Ad

சனி, 25 டிசம்பர், 2021

உ.பி: `கட்டுக்கட்டாகப் பணம்; எண்ணி முடிக்கவே 36 மணி நேரம்!’- சிக்கவைத்த `சமாஜ்வாடி’ பெர்ஃப்யூம்

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஸ் ஜெயின், திரிமூர்த்தி ஃபிராக்னஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி மூலம் பிரபலமான பான் மசாலா, புகையிலைப் பொருள்கள், பெர்ஃப்யூம் தயாரிப்பில் ஈடுபட்டுவருகிறார். பியூஸ் ஜெயின் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் கூறி வருமான வரித்துறை அதிகாரிகள் அவரின் வீட்டில் வியாழக்கிழமை சோதனை செய்யத் தொடங்கினர்.

கான்பூரில் உள்ள ஜெயின் வீடு, தொழிற்சாலை, குடோன், பெட்ரோல் பங்க், மும்பை, குஜராத்திலுள்ள அலுவலகம், குடோன்களில் மட்டுமல்லாமல் ஜெயினுக்கு பெர்ஃப்யூம் தயாரிக்கத் தேவையான பொருள்களை சப்ளை செய்யும் நிறுவனம், ஜெயின் பான் மசாலாவை எடுத்துச் செல்லும் லாரி உரிமையாளர் என அவரோடு தொடர்புடைய அனைவரின் அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையும் நேரடி வரிவிதிப்புத்துறையும் இணைந்து சோதனையில் ஈடுபட்டன.

பணத்தை எடுத்துச் செல்ல வந்த கன்டெய்னர்

ஜெயின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பேப்பர் பண்டல்களில் கட்டுக்கட்டாகப் பணம் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. அவற்றை எண்ணுவதற்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிலிருந்து ஊழியர்களும், நோட்டு எண்ணும் இயந்திரங்களும் கொண்டுவரப்பட்டன. பணத்தை எண்ணி முடிக்கவே 36 மணி நேரம் பிடித்தது. சோதனை இரண்டு நாள்கள் நீடித்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அட்டைப்பெட்டிகளில் அடுக்கிவைத்து கன்டெய்னர் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது. பணத்தை எண்ணி முடித்தபோது மொத்தம் ரூ.177 கோடி அளவுக்கு ரொக்கப் பணம் இருந்தது. ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் முன்னிலையில் வங்கி ஊழியர்கள் எண்ணும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. கடந்த மாதம் வரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் தொழில் செய்துகொண்டிருந்த பியூஸ் ஜெயின் திடீரென சமாஜ்வாடி அத்தர் என்ற பெயரில் பெர்ஃப்யூம் ஒன்றை அறிமுகம் செய்தார்.

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நண்பராகக் கருதப்படும் பியூஸ் ஜெயின் அறிமுகப்படுத்திய, பெர்ஃப்யூம் அவருக்கே சிக்கலைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. அடுத்த ஓரிரு மாதங்களில் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக-வுக்குக் கடுமையான சவாலைக் கொடுக்கும் கட்சியாக சமாஜ்வாடி கட்சி விளங்குகிறது. தற்போது பியூஸ் ஜெயின் இல்லங்களில் ரெய்டு நடத்தப்பட்டு ரூ.177 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்திருப்பதால் சமாஜ்வாடி கட்சி ஊழல் கட்சி என்றும், வரி ஏய்ப்பு செய்பவர்கள் என்றும் பாஜக விமர்சனம் செய்துவருகிறது. ஆனால் பியூஸ் ஜெயினுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். பியூஸ் ஜெயின் சொந்தமாக வெளிநாட்டில் இரண்டு கம்பெனி என மொத்தம் 40 கம்பெனிகளை நடத்திவருகிறார். இந்த கம்பெனிகள் மூலம் வருமான வரி ஏய்ப்பு செய்துவருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே பியூஸ் ஜெயின் எப்படிச் சிக்கினார் என்பது குறித்துப் பரபரப்பு தகவல் கிடைத்திருக்கிறது.

அகிலேஷ் யாதவ் நண்பர் வீடு

சிக்கியது எப்படி?

கடந்த சில நாள்களுக்கு முன்பு அகமதாபாத்தில் நான்கு லாரிகளில் பான் மசாலா ஏற்றிவரப்பட்டது. அதை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தபோது அதில் ஆவணங்கள் இல்லை. அவை யாருக்குச் சொந்தமானவை என்று விசாரித்ததில் பியூஸ் ஜெயினுக்குச் சொந்தமான பான் மசாலா கம்பெனிக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. அந்த பான்மலாசா இந்தியா முழுக்க பிரபலமாக விற்பனையாகும் ஒன்றாகும். இது குறித்து உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த திடீர் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. பியூஸ் ஜெயின், அவரின் பங்குதாரர்கள் இரண்டு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லாரிகளில் பான்மசாலா மற்றும் புகையிலைப் பொருள்களை அனுப்பும்போது 50 ஆயிரத்துக்குள் இல்லாத கம்பெனி பெயரில் இன்வாய்ஸ் பில் தயாரிக்கப்படுமாம். 50 ஆயிரத்துக்குள் பில் இருந்தால் இ-வே பில் தேவையில்லை. இ-வே பில் இருந்தால்தான் ஜி.எஸ்.டி வரி செலுத்தவேண்டி வரும். ஒவ்வொரு முறையும் இது போன்று பொருள்களின் மதிப்பைக் குறைத்து மதிப்பிட்டு இன்வாய்ஸ் பில் தயாரித்து மோசடி செய்துள்ளனர். அதோடு அதிகமான பணப் பரிவர்த்தனை ரொக்கப் பணத்தில் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பணத்தை வங்கியில் செலுத்தாமல் பண்டல் கட்டி வீட்டுக்குள் பியூஸ் ஜெயின் அடுக்கிவைத்திருக்கிறார். இந்த ரெய்டு உத்தரப்பிரதேசத் தேர்தலில் எதிரொலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



source https://www.vikatan.com/news/india/rs-177-crore-seized-from-up-businessmans-house-how-did-the-samajwadi-perfume-owner-get-caught

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக