Ad

செவ்வாய், 28 டிசம்பர், 2021

மனைவி நகைகளை அடகு வைத்து ஆன்லைன் டிரேடிங்! - தொடர் நஷ்டத்தால் புதுச்சேரி கணவரின் சோக முடிவு

புதுச்சேரி, திருக்கனூரை அடுத்த குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். சாஃப்ட்வேர் இன்ஜினியரான இவருக்கும், முத்துப்பிள்ளை பாளையத்தை சேர்ந்த சந்திரலேகா என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது.

பெங்களூரில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த அய்யனார், கொரோனா காலகட்டத்தில் வேலையை இழந்ததால், சொந்த ஊருக்குத் திரும்பினார். வேலையும் இல்லாமல், வருமானமும் இல்லாமல் தவித்த அய்யனாரிடம் ஆன்லைன் டிரேடிங் செய்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று ஆலோசனை கூறியிருக்கின்றனர் அவரின் நண்பர்கள்.

Stock Market (Representational Image)

Also Read: ஆன்லைன் டிரேடிங்: நஷ்டத்தை சமாளிக்க கந்து வட்டியில் கடன்; இளைஞரின் விபரீத முடிவு!

அதன் அடிப்படையில் ஆன்லைங் டிரேடிங் செய்யலாம் என்று முடிவெடுத்த அவர், தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து அந்த பணத்தை ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்திருக்கிறார். ஆனால் அய்யனார் எதிர்பார்த்த அளவுக்கு ஆன்லைன் டிரேடிங்கில் பணம் கிடைக்காததுடன், கடும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறார்.

இழந்த பணத்தை மீண்டும் சம்பாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் மனைவியின் நகைகளை மீண்டும் மீண்டும் அடகு வைத்து ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்திருக்கிறார். அனால் அதிலும் நஷ்டம் ஏற்பட சுமார் 30 லட்சம் ரூபாய் வரை இழந்திருக்கிறார்.

நகைக்கடனுக்கு வட்டி செலுத்த முடியாதது, குடும்பச் செலவுக்கு பணமில்லாதது போன்ற காரணங்களால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அந்த பிரச்னை ஒருகட்டத்தில் வாக்குவாதமாக முற்றியதால் கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் சந்திரலேகா.

புதுச்சேரி

Also Read: `ஆன்லைன் டிரேடிங்' என ரூ.6.45 லட்சம் மோசடி; `கவனமாக இருங்கள்' என காவல்துறை அறிவுறுத்தல்!

ஆன்லைன் டிரேடிங்கிலும் நஷ்டம், மனைவியும் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டதால் விரக்தி அடைந்த அய்யனார் கடந்த 24-ம் தேதி தற்கொலை செய்ய முடிவெடுத்து எலி மருந்தை சாப்பிட்டார். அதனை அறிந்த அவரின் குடும்பத்தினர் உடனே அவரை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் அய்யனார். ஐந்து மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் டிரேடிங்கில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க கந்துவட்டி கடனில் சிக்கிக்கொண்ட அருள்மணி என்ற தனியார் பள்ளி ஆசிரியர் அதிலிருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொண்டதும், கடந்த 2020-ம் ஆண்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சுமார் 30 லட்சம் ரூபாயை இழந்த விஜயகுமார் என்பவர் தற்கொலை செய்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/crime/in-puducherry-youth-committed-suicide-for-loss-in-online-trading

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக