Ad

திங்கள், 27 ஜூன், 2022

6 மாநில இடைத்தேர்தல்: ஆம் ஆத்மிக்கு ஷாக்; சமாஜ்வாடியை கவிழ்த்த பாஜக - முடிவுகள் எப்படி?!

ஆந்திரா, உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், திரிபுரா, பஞ்சாப், டெல்லி ஆகிய ஆறு மாநிலங்களில் காலியாக இருந்த சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்குச் சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. யூனியன் பிரதேசமான டெல்லியிலும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தல்களுக்கான முடிவுகள், கடந்த ஜூன் 26 அன்று வெளியாகின. அந்த முடிவுகள் குறித்து அலசுவதுதான் இந்தக் கட்டுரை!

ஆம் ஆத்மிக்கு ஷாக்!

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மிக்கு ஷாக் கொடுத்து வெற்றிபெற்றிருக்கிறது சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சி. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தற்போதைய பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் வெற்றிபெற்ற தொகுதிதான் சங்ரூர். 2022 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் மான். இடைத்தேர்தலில், ஆம் ஆத்மி வேட்பாளர் குர்மயில் சிங்கைவிட (Gurmail Singh), 5,822 வாக்குகள் அதிகம் பெற்று சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சியின் வேட்பாளர் சிம்ரன்ஜித் சிங் மான் வெற்றி பெற்றிருக்கிறார்.

பக்வந்த் மான் - கெஜ்ரிவால்

கடந்த 2022 சட்டமன்றத் தேர்தலில், 92 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்ற ஆம் ஆத்மி, ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் இடைத்தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறது. அதுவும் முதல்வர் பக்வந்த் மானின் தொகுதியான சங்ரூரில் தோல்வியடைந்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. ஆம் ஆத்மியின் கோட்டையான சங்ரூரில், 1999-க்குப் பிறகு, எந்தவொரு தேர்தலிலும் வெற்றிபெறாத சிம்ரன்ஜித் சிங் வெற்றிபெற்றிருப்பது, ஆளும் பக்வந்த் மான் அரசுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

பஞ்சாப்பில் கோட்டைவிட்டிருந்தாலும், டெல்லியில் ராஜிந்தர் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றிபெற்றிருக்கிறது ஆளும் ஆம் ஆத்மி கட்சி. பா.ஜ.க வேட்பாளர் ராஜேஷ் பாட்டியாவை சுமார் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார் ஆம் ஆத்மி வேட்பாளர் துர்கேஷ் பதக்.

சமாஜ்வாடியைக் கவிழ்த்த பா.ஜ.க!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் வசமிருந்த ராம்பூர், அசாம்கர்க் ஆகிய இரண்டு தொகுதிகளையும், இடைத்தேர்தலில் கைப்பற்றியிருக்கிறது பா.ஜ.க. 2019-ல் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றிபெற்றிருந்த அசாம்கர்க் தொகுதியில், தற்போது 8,679 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார் பா.ஜ.க-வின் தினேஷ் லால் யாதவ். அதேபோல ராம்பூர் தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்கிறது பா.ஜ.க.

அகிலேஷ் யாதவ்

தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக சமாஜ்வாடி கட்சியினர் குற்றம்சாட்டிவந்தாலும், ``அகிலேஷ் யாதவ் இடைத்தேர்தலில் அதிக கவனம் செலுத்தாததுதான் தோல்விக்குக் காரணம்'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

திரிபுராவில் வெடித்த வன்முறை!

திரிபுராவில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. போர்டோவலி, சுர்மா, ஜுபராஜ்நகர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் ஆளும் பா.ஜ.க வெற்றிவாகை சூடியிருக்கிறது. போர்டோவலி தொகுதியில், அந்த மாநிலத்தின் முதல்வர் மாணிக் சாஹா வெற்றிபெற்றிருக்கிறார். கடந்த மே மாதம் திரிபுராவின் முதல்வராக இருந்த பிப்லப் குமார் தேப், தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, மாணிக் சாஹா முதல்வராக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீதமுள்ள ஒரு தொகுதியான அகர்தலாவில் காங்கிரஸ் வேட்பாளர் சுதீப் ராய் பர்மான் வெற்றியடைந்திருக்கிறார். இதையடுத்து அகர்தலாவில் காங்கிரஸ், பா.ஜ.க கட்சியினரிடையே மிகப்பெரிய மோதல்கள் வெடித்து பின்னர், வன்முறையாக மாறியது.

பா.ஜ.க

ஜார்க்கண்ட்டில் காங்., ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்.!

ஜார்க்கண்டின் மந்தர் தொகுதியில், பா.ஜ.க வேட்பாளரைவிட 23,517 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பி நேகா (Shilpi Neha). ஆந்திர மாநிலம் ஆத்மகுரு தொகுதியில், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸைச் சேர்ந்த விக்ரம் ரெட்டி வெற்றிபெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பரத் குமார் யாதவைவிட, 82,888 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார் விக்ரம் ரெட்டி.



source https://www.vikatan.com/government-and-politics/politics/story-about-six-state-by-election-results

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக