Ad

புதன், 22 டிசம்பர், 2021

காவல்துறை அத்துமீறல்; பழங்குடி மக்களுக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த தி.மண்டபம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடிகள் குடியிருப்பைச் சேர்ந்தவர் காசி. கடந்த 2011-ம் ஆண்டு, நவம்பர் 22-ம் தேதி திருட்டு வழக்கில் திருக்கோவிலூர் காவல்துறையினரால் இவர் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அன்று இரவு 8 மணி அளவில் அதே பழங்குடிகள் குடியிருப்புக்குள் நுழைந்த திருக்கோவிலூர் காவல்துறையினர், 10 சவரன் நகை, 2,000 ரூபாய் ரொக்கம், நான்கு செல்போன்கள், சார்ஜர்கள் போன்றவற்றை அங்கிருந்து எடுத்துக்கொண்டு, குடியிருப்பைச் சூறையாடியதாகக் கூறப்படுகிறது. மேலும், காவலர்கள் அங்கிருந்து நான்கு பெண்களைத் தனி வாகனத்திலும், 10 பேரை மற்றொரு வாகனத்திலும் ஏற்றிக்கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

காவலர்கள் பழங்குடிகள் குடியிருப்பிலிருந்து அழைத்துச் சென்ற அந்த நான்கு பெண்களையும் அன்றிரவே அருகிலிருந்த தைலத்தோப்பு பகுதியில் வைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக, காசியின் மனைவி லட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாலியல் வன்கொடுமை

Also Read: வயதான பெண்கள் டார்கெட்; கொலை, கொள்ளை, இறந்த பிறகு பாலியல் வன்கொடுமை!-சைக்கோ திருடனின் பகீர் பின்னணி

அதையடுத்து, இந்தப் புகாரில் சம்பந்தப்பட்ட திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் சீனிவாசன், சிறப்புக் காவல் துணை ஆய்வாளர் ராமநாதன், காவலர்கள் தனசேகரன், பக்தவச்சலம், கார்த்திகேயன் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட நான்கு பெண்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டது அப்போதைய தமிழக அரசு. பெரும் பேசுபொருளான இந்தப் புகார் தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வெளியானதை அடுத்து, தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது மனித உரிமைகள் ஆணையம்.

இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த நிலையில், தற்போது மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 4 பெண்கள் உட்பட 15 நபர்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டிருக்கும் உத்தரவு அறிக்கையில், ``காவல்துறையினரின் மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட காசி, லட்சுமி உட்பட 15 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 75 லட்சம் ரூபாயைத் தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் இழப்பீடாக வழங்க வேண்டும். அடுத்த மூன்று மாதங்களுக்குள் திருக்கோவிலூர் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான துறைரீதியான நடவடிக்கை உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்.

மாநில மனித உரிமைகள் ஆணையம்

Also Read: கள்ளக்குறிச்சி: சிறுமியை காரில் கடத்திய கும்பல்! - கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

திருக்கோவிலூர் காவல்துறை அதிகாரிகள் மீது 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையிலுள்ள வழக்குகள் தொடா்பான இறுதி அறிக்கையை, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க தமிழக அரசு டி.ஜி.பி-யை அறிவுறுத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/state-human-rights-commission-ordered-tn-govt-to-give-75-lakhs-to-tribal-people-on-behalf-of-compensation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக