாக, அது குறித்து மத்திய அரசு பரவலாக விவாதம் நடத்த வேண்டும் என்று அசோக் கெலாட் குறிப்பிட்டார்.

தமிழகத்திலும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. சென்னையில் அமைந்துள்ள போர் நினைவுச்சின்னம் அருகில் இளைஞர்கள் தண்டால் எடுத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மதுரை, கோவை, திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் அமைதியான முறையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்னிபத் திட்டத்தை உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென்று மத்திய அரசை தமிழகமுதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், ராணுவ விவகாரங்களுக்கான துறையின் கூடுதல் செயலாளரான லெப்டினன்ட் ஜெனரல் அணில் பூரி மற்றும் பாதுகாப்புப்படை அதிகாரிகள் நேற்று (ஜூன் 19) பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்து அக்னிபத் திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். அப்போது, “ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்புபவர்களுக்கு ஒழுக்கம் மிகவும் அவசியம். ராணுவத்தில் சேர வேண்டும் என்று விரும்பும் இளைஞர்கள் போராட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதன் பின்விளைவுகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ராணுவத்தில் சேர்க்கப்படும் அனைவரின் பின்னணியும் முழுமையாக விசாரிக்கப்படும்.

ஸ்டாலின்

அக்னிபத் திட்டம் வாபஸ்பெறப்பட மாட்டாது. அக்னிபத் திட்டத்தின் முதல் ‘பேட்ச்’சில் 25,000 வீரர்கள் சேர்க்கப்படுவார்கள். அதற்கான பணிகள் ஜூன் 24-ம் தேதி தொடங்கும். 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாவது ‘பேட்ச்’சில் 40,000 வீரர்கள் ராணுவத்தில் இணைக்கப்படுவார்கள்” என்று அணில் பூரி தெரிவித்தார்.

எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு, இளைஞர்களின் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக மத்திய அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டிருந்தாலும், இந்தப் பிரச்னையை ராணுவ அதிகாரிகளை வைத்து கையாளுவதற்கு மத்திய அரசு நினைக்கிறது. அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தொடரும் என்கிற நிலையில், அரசு என்ன மாதிரியான முடிவை எடுக்கும் என்பது தெரியவில்லை. கடந்த காலத்தில், வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்

லட்சக்கணக்கில் விவசாயிகள் திரண்டு போராடியபோது, பல மாதங்களாக அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த மத்திய அரசு, உ.பி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியவுடன், வேளாண் சட்டங்களை வாபஸ்பெற்றது. இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் குஜராத், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒருவேளை, அக்னிபாத் பிரச்னை தேர்தல் முடிவில் பாதிப்பை ஏற்படுத்தும் என பா.ஜ.க கருதுமானால், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு மாறக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/as-the-protest-continues-will-government-withdraw-agnipath-scheme

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக