Ad

வியாழன், 30 டிசம்பர், 2021

இடிந்து விழும் வீடுகள்; அச்சத்தில் மக்கள் - குடிசை மாற்று வாரியம் செய்யத் தவறுவது என்ன?!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கடந்த 1970-ம் ஆண்டு அன்றைய முதல்வர் மு.கருணாநிதியால் தொடங்கப்பட்ட ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். சென்னையில் உள்ள குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கொண்ட குடியிருப்புகளைக் கட்டிக்கொடுப்பதுதான் இந்த வாரியத்தின் முதன்மையான நோக்கமாகும். சென்னையில் மட்டும் செயல்பட்டுவந்த இந்த திட்டம் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள பெருநகரங்கள் தொடங்கி பேரூராட்சி வரை என்று அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள்

வெறும் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றிக் கொடுப்பது மட்டும் இந்த வாரியத்தின் நோக்கம் கிடையாது. அங்கு வசிக்கும் மக்களுக்குப் பாதுகாப்பு, நல்ல வாழ்வியல் சூழல், நல்ல குடிநீர், மின்சாரம் தொடங்கி அனைத்து வகையான வசதிகளும் கிடைக்கச் செய்வதேயாகும். இந்த வாரியத்தின் மூலம் இதுவரை நான்கு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

புளியந்தோப்பில் கேசவன் பிள்ளை பூங்கா பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பாகக் கட்டப்பட்ட குடியிருப்பு சிதிலமடைந்த காரணத்தால், அதை இடித்து புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கடந்த 2019-ம் ஆண்டு ரூ.112.26 கோடியும், 2020-ம் ஆண்டு ரூ.139.13 கோடி மதிப்பில் மொத்தம் 1,056 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வீடுகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒதுக்கித் தரப்பட்டன. அங்கே குடியமர்த்தப்பட்ட மக்கள், அந்த குடியிருப்பு கட்டடங்கள் விரிசல் அடைந்தும், தொட்டாலே உதிர்த்து விழும் நிலையில் உள்ளது என்று குற்றம்சாட்டினார். அதையடுத்து, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பின்னர் ஐ.ஐ.டி நிபுணர் குழு அமைத்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவில், தரமற்ற வகையில் குடியிருப்பு கட்டப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், அந்த குடியிருப்பைக் கட்டிய பி.எஸ்.டி கட்டுமான நிறுவனத்தைத் தடை பட்டியலில் சேர்க்கவும் அந்த குழு பரிந்துரை செய்திருந்தது.

இடிந்து விழுந்த குடியிருப்பு

சென்னை திருவெற்றியூர் அருகில் உள்ள அரிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியதின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பில் நான்கு பிளாக்குகளாக மொத்தம் 336 வீடுகள் இருக்கின்றன. இந்த வீடுகள் சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன. இதில் டி பிளாக்கில் 24 வீடுகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த கட்டடத்தில் ஏற்கெனவே இருந்த விரிசல் திடீரென பெரிதானது. அங்குக் குடியிருந்த பலரும் ஏற்கெனவே வெளியேறிவிட்ட நிலையில், மற்றவர்களும் உடனடியாக அங்கிருந்து வெளியேறினார்கள். அனைவரும் வெளியேறிய சிறிது நேரத்தில், அடிக்கிவைத்த சீட்டுக்கட்டு போல மொத்த கட்டடமும் சரிந்து விழுந்தது. சம்பவ இடத்துக்கு வந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், ``சமீபத்தில் நடத்திய ஆய்வில், சென்னையில் சுமார் 23,000 கட்டடங்கள் இடிக்க வேண்டிய சூழலில் இருக்கின்றன. இந்த கட்டடங்கள் அனைத்தும் 40 முதல் 50 வருடங்கள் பழமையான கட்டடங்கள். இந்த கட்டடங்கள் விரைவில் இடிக்கப்பட்டு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்படும்" என்று தெரிவித்தார்.

Also Read: 'புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு விவகாரம்' - சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள்!

குடிசை வாரிய கட்டடங்களின் உறுதித்தன்மை தொடர்பாக அகில இந்தியக் கட்டுநர் வல்லுநர் சங்கம், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எஸ்.ராமபிரபுவிடம் பேசினோம். ``ஒரு குடியிருப்பு கட்டடம் குறைந்தபட்சம் 50 ஆண்டுக்காவாது வலுவாக இருக்க வேண்டும். தரமான பொருள்களைக் கொண்டு தான் கட்டடம் கட்டப்படுகிறதா என்பதை அப்போதே பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அதைவிட மிக முக்கியமான ஒன்று கட்டடத்தைப் பராமரிப்பது. ஒரு கட்டடம் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை முறையாக பெயிண்ட் அடிக்கப்பட்டுச் சரியாகப் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். பராமரிப்பு சரியாக இருந்தால் தான் அந்த கட்டடம் நீண்ட ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும். ஆனால், பெரும்பாலான குடிசை மாற்றுக் குடியிருப்பு கட்டடங்கள் முறையாகப் பரராமரிக்கப்படுவதே கிடையாது" என்றார்.

ராமபிரபு

தொடர்ந்து பேசியவர், ``முன்பெல்லாம், கட்டடம் பெரும்பாலும் செங்கல் கொண்டு கட்டப்படும். தற்போது பெரும்பாலான கட்டடங்கள் சுவர் மைவான் டெக்னலாஜி மூலம் தான் கட்டப்படுகிறது. தற்போது வரும் டெண்டரில் கூட மைவான் டெக்னலாஜி சுவர்கள் வேண்டும் என்று தான் கேட்கிறார்கள். கே.பி பார்க்கில் கட்டப்பட்டதும் மைவான் டெக்னலாஜி சுவர்கள் தான். அங்குச் சுவர்களில் பிரச்னை இல்லை. சுவரில் செய்யப்பட்ட பிளாஸ்டிங் தான் சரியாக இல்லை. திருவொற்றியூர் கட்டடம் இடிந்து விழுந்ததற்கு முக்கிய காரணம் அந்த கட்டடம் எந்த பராமரிப்பும் இல்லாமல் இருந்தது மட்டும் தான். அனைத்து குடியிருப்பு கட்டடங்களையும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அதன் நிலையை ஆய்வு செய்யவேண்டும். குடியிருப்பு கட்டடங்களுக்குப் பராமரிப்பு இல்லை என்றால் எவ்வளவு தரமாகக் கட்டினாலும், அந்த கட்டடங்கள் வலுவிழந்து போகும் என்பது தான் உண்மை. அதே நேரத்தில், கட்டடம் கட்டும்போதே, தரமான பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் அப்போதே அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-governments-failed-to-do-in-slum-clearance-boards-constructions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக