Ad

வியாழன், 23 டிசம்பர், 2021

போக்சோ: டியூஷனுக்கு வந்த 9 வயது பள்ளிச் சிறுமியிடம் பாலியல் சீண்டல்! - இளைஞருக்கு சிறை

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்த வண்ணம் இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று. இது போன்றதான சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படியான ஒரு அத்துமீறல் சம்பவம் தான் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமிக்கும் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே உள்ள சோதனைக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (எ) மணிவண்ணன்(21). இவரும், இவருடைய தந்தையும் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்துள்ளனர்.

Also Read: பஞ்சாபில் தமிழ்ப் பெண்களுக்கு பாலியல் தொல்லை; கவனப்படுத்திய விகடன்; உதவிக்கரம் நீட்டிய A.K.S.விஜயன்

பாலியல் தொல்லை

மணிவண்ணனுடைய தங்கை, அதே பகுதியை சேர்ந்த சில பள்ளி மாணவிகளுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். கடந்த 22.12.2021 அன்று வழக்கம் போல, பள்ளி மாணவிகள் டியூஷனுக்கு வந்துள்ளனர். அச்சமயம், மணிவண்ணனின் தங்கை அருகில் உள்ள கடைக்கு சென்றிருக்கிறார். வீட்டில், மணிவண்ணனும் அவரின் பாட்டியும் மட்டுமே இருந்துள்ளனர். `தன்னுடைய தங்கை வரும் வரை நான் உங்களுக்கு டியூஷன் எடுக்கிறேன்' என பள்ளி மாணவிகளிடம் மணிவண்ணன் கூறியதாக சொல்லப்படுகிறது.

அப்போது வீட்டு மாடியில் வைக்கப்பட்டிருந்த நோட்டை எடுப்பதற்கு, 4-ம் வகுப்பு பயிலும் 9 வயதுடைய பள்ளி மாணவி சென்ற போது, அவருடன் மணிவண்ணனும் சென்றிருக்கிறார். உயரத்தில் இருந்த நோட்டை எடுப்பதற்கு உதவி செய்வதாக கூறி, அச்சிறு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார் அந்த நபர்.

நீதிமன்ற வளாகம் - விழுப்புரம்

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அச்சிறுமி, தனக்கு நடந்த துன்புறுத்தலை பற்றி தன் தாயிடம் தெரிவித்துள்ளார். குழந்தை கூறியதை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்கள், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், சமரசமாக செல்லலாம் என்றும், நஷ்ட ஈடு தருகிறோம் என்றும் சிலர் சிறுமியின் தந்தையை தொடர்பு கொண்டு பேசும் ஆடியோக்கள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், நேற்று (23.12.2021) காலை மணிவண்ணனை கைது செய்துள்ளனர் மகளிர் காவல்துறையினர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டக்குப்பம் மகளிர் காவல் துறையினரிடம் பேசிய போது, ``சிறுமி தரப்பின் புகாரினை தொடர்ந்து இரண்டு போக்சோ வழக்குகளை மணிவண்ணன் மீது பதிவு செய்தோம். நேற்று மாலை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, செஞ்சி துணைச் சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/youth-arrested-for-sexually-harassing-a-girl-in-villupuram-district

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக