Ad

ஞாயிறு, 20 நவம்பர், 2022

``பட்டேல் இந்தியாவை ஒன்றுப்படுத்தி இருந்தாலும், அதன் பெருமை ஆதிசங்கரருக்கு தான்" - கேரள கவர்னர்

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டைப் போலவே பா.ஜ.க ஆளாத கேரளாவிலும் முதல்வருக்கும், ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையிலான வார்த்தைப்போர் வலுத்துவருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஆரிஃப் முகமது கானை ஆளுநராக மத்திய அரசு நியமித்தது முதலே கருத்து மோதல்கள் நிலவிவருகின்றன.

கவர்னர் அரிஃப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன்

இந்த நிலையில் ஆரிஃப் முகமது கான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்திருக்கிறார் அதில், "அரசியல் ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு என்பதெல்லாம் சமீப கால நிகழ்வுகள். ஆனால், பல லட்சம் ஆண்டுகளாக நாம் அரசியல் ரீதியாக துண்டு துண்டாக பிளவுபட்டிருந்தோம். கேரள மாநிலத்திற்கென்று சிறந்த கலாசாரம் இருக்கிறது. இது இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் ஒன்று.

இதற்கான பெருமை கேரள மக்களுக்கும், ஆன்மீகவாதியான நாராயண குரு போன்றவர்களுக்கும் தான் சேரும். கேரளாவில் பெண்கள் மேலாடைகள் அணிய அனுமதி இல்லை என்கிற அளவுக்கு கடுமையான ஒடுக்குமுறைகள் இருந்தன. ஆனால், எப்போதெல்லாம் ஒடுக்குமுறைகள் தலைதூக்குகிறதோ, அந்த காலகட்டத்தில் உன்னதமான ஆத்மாக்கள் வெளிப்பட்டன.

ஆதி சங்கரர்

1947-ம் ஆண்டுக்குப் பின்னர் சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவை ஒன்றுப்படுத்தியதால் நாம் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மாறினோம். ஆனால் இதற்கான உண்மையான பெருமை கேரள மண்ணின் மைந்தர் ஆதிசங்கரருக்கு தான் போக வேண்டும். அவர்தான், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய மக்களுக்கு கலாசார, ஆன்மீக ஒற்றுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்" எனத் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/adi-shankara-is-credited-with-making-india-a-united-country

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக