Ad

சனி, 19 நவம்பர், 2022

``அடிதடி எல்லாம் காங்கிரஸுக்குப் புதிதல்ல..!" - சொல்கிறார் திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கைகலப்பு; தி.மு.க-காங்கிரஸ் இடையேயான முரண்பாடு; ஆறு பேர் விடுதலை குறித்து காங்கிரஸ் வைத்து வரும் வாதம்... என காங்கிரஸ் கட்சியைச் சுற்றி நிகழும் பரபர சம்பவங்கள் குறித்து அந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும், எம்.பி-யுமான திருநாவுக்கரசரை அவரின் சென்னை இல்லத்தில் சந்தித்து, அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

“ஒரு பக்கம் ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் என்கிறீர்கள். மறுபக்கம் கட்சிக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதை எப்படிப் புரிந்து கொள்வது?”

“கடல் என்றிருந்தால் அலைகள் அடிக்கத்தான் செய்யும். காங்கிரஸ் ஒரு பெரிய கடல். தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி. எல்லா பெரியக் கட்சிகளிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். சமீபத்தில் அ.தி.மு.க அலுவலகத்தில்கூட பார்த்தோமே. அது அடிதடி இல்லையா... இது போல் பல்வேறு கட்சிகளில் உட்கட்சிப் பிரச்னைகளோ, கருத்து வேறுபாடுகளோ, மோதல்களோ சகஜமான விஷயம்தான். ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகள் முற்றி சில நேரங்களில் கைகலப்புகளில் முடிகிறது.”

“அப்படி என்றால் இதை நீங்கள் வரவேற்கிறீர்களா...?”

“இது வரவேற்கக் கூடிய அம்சம் இல்லை... கண்டனத்துக்குரியது, தவிர்க்கப்படக் கூடியது, கண்டிக்கப்பட வேண்டியது, நடவடிக்கைக்குரியது. இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி தலைமையில் இருக்கும் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் விசாரிக்கப்படும். அவர்கள் கொடுக்கும் அறிக்கையை வைத்து உரிய நடவடிக்கை இருக்கும். ஆனால், இது போன்ற நிகழ்வு காங்கிரஸுக்குப் புதிதல்ல. 1971-ல் சி.சுப்பிரமணியம் இருக்கும்போது பெரிய அளவில் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது. மூப்பனார் அவர்கள் கட்சி பிரிவதற்கு முன்பும் நடந்தது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பல மாநிலங்களில் பல கட்சிகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.”

முற்றுகை

“ `இப்படியான நேரங்களில்தான் சத்தியமூர்த்திபவன் தமிழ்நாட்டில் இருப்பது தெரிகிறது’ என்கிற வாதம் வருகிறதே?”

“அது தவறு... தினமும் ஊடகங்களில் சத்தியமூர்த்திபவனில் நடக்கும் நிகழ்வுகள் வந்து கொண்டுதானே இருக்கின்றன. இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவ்வளவுதான்.”

“இந்த அடிதடி சம்பவத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆட்களின் பங்கும் இருப்பதாகக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?”

“இந்த விவரம் எல்லாம் சொல்ல விரும்பவில்லை. சொல்லவும் முடியாது. சொல்லவும் கூடாது. அந்த பக்கம் யார் தலைமை ஏற்று நடத்தியது, இந்த பக்கம் யார் தலைமை ஏற்று நடத்தியது என்பதில்லை. கீழ் இருக்கும் தொண்டர்கள், அவர்கள் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிக் கொள்கிறார்கள், அடித்துக் கொள்கிறார்களே தவிரத் தலைவர்கள் அளவில் எந்த பிரச்னையும் இல்லை என்பது மட்டும் உறுதி.”

ஆறு பேர் விடுதலை

“ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையானவர்கள் வைத்து அரசியல் செய்யக் கூடாது என்று கூறும் காங்கிரஸார்தான், அதை அதிக அளவில் பேசி அரசியல் செய்வதாகச் சொல்லப்படுகிறதே?”

“உச்ச நீதிமன்றமே இவர்களை விடுதலை செய்திருந்தாலும் இது ஒரு தவறான முன்னுதாரணம் என்பதுதான் காங்கிரஸின் கருத்து. காரணம் இது போல் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. உதாரணமாகக் கோவைக் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட, அன்று இளைஞர்களாக இருந்த பல இஸ்லாமியர்கள் விசாரணை கைதிகளாகவே இன்றுவரை இருக்கிறார்கள். அவர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தானே?”

“அப்போது மற்றவர்களையும் விடுவிக்க வேண்டும் என்கிறீர்களா?”

“விடுவிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதில்லை பிரச்னை. ஒரு தரப்பினரை மட்டும் விட்டுவிட்டு மற்றொரு தரப்பினரை விடாதது நியாயமா என்பதுதான் கேள்வி. அதேபோல் இது தவறான முன்னுதாரணம். குறிப்பிட்ட வயதுக்கு மேல் எல்லோரும் வெளியே வந்துவிடலாம் என்கிறபோது அது நியதி ஆகிவிடாதா?”

“இதில் குறிப்பிட்ட ஆண்டுகள் என்று எப்படிச் சொல்ல முடியும். அவர்களுக்கான தண்டனை காலம் முடிந்து வருவதில் என்ன சிக்கல்?”

“ஏதேனும் தவறு செய்துவிட்டு இருபது வயதில் உள்ளே சென்று ஐம்பது வயதில் வெளியே வந்துவிடலாமா. அப்படி இருக்கும் எல்லோரையும் விடுவிக்க வேண்டியதுதானே. ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் என்பதற்காக மட்டும் இவர்களை விடுவிக்கிறார்களா... இதுதான் இங்கு பிரச்னை. அவர்கள் தரப்பில் நியாயம் இருக்கலாம். இந்த விடுதலை மூலம் அவர்களும், அவர்கள் குடும்பமும், அவர்களுக்காக ஆதரவு கேட்டவர்களும் சந்தோஷப்படலாம். ஆனால், காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல, பொது மக்களின் அபிப்பிராயத்துக்கும் எதிரானதாக இருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அதனால்தான் மத்திய அரசும் இப்போது மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்திருக்கிறது.”

கோட்சே

“ `காந்தி படுகொலை வழக்கில் கோபால் கோட்சேவை 18 ஆண்டுகளில் மகாராஷ்டிரா காங்கிரஸ் அரசு விடுதலை செய்தது மட்டும் சரியா?’ என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அப்படி இருந்தாலும் அதுவும் தவறான முன்னுதாரணம்தான். ஒரு தவறான முன்னுதாரணம் இன்னொரு தவறான முன்னுதாரணத்துக்கு முன்னோடியாக இருக்கவும் முடியாது, இருக்கவும் கூடாது என்பது இப்போது இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கருத்து.”

“இலங்கை விவகாரத்தில் இன்றுவரை காங்கிரஸ் மீதான விமர்சனங்கள் தொடரத்தானே செய்கின்றன?”

“காங்கிரஸ்தான் கொன்றது என்று எப்படிச் சொல்ல முடியும். அங்குத் தமிழர்கள் கொல்லப்பட்டது நியாயம் என்று நாங்களும் சொல்லவில்லையே. இன்னும் சொல்லப் போனால் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்றுதானே ராஜீவ் காந்தியை சிங்கள காவலர் ஒருவர் துப்பாக்கியைத் திருப்பி அடித்தார். எல்.டி.டி-க்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கும்போது இந்திரா காந்திதானே பிரதமர். அவருக்குத் தெரியாமல் இங்குப் பயிற்சி அளிக்க முடியுமா. தங்குவதற்கு இடம், உணவு என அனைத்தும் கொடுத்தது எம்.ஜி.ஆரும், இந்திரா காந்தியும் தானே. அவர்கள் செய்த உதவிகளை எல்லாம் விட்டுவிட்டு ‘காங்கிரஸ்காரர்கள் கொன்றுவிட்டார்கள்...’ என்று சொல்வதற்காகவே சிலர் கட்சி நடத்துவதற்கும், பேசுவதற்கும் காங்கிரஸ் பொறுப்பாக முடியாது.”

ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி

“காங்கிரஸ்-தி.மு.க இடையே முரண்பாடுகள் ஏராளம் இருக்கின்றன என்று காங்கிரஸ் தரப்பில் பேசப்பட்டு வருகிறதே?”

“தமிழ்நாட்டின் நலன், இந்தியாவின் நலன், மதச்சார்பற்ற நாடாக இருப்பது, அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் போன்ற பொதுவான நோக்கத்தின் அடிப்படையில்தான் கூட்டணி. கூட்டணிக் கட்சிகளிடையே ஒரே மாதிரி கருத்து, கொள்கை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. அப்படி இருந்தால் கட்சிகளின் தேவையே இருக்காது. சில விஷயங்களில் ஒன்றுபடுகிறோம். சில விஷயங்களில் முரண்படுகிறோம். அதனால் கூட்டணியில் மோதல் வந்துவிட்டது, உடைகிறது என்பது எல்லாம் அர்த்தம் கிடையாது. தோழமை கட்சிகளுக்கென்று சில தர்மமும் இருக்கிறது. அந்த தர்மத்தை மீறியும் செயலாற்ற முடியாது. அதேநேரத்தில் மக்களின் நலனையும் விட்டுக் கொடுக்க முடியாது.”

அமித் ஷா

“ `கருணாநிதி, ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது. அதை சரியாகப் பயன்படுத்தினால் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க முடியும்’ என்கிறார் அமித் ஷா. தேசிய கட்சியான காங்கிரஸ் இது போல் தமிழ்நாட்டில் எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லையா?”

“வெற்றிடம் என்று ஏதும் கிடையாது. அடுத்தடுத்து தலைவர்கள் வந்து கொண்டேதான் இருப்பார்கள். எல்லோரும் ஆசைப்படுவது போல் பா.ஜ.க-வும் ஆசைப்படுகிறார்கள், முயற்சி செய்கிறார்கள். ஆனால், முயற்சி வெற்றி பெறாது என்பது எங்களுக்குத் தெரியும். அதுவும் நான்கு எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க கூட்டணி தயவில்தான் வந்திருக்கிறார்கள். தனியாக நின்று எங்கு வந்தார்கள்.”

“இதைக் காங்கிரஸ் சொல்லலாமா...?”

“கூட்டணியில்தான் வந்திருக்கிறோம் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். காங்கிரஸைத் தாண்டி பா.ஜ.க வளர்ந்திருக்கிறது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், பா.ஜ.க முயற்சி செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. காங்கிரஸ் செய்யாததை பா.ஜ.க இன்று செய்து வருகிறது. இருந்தாலும் அவர்களைத் தமிழ்நாட்டு மண் ஏற்காது என்பது மட்டும் நிச்சயம்.”

ஆளுநர் ஆர்.என்.ரவி

“ `தமிழ்நாட்டில் ஆளுநர் அரசியல் செய்து வருகிறார்’ என்கிற கருத்தைக் காங்கிரஸ் எப்படிப் பார்க்கிறது?”

“ஆளுநர் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக இருந்து செயல்பட வேண்டும். அரசியல் சட்டத்தில் ஆளுநருக்கென சில அதிகார வரம்புகள் இருக்கின்றன. அந்த வரம்புகளுக்கு உட்பட்டுத்தான் செயல்பட வேண்டுமே தவிர அதை மீறி அதிகாரம் செலுத்தக் கூடாது”

“ஆனால், `ஆளுநர் பதவி ரப்பர் ஸ்டாம்பு அல்ல’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறாரே?”

“ரப்பர் ஸ்டாம்பாக இருக்கச் சொல்லவில்லை. ஆனால், தேவை இல்லாமல் அவர் ஸ்டாம்ப்பை பயன்படுத்தக் கூடாது என்பதைத்தான் சொல்கிறோம். ஆளுநர் எல்லை மீறுவது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பா.ஜ.க ஆளாதா மாநிலங்களிலும் இப்படித்தான் இருக்கிறார்கள். என்னமோ பா.ஜ.க முதல்வர்கள் எல்லாம் சட்டத்தின் புத்திரர்கள் போலவும், மற்றவர்கள் சட்டத்துக்கு விரோதமானவர்கள் என்பதாகவும் இருக்கிறது இவர்களது நடவடிக்கை. இதை மாற்றிக் கொள்ளவேண்டும்.”



source https://www.vikatan.com/government-and-politics/politics/congress-senior-leader-and-mp-thirunavukarasar-shares-his-views-on-current-political-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக