Ad

செவ்வாய், 21 டிசம்பர், 2021

``முதல்வரான மறுநொடி, தாய் மீது சத்தியமாக..!" - எழுவர் விடுதலை குறித்து சீமான்

`நாட்டையே ஆளத் துடிப்பவனுக்கு சொந்த வீடு இல்லாதது எவ்வளவு பெரிய வரலாற்றுத் துயரம்' என பொதுக்கூட்ட மேடையிலேயே சென்டிமென்ட் டச் கொடுப்பதாகட்டும், 'தி.மு.க-தாண்டா உண்மையான சங்கி' என்று செருப்பைத் தூக்கிப் பிடித்து விமர்சிப்பதாகட்டும்.... எப்போதுமே தமிழக அரசியலின் ஹாட் டாபிக் சீமான்!

பரபரப்பான இந்த நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரில் சந்தித்தேன்...

``மாரிதாஸின் பதிவு கருத்துரிமைக்கு ஆதரவாக நீங்கள் குரல் கொடுக்கிறீர்கள். ஆனால், கருத்தைப் பதிவிட்ட மாரிதாஸே சிறிதுநேரத்தில் அந்தப் பதிவை நீக்கிவிட்டார் என்றால் என்ன அர்த்தம்?''

மு.க.ஸ்டாலின்

``கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ், ஸ்டேன் லூர்து சாமி போன்றோரை பா.ஜ.க-வினர் என்ன பாடு படுத்தினார்கள் என்பதையெல்லாம் நாம் பார்த்தோம்தான். ஆக, பா.ஜ.க-வின் இந்த செயல்களுக்கும் 'எதிர்த்துப் பேசினாலே உள்ளே தூக்கிப் போட்டுவிடுவோம்' என்ற தி.மு.க-வின் செயலுக்கும் என்ன வித்தியாசம்?

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த துரைமுருகன், பொதுக்கூட்ட மேடையில் 'நல்ல அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிறந்தவன் எனப் பேசிவிட்டார்' என்று அவரைக் கைது செய்தார்கள். எதிர்த்துப் பேசினால், நீங்களும் எதிர்த்துப் பேசிவிட்டுப் போங்களேன்... ஏன் கைது செய்கிறீர்கள்?

இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினே கடந்தகாலத்தில், 'நல்ல அப்பனுக்குப் பிறந்திருந்தால் என்னைக் கைது செய்துபார்' என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்துப் பேசியிருக்கிறாரே... அப்படியென்றால், அவரே சிறைக் கதவைத் திறந்துபோய் படுத்துக்கொள்வாரா?''

``உங்களுக்குச் சொந்த வீடு இல்லாதது குறித்து பொதுக்கூட்ட மேடையிலேயே பேசியிருக்கிறீர்களே...?''

'' 'அண்ணன் ஏன் ஆலப்பாக்கத்திலிருந்து இப்போது வீடு மாறுகிறார்' என்று என் தம்பிகளுக்குத் தெரியவேண்டும். 'வாடகைக்குத்தான் குடியிருந்தோம்... இப்போது போய்த்தான் ஆகவேண்டும்' என்பதையெல்லாம் அவர்களுக்கும் சொல்லவேண்டும் இல்லையா... ஒவ்வொருவரையா கூப்பிட்டு வைத்து இதைப் பற்றிப் பேசமுடியாது. அதனால், இருக்கிற இடத்திலேயே பேசிவிட வேண்டியதுதானே!''

ஹெச்.ராஜா

``என்னைப் பார்த்து 'பீகாரி' என்று சொல்கிற பைத்தியக்காரர்களுக்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை என்று ஹெச்.ராஜா உங்களை விமர்சிக்கிறாரே?''

``உலகத்துக்கே தெரியும் ஹெச்.ராஜா, பீகாரைச் சேர்ந்தவர்தான் என்று. சரி... அவர் இந்த மண்ணின் மகனாகவே இருக்கட்டும். இந்த மக்களின் மொழி, இனம், நிலம், வளம் உரிமைகளுக்காக ஹெச்.ராஜா இதுவரை என்ன பேசியிருக்கிறார்... மதத்தைப் பற்றிப் பேசியதைத் தவிர.''

Also Read: ``வேதா நிலையம் விவகாரத்தில் நாங்கள் பயந்தமாதிரியே நடந்துவிட்டது..!" - சொல்கிறார் சி.வி.சண்முகம்

``எழுவர் விடுதலை குறித்துப் பேசுகிறபோது, 'ஏழு பேரையும் ஏன் விடுதலை செய்யவேண்டும்' என்று எதிர்க்கேள்வி கேட்கிறாரே ஹெச்.ராஜா?''

``இதுவே தமிழக முதல்வராக நான் இருந்திருந்தால், ஹெச்.ராஜா இப்படிக் கேட்பாரா? ஹெச்.ராஜா இந்த மண்ணின் மைந்தராக இருந்தால், என் தம்பி பேரறிவாளனின் கண்ணீரும் ஆத்தா அற்புதம்மாளின் வலியும் தெரிந்திருக்கும். நான் முதல்வரானால், மறு நொடியே ஏழு பேரையும் சிறைக் கதவைத் திறந்து வெளியே அனுப்பிடுவேன்.''

எழுவர் விடுதலை

``இந்திய ஒன்றியக் கட்டமைப்புக்குள் ஒரு மாநில முதல்வரால் சாத்தியமில்லாத விஷயங்களையெல்லாம் தொடர்ச்சியாகப் பேசிவருகிறீர்களே?''

``எது சாத்தியப்படாது... சிறைக் கதவைத் திறந்து எல்லோரையும் வெளியில் விட்டுவிட்டேன். நீங்கள் என்ன பண்ணிவிடுவீர்கள்? ஆட்சியைக் கலைப்பீர்களா? மறுபடியும் தேர்தலில் நின்று, அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைப்பேன்.

ஆனால், இப்போது ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் என் ரத்தம் அல்ல. அதனால்தான் அவர்களுக்கு கொதிக்கமாட்டேன் என்கிறது. நான் முதல்வரானால், என் தாய் மீது சத்தியமாக இவர்களை எல்லாம் சிறையிலிருந்து விடுவித்துவிடுவேன். என்ன என் மீது வழக்கு தொடுப்பார்களா? தொடுக்கட்டும்... எத்தனை லட்சம் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். சட்டம் இருக்கிறது. பார்த்துக்கொள்கிறேன்.

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. இது நாடுகளின் நாடு. எப்படி இவர்களுக்கெல்லாம் கட்டுப்படாமல், மம்தா பானர்ஜி தான் நினைப்பதை செய்கிறாரோ... அதுபோல நானும் செயல்படுவேன். உலகத்தில் எதுவொன்றும் சாத்தியத்திலிருந்து பிறக்கவில்லை. தேவையிலிருந்துதான் பிறக்கிறது. எனவே சாத்தியமா, கீத்தியமா என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்காதீர்கள்!''

Also Read: மனைவியின் நடத்தையில் சந்தேகம்; மாமியாரைக் குத்திக் கொன்ற மருமகன்! - நடந்தது என்ன?

`` 'ராஜீவ்காந்தியை நாங்கள்தான் கொன்றோம், சோனியாகாந்தியின் சக்காளத்தி பிள்ளைகள்' என்றெல்லாம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் வார்த்தைகளை கொட்டிவிடுகிறீர்களே....?''

``சரி... ராஜீவ்காந்தியை நாங்கள் கொல்லவில்லை. அவர் மரணத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இதைத்தானே 30 வருடங்களாக கத்திக்கொண்டிருந்தோம்... என்ன செய்தீர்கள். 'நாங்கள்தான் கொன்றோம்' என்று சொல்லி, எங்களைத் தடை செய்தீர்கள், சிறைப்படுத்தினீர்கள், எங்களை அழித்தொழிப்பதற்கு ஆயுதமும் கொடுத்து கொன்றொழித்தீர்கள்.

எல்லாவற்றையும் பார்த்துவிட்ட உச்சத்தில்தான், 'ஆமாம்டா நாங்கள்தான் கொன்றோம்... இப்ப என்னடா?' என்று கேட்கிறோம். இப்போது, 'விடுதலைப் புலிகளே க்ளெய்ம் பண்ணாத விஷயத்தை, நீங்கள் எப்படி க்ளெய்ம் செய்கிறீர்கள்' என்று கேட்கிற இடத்துக்கு வந்திருக்கிறார்கள். 'ராஜீவ்காந்தி மரணத்தை விடுதலைப்புலிகளே க்ளெய்ம் பண்ணவில்லையே... பின்னர் எதற்காக அந்த இயக்கத்தைத் தடை செய்தீர்கள்?' என்று இப்போது நாங்கள் கேட்கிறோம்.''

ராஜீவ்காந்தி - சோனியாகாந்தி

``ஆனால், 'ஈழத் தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்துகிறார் சீமான்' என இலங்கை நாடாளுமன்றத்திலேயே பேச்சு எழுந்திருக்கிறதே?''

``அந்தக் காணொளியை நானும் பார்த்து ரசித்து சிரித்தேன். அப்படிப் பேசியவர் டக்ளஸினுடைய ஆள். தனிப்பட்ட முறையில் டக்ளஸுக்கும் பிரபாகரனுக்குமே பிடிக்காது. எனவே, என்னையும் அவர்களுக்குப் பிடிக்கலை. உலகத் தமிழர்கள் என் மேல் அன்பு வைத்திருக்கிறார்கள். என் பின் திரள்கிறார்கள். எனவே என் மீது அவர்களுக்கெல்லாம் ஆற்றாமை. என்னைப் பற்றி இலங்கைப் பாராளுமன்றத்திலேயே பேசுகிறார்கள் என்பதில், என் பிள்ளைகளுக்கெல்லாம் மகிழ்ச்சிதான்.

'சீமானிடம்தான் விட்டுவிட்டுச் செல்கிறோம். எனவே தொடர்ச்சியாக அவரை முன்னெடுத்துச்செல்லச் சொல்லுங்கள்' என அண்ணன் சூசை, தன்னுடைய மரண வாக்குமூலமாக கடைசி நேரத்தில் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். இதுதான் எனக்கு இவ்வளவு நெருக்கடியை ஏற்படுத்தித் தந்திருக்கிறது!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/naam-tamilar-katchi-co-ordinator-seeman-interview-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக