ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சுப்பன்ன முதலி தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். 65 வயதான இவர் சோளிங்கரில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி அனுராதா (57). மகன்கள் விஷ்ணு (29), பரத் (28). மூத்த மகன் விஷ்ணு பெங்களூரிலிருக்கும் ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் விஷ்ணுவுக்குத் திருமணம் நடைபெற்றது. தன் மனைவியுடன் அவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். கோவையில் பணிபுரிந்து வந்த இளைய மகன் பரத் தற்சமயம் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை பெங்களூரிலிருக்கும் விஷ்ணு, தன் தந்தைக்குப் போன் செய்திருக்கிறார். நீண்ட நேரமாக அழைத்தும், தந்தை போனை எடுக்காததால், அதே பகுதியில் வசிக்கும் தன் சித்தப்பா சிவகுமாருக்குப் போன் செய்து வீட்டுக்குச் சென்று பார்க்க சொல்லியிருக்கிறார். சிவகுமார் சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் அண்ணன் ராமலிங்கம், அண்ணி அனுராதா, அண்ணனின் இளைய மகன் பரத் ஆகிய மூவரும் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டு இருந்தனர்.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிவக்குமார், உடனடியாக காவேரிப்பாக்கம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக ராமலிங்கம் தன் மனைவி, மகனுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்திருக்கிறது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Also Read: ராணிப்பேட்டை: `இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை!’ - திருமணம் முடிவான நிலையில் வங்கி அதிகாரி தற்கொலை
source https://www.vikatan.com/news/crime/college-professor-commits-suicide-along-with-his-wife-and-son-in-ranipettai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக