Ad

செவ்வாய், 14 ஜூன், 2022

`தற்போது பரவும் பிஏ4, பிஏ5 ஒமிக்ரான் வேகமானது; முகக்கவசம் அவசியம்!' - சுகாதாரத்துறை அமைச்சர்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு பகுதிகளில் மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் வந்த அமைச்சர் பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து கொடைக்கானலில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர் குழந்தைகள் நலப்பிரிவுக்கான புதிய கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

பண்ணைக்காடு மருத்துவமனையில் ஆய்வு

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 'திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 124 கோடியே 98 லட்சத்து 12000 ரூபாய் ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிடி ஸ்கேன் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

கொடைக்கானல் நகர்ப்புற சுகாதார மையம் மேம்படுத்துவதற்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி பண்ணைக்காடு அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள பழைய கட்டடங்களை இடித்து புதிய கட்டடங்கள் கட்டி மேம்படுத்துவதற்கு 2 கோடியே 37 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பழனி மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

ஆய்வு

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 64 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குரங்கு அம்மை நோய் காரணமாக 22 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் சுற்றுலா பயணிகள் கண்காணிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் தற்போது பரவிவரும் பி.ஏ.4.மற்று பி.ஏ.5 வகை ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இந்த நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பகுதி கண்காணிக்கப்படும். தமிழகத்தில் நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்' என்றார்.

ஆய்வு

மேலும், 'வெளிநாடு, குறிப்பாக உக்ரைன் நாட்டில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ மேல்படிப்புக்கும் பணிக்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது பணியில் உள்ள 10,000 செவிலியர்கள் படிப்படியாக காலமுறை ஊதியத்தில் இருந்து நிரந்தரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/minister-ma-subramanian-advised-to-wear-mask-to-protect-from-omicron-variant-s-spread

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக