Ad

வெள்ளி, 6 நவம்பர், 2020

தேன்குரல் சனம்... பாலாஜி மீது பிக்பாஸே காண்டான அந்த தருணம்... கேப்டன் ஆன ஆரி! பிக்பாஸ் நாள் - 33

பிக்பாஸ் டீமில் ஒரு தீவிரமான சனம் ரசிகர் இருக்கிறார் போலிருக்கிறது. ‘ஓஹோ சனம்... ஓஹோ சனம்’ பாடலைப் போட்டு மக்களை எழுப்பி விட்டார். சனமும் அந்த ரசிகருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்ஸ் சொன்னார். (‘எங்க ‘சனம்’ வெறித்தனம்... பாட்டை – அடுத்த முறை போடுங்க)
பிக்பாஸ்

மார்னிங் டாஸ்க்... சனம் மக்களுக்கு நடனம் கற்றுத்தர வேண்டுமாம். ‘'எனக்கு தெரிஞ்சதே நாலு ஸ்டெப்தான். அதை வெச்சுதான் இத்தனை நாள் ஒப்பேத்திட்டு இருக்கேன்” என்று நேர்மையாக ஒப்புக் கொண்ட சனம், ‘நிலா... அது வானத்து மேல’ பாடலை நடனத்தின் வழியாக கொத்து பரோட்டா போட்டார். கூட வந்து ஆடிய ரமேஷ் அதன் மீது குழம்பை ஊற்றினார். (ஜோடிப் பொருத்தம் ஓஹோ!).

ஓஹோ.. சனம்..’


திடீரென்று யாரோ அழும் குரல் கேட்டது. வேறு ஒன்றுமில்லை. சனம்தான் அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். நிலாவே பயந்து போய் வானத்தின் மேலே போயிருக்கும். ‘நாங்க பாடுற பாட்டுக்கு ஆடுங்க பார்க்கலாம்’ என்ற மக்கள் ‘வாழ்க்கையைத் தேடி நானும் போனேன்’ என்று பாட ‘இதற்கு எப்படிடா டான்ஸ் ஆடுவது’ என்று சலித்துக் கொண்டு சோகமான அசைவுகளைத் தந்தார் சனம்.



பாடல் வேகம் எடுக்க எடுக்க கூட்டத்தில் அமர்ந்து அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரமேஷூம் திடீரென்று வந்து ஆவேசமாக குத்தி ஆடியது, பிதாமகனின் ‘சிம்ரன்’ பாடலை நினைவுப்படுத்தியது.

பிக்பாஸ் வீட்டில் ஏறத்தாழ தனித்து விடப்பட்டிருக்கும் ஆரி, குற்றவுணர்வுடன் கேமரா முன்பு பேசினார். பாலாஜியின் தன்னம்பிக்கை பிடித்திருக்கிறதாம். ஆனால் அது இப்போது பயங்கரமாக டெவலப் ஆகி ஆணவத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்றார்.

“என் கதைல அவன் ஹீரோன்னா.. நான்தான் வில்லன்" ஆரி



“என் கதைல அவன் ஹீரோன்னா... நான்தான் வில்லன்" என்று கேமராவைப் பார்த்து பயமுறுத்துவது போல் சிரித்த ஆரி ‘தறுதலை மேட்டரில் நான் செஞ்சது தப்பு –ன்னு நிரூபணம் ஆச்சுன்னா, சாம் கால்ல மட்டுமில்லாம தமிழ்நாட்டு மக்கள் கால்லயும் விழறேன்” என்று உருகினார்.



ஒருவர் நல்லவராகவே இருந்தாலும், தான் செய்தது சரி என்று நம்பினாலும், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படும்போது மனமுடைந்து போய் விடுவார். எப்படியாவது சமூகத்தில் மீண்டும் கலக்கவே விரும்புவார். “ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறோம்’ என்கிற கிராமப் பஞ்சாயத்து தண்டனையின் பின்னணி இதுதான்.

ஆனால், இது சராசரி மனிதர்களின் மனோபாவம். சமூக சீர்திருத்த கருத்துக்களை – அந்தச் சமூகமே ஒன்று திரண்டு வந்து எதிர்த்தாலும் – எவருக்கும் அஞ்சாமல் தொடர்ந்து உறுதியாக சொன்ன உன்னதமான அறிஞர்களின் வரலாறு இங்கு நிறைய இருக்கிறது.

‘பாலாஜி.. மைக்கை மாட்டுங்க’ என்று பிக்பாஸ் எச்சரித்தும் ‘போய் உன் ஓனரை வரச் சொல்லுய்யா’ என்பது மாதிரியே அலட்சியமாக இருந்தார் பாலாஜி. ‘இருடா உனக்கு வெக்கறேன்... ஆப்பு’ என்று உள்ளுக்குள் கொக்கரித்துக்கொண்ட பிக்பாஸ், இதைக் காரணம் காட்டி லக்ஷுரி மதிப்பெண்களில் இருந்து ஐந்நூறு புள்ளிகளை உருவிக் கொண்டார்.

சம்யுக்தா உட்பட பலரும் முழுநீள ஆங்கில வாக்கியங்களைப் பேசியதால் இன்னொரு 500 மதிப்பெண்கள் போயிற்று. ஆக மீதமிருந்த 2,200 புள்ளிகளில் சிக்கனமாக தேர்வு செய்ய வேண்டியிருந்தது.



பாலாஜியினால் பாயின்ட் போன விஷயத்தை கேப்டன் சம்யுக்தா அவரிடம் வலிக்காமல் சுட்டிக் காட்ட ‘போன வாரம் நான்தானே சம்பாரிச்சுக் கொடுத்தேன். அப்புறம் என்ன.. அடுத்த வாரம் நானே இதை ஈடுகட்டுவேன்’ என்று வீட்டில் சம்பாதிக்கத் துவங்கியிருக்கும் மூத்த மகன் மாதிரி அலட்சியமாக பேசினார் பாலாஜி.



“நான் கட்டியிருக்கிற சிகப்பு புடவை எப்படி இருக்கு... காலைல இருந்து பார்க்கறேன்.. யாருமே சொல்ல மாட்றீங்க’' என்று ஆரி ப்ரோவிடம் நிஷா சிணுங்க... மூக்குத்தி அம்மன் மாதிரி லட்சணமா இருக்கீங்க” என்று புகழ்ந்தார் அவர். 'மத்தவங்க பாராட்டுக்களை கேட்டு வாங்கி இம்சைப்படுத்துகிறார்’ என்கிற ரியோவின் (அதாவது சுச்சியின்) புகாரை நிஷாவே இதன் மூலம் உறுதி செய்தார்.

''இந்த வாரம் ஓய்வெடுக்கும் அறைக்கும் ஓய்வு கொடுத்துட்டோம்’' என்று ரைமிங்காக பிக்பாஸ் அறிவிக்க மக்கள் உற்சாகமானார்கள். குறிப்பாக ஆரி. வெற்றிகரமாக மூன்றாவது வாரமும் உள்ளே அனுப்பி விடுவார்களோ என்கிற பீதியில் இருந்தாரோ என்னவோ... பாலாஜியும் பயங்கரமாக உற்சாகமானார்.

‘இந்த வாரம் முழுவதும் சிறப்பாகவும் சுவாரசியமாகவும் செயல்பட்ட நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ –



இதில் முதன்முறையாக சோமின் பெயர் நிறைய அடிபட்டது நல்ல விஷயம். ‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்’ என்று பாரதிதாசன் எழுதியது போல ரம்யாவின் உத்வேகத்தினால் சோம் சிறப்பாக செயல்படத் துவங்கியிருக்கிறார் போலிருக்கிறது. ‘'கடந்த முறை அவரின் கேப்டன்ஷிப் வாய்ப்பை பறித்து விட்டேன்'’ என்கிற காரணத்தைச் சொல்லி சோமை முன்மொழிந்தார் பாலாஜி.



ஆரி ப்ரோவின் பெயரும் நிறைய அடிபட்டது. பராசக்தி சிவாஜிக்குப் பிறகு ‘கோர்ட் ரூம் டிராமாவில்’ சிறப்பாக வசனம் பேசியவர் ஆரிதானாம். நிஷாவின் பெயரை முன்மொழிந்த ரம்யா ‘'கடந்த முறை அவரை ரீப்ளேஸ் செய்து விட்டேன்'’ என்று பாவமன்னிப்பு கோரினார்.

நிஷா, சோம், ஆரி



ஆக... தலைவர் போட்டியில் நிஷா, சோம் மற்றும் ஆரி ஆகியோர் இருப்பார்கள். “என்கிட்ட பர்சனலா ஏதாவது சொல்லணுமா பிக்பாஸ்?” என்று நிஷா கொஞ்சலாக கேட்க “போய் லெமன் ரைஸ் செய்ற வழியைப் பாருங்க’ என்று பிக்பாஸ் பதில் அளித்ததைக் கேட்டு காண்டாகி விட்டார்.

ஆரி சிறப்பாகப் பேசினார் என்று பலர் சொன்னதைக் கேட்டு பாலாஜி டீம் அனத்திக் கொண்டே வந்தது. “ஒரே ஒரு வழக்குலதான் ஆரி ஜெயிச்சாரு.. அவரு சிறப்பா பேசினாராமா.. இந்த பாலாஜியை கார்னர் பண்ணனும்னு நெனக்கறாங்க” என்று அலட்டிக் கொண்டார் பாலாஜி. அதாவது பிக்பாஸ் வீட்டில் எது நிகழ்ந்தாலும் அதன் மையமாக அவர்தான் இருப்பாராம்.



“ஆரி என்னை அப்படிக் கத்தினார். யாருமே தட்டிக் கேக்கலை.. இப்ப அவருக்கு போய் ஓட்டு போட்டிருக்காங்க” என்று ஆரம்பித்த சாம் பிறகு கலங்கத் துவங்க அவருக்கு ஆறுதல் சொன்னார் ஆஜித். (ஆரிக்கு வாக்களித்தவர்களில் ஆஜித்தும் ஒருவர்).

பிக்பாஸ்



சாம் கூட்டத்தைக் கூட்டி ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க, சம்பந்தப்பட்ட நபரான ஆரி அந்தப் பக்கம் வந்து ‘என்னாச்சு’ என்று விசாரிக்க மக்கள் சைலன்ட் ஆகி ஒவ்வொருவருத்தராக நகர்ந்து சென்றது சுவாரசியமான காட்சி. ‘இல்ல ப்ரோ... விவாத மன்றத்துல நீங்க சாமை நோக்கி கத்துனீங்கள்ல. அது விஷயமா வருத்தமா இருக்காங்க’ என்று விளக்கம் தந்து கொண்டிருந்தார் ரியோ.

அடுத்ததாக மிக்ஸர் கிரைண்டர் பிரமோஷன் நிகழ்ச்சி. வீடு மூன்று அணிகளாகப் பிரிந்து செயல்பட வேண்டும். பழத்துண்டுகள், சப்பாத்தி மாவு, காய்கறி வெட்டுதல் ஆகிய மூன்று விஷயங்களை செய்ய வேண்டும்.

பிக்பாஸ்



போட்டி துவங்குதற்கு முன்பு ரியோ – சோம் – கேபி கூட்டணி செய்த காமெடி நன்றாக இருந்தது. யோகா செய்வதால் கையில் செல்போன் இருப்பது போலவே ஃபீல் செய்ய முடிகிறது என்று ரியோ ஆரம்பிக்க ‘ஷாப்பிங் சானலில்’ பேசுகிற ஆசாமிகளைப் போலவே சோம் பேசிக் காட்டியது சுவாரசியம்.

கடந்த சீஸனில் சாண்டி டீம் செய்த குறும்புகள், கல்லூரி வளாகத்தை நினைவுப்படுத்துகிறது என்று முன்பு குறிப்பிட்டிருந்தேன். சோம், ரியோ ஆகிய இருவரும் செய்யும் குறும்பும் நகைச்சுவையும் ஓரளவிற்கு அதை ஈடு கட்டுகிறது. நேற்று ரியோவின் ‘மாஸான’ என்ட்ரிக்கு சோம் பின்னணி இசையில் செய்த குறும்பும் ரசிக்கத்தக்க காட்சியாக இருந்தது.



மிக்ஸி தொடர்பான போட்டி துவங்கியது. 'ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நூறு ரூபாய்க்கு நடிப்பதுபோல, சம்பந்தப்பட்ட பிராண்டிற்கு கோஷம் போட்டு மிகையாக விளம்பரம் செய்தார்கள் போட்டியாளர்கள். (சம்பந்தப்பட்ட பிராண்ட் ஆசாமிகள் கண்ணில் ஜலம் வந்திருக்கும்!). இந்தப் போட்டியில் பழைய சுரேஷை ஓரளவிற்கு பார்க்க முடிந்தது. உற்சாகமாக பேசி பங்கேற்றார்.

அனிதா_______________________________________



சனம் அணியும் சுரேஷ் அணியும், டாஸ்க்கை முனைப்புடன் செய்வதை விடவும் விளம்பரம் பேசி சீன் போடுவதில் அதிக ஆர்வத்தைக் காட்டியதால் போட்டியில் தோற்றுப் போனது. பழத்துண்டுகள் வெட்டிய அர்ச்சனா அணி வெற்றி பெற்றதாக அனிதா____________________________________________________________________________________________________________________ அறிவித்தார். (அனிதா ஸ்பேஸ் இல்லைன்னு புலம்புறதாலதான் இந்த ஸ்பேஸ்... இந்த ஸ்பேஸ் போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா)

புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தருணம். வழக்கம் போல் கோக்குமாக்கான ஒரு டாஸ்க்.

தலைவர் போட்டியில் இருக்கும் மூன்று போட்டியாளர்களின் உடம்பிலும் ஒரு கயிற்றைச் சுற்றி விடுவார்களாம். அதன் முனை ஒரு தூணுடன் இணைக்கப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் தங்களைத் தாங்களே சுற்றி வந்து கயிற்றை விடுவிக்கும் அதே சமயத்தில் அதை உருளையில் சுற்றிக் கொண்டு வர வேண்டும். (ஏதாவது புரியலைன்னா விட்டுருங்க).

பிக்பாஸ்



தனக்கு உதவி செய்ய பாலாஜியை அழைத்து ஆச்சர்யப்படுத்தினார் ஆரி. பழைய விஷயங்களை மறந்து நட்பைப் புதுப்பிக்க வேண்டும் என்கிற ஆரியின் ஆர்வம் தெரிந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத பாலாஜி, முதலில் தயங்கி மறுத்து விட்டு பிறகு கயிறு சுற்றி விட முன்வந்தார்.



நபரின் உடலில் சிக்கிக் கொள்ளாதவாறு கயிறு கட்டினால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். போலவே போட்டியில் செயல்படுபவரும் மிக கவனத்தோடும் கட்டுப்பாட்டோடும் சுற்றும் வேகத்தை நிர்ணயித்துக் கொண்டால் வெற்றியின் சதவீதம் கூடும். இதைச் சரியாகப் பின்பற்றிய ஆரி வெற்றி பெற்றார்.



இது போன்ற உடல் ரீதியான போட்டிகளில் பெண் போட்டியாளர்கள் தடுமாறுவது இயல்பே. பாவம் நிஷா... சுற்றிச் சுற்றி வந்து ஏறத்தாழ மயக்கம் வந்து கீழே அமர்ந்து விட்டார். ஒரு நிலையில் அவர் சுற்றிய வேகத்தில் தூணே சாய்ந்து விடும் போலிருந்தது.



ஆரி வெற்றியடைந்ததால் சாம் முகத்தில் தயக்கமும் சங்கடமும் தெரிந்தது. நிஷா அல்லது சோம் வெற்றியடைய வேண்டும் என்று அர்ச்சனா அணி விரும்பினார்கள். இது வெளிப்படையாகத் தெரிந்தது. நிஷாவை நோக்கி உரத்த குரலில் கோஷங்களை எழுப்பிக் கொண்டேயிருந்தார் ரியோ.

ஆக.. சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ.. போல இரண்டு முறை ஜெயிலுக்குப் போனாலும் இந்த முறை கேப்டன் ஆகும் அளவிற்கு உயர்ந்து விட்டார் ஆரி. இதற்கு அவர் தகுதியானவர்தான்.



அடுத்ததாக அணி பிரிக்கும் வேலையில் இறங்கினார் புதிய கேப்டன். ‘நான் சொல்றதைக் கேளுங்க’ என்று பிடிவாதம் பிடிக்காமல் போட்டியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அணிகளைப் பிரித்தது சிறப்பு. ஒவ்வொரு அணியிலும் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுத்து அன்றைய நாளின் விவகாரங்களை அன்று இரவே கலந்துரையாடிக் கொள்ளலாம் என்கிற புதிய பாணியை அறிமுகப்படுத்தினார்.



‘கிச்சன் டீமிற்கு நீங்கதான் கேப்டன்’ என்றதும் ‘நானா?’ என்று திகைத்துப் போனார் ரமேஷ். ‘நான் பாட்டுக்கு இருக்கற இடம் தெரியாம இருக்கேன். என் கிட்ட ஏண்டா வம்பு பண்றீங்க?’ என்பது மாதிரியே அவரது முகபாவம் இருந்தது.



கடந்த அணியினர் சரியாகப் பொறுப்புகளை முடித்து விட்டார்களா என்பதை சோதித்து விட்டு பிறகு அதை புதிய அணியிடம் மாற்றி விடுங்கள்’ என்று சாமிடம் சொன்னார் ஆரி. இது தொடர்பாகத்தான் இந்த வார துவக்கத்தில் ஆரிக்கும் சாமிற்கும் இடையில் பஞ்சாயத்து நடந்தது. அந்தச் சூட்டை ஆரி மறக்கவில்லை.



வெளியில் இருக்கும் நமக்கு கூட ‘இன்றைக்கு என்ன கிழமை’ என்பது சட்டென்று மறந்து காலண்டரைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் இதைச் சரியாக நினைவு கொள்கிறார்கள். ஒரு நெருக்கடியான சூழலில் மாட்டிக் கொண்டால் மூளை எக்ஸ்ட்ராவாக வேலை செய்யும் போலிருக்கிறது.



மிக்ஸி கம்பெனி சார்பில் பரிசுகளும் உணவும் வழங்கப்பட்டது. ‘ப்பா.. எவ்ள நாளைக்கு அப்புறம் நல்ல சோறு’ என்கிற ஃபீலோடு கண்ணை மூடி சுவைத்து பர்கரை விழுங்கினார் ஷிவானி.

ஷிவானி

விளக்குகள் அணைக்கப்பட்டதும் இன்றைய நாள் முடிவடைந்து விட்டது போல என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. பிக்பாஸ் வீட்டில் நள்ளிரவு வரைக்கும் பேய் போல விழித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சம்யுக்தாவிற்கும் சுரேஷிற்கும் இடையில் உரையாடல் நடந்தது. யார் முதலில் அழைத்தது என்று தெரியவில்லை. ‘குசும்பு’ என்கிற வார்த்தையை சம்யுக்தா உபயோகித்ததால் சுரேஷ் காண்டில் இருக்கிறார் அல்லவா? அது தொடர்பான விளக்கத்தை அளித்துக் கொண்டிருந்தார் சாம். இந்த உரையாடல் பெரும்பாலும் முழு நீள ஆங்கில வாக்கியங்களில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. (வழக்கம் போல் சப்-டைட்டில் போட்டார்கள்).



‘குசும்பு –ன்ற வார்த்தையை நான் ஸ்போர்டிவ்வாதான் சொன்னேன். அதில் எவ்விதமான எதிர்மறைப் பொருளும் இல்லை’ என்று சம்யுக்தா சொன்னாலும் சுரேஷ் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.



‘சந்தேகத்தின் பலனை உங்களுக்கு அளிக்கிறேன். ஆனால் கேப்டனுக்கே ரூல்ஸ் தெரியலைன்னா எப்படி? எதுவா இருந்தாலும் கேப்டன் கிட்ட வந்துதான் புகார் சொல்லணும்... கேப்டனே இப்படி இருந்தா?” என்பது போல் சுரேஷ் அடுக்கிக் கொண்டே செல்ல ‘கேப்டன்ற வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லாதீங்க” என்றார் சம்யுக்தா எரிச்சலாக. அது குத்தப்படும் வார்த்தையாக அவருக்குத் தெரிந்தது. ‘பின்னே எப்படிம்மா உன்னை கூப்பிடறது” என்று அதற்கும் இடக்கு பேசினார் சுரேஷ்.



சுரேஷ் சமாதானம் ஆகாததால் சம்யுக்தா கண்கலங்கத் துவங்க, பாலாஜி டீம் வந்து சமாதானப்படுத்தியது. சாம் அழுவதைப் பார்த்த சுரேஷ் மறுபடியும் திரும்பி வந்து ‘நான் உங்களைக் காயப்படுத்தறதுக்காக சொல்லலை’ என்று சமாதானம் பேசி விட்டு மறுபடியும் அர்ச்சனா டீமிடம் சென்று நடந்தவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தார்.



அவர்கள் ஏதோ விளக்கம் அளிக்க, அங்கும் உரையாடலை பாதியில் முறித்துக் கொண்டு வெளியே வந்தார். இதற்கிடையில் அழுது கொண்டிருந்த சாமை சமாதானப்படுத்தி சிரிக்க வைத்தது பாலாஜி டீம். இதைக் கண்டு பொறுக்காத சுரேஷ் மறுபடியும் அர்ச்சனா டீமிடம் சென்று ‘பார்த்தீங்களா... நான் அந்தப் பக்கம் போறப்ப எல்லாம் சிரிக்கறாங்க” என்று அதையும் புகார் செய்தார். என்னய்யா... இது சிரிச்சாலும் பிரச்னை... அழுதாலும் பிரச்னை என்று கேட்கும்படி ஆகி விட்டது நிலைமை.

முதியவர்கள் ஒரு கட்டத்தில் குழந்தையின் மனநிலைக்கு சென்று விடுவார்கள். வீண் பிடிவாதமும் வீம்பும் அவர்களுக்கு வந்து விடும். ஆனால் வித்தியாசம் என்னவெனில் குழந்தையின் பிடிவாதத்தில் வெறும் அறியாமையும் களங்கமின்மையும் மட்டுமே இருக்கும். ஆனால் பெரியவர்களின் பிடிவாதத்தில் வன்மமும் வறட்டுக் கெளரவமும் இணைந்து விடும்.

குழந்தைகள் சில நிமிடங்களிலேயே பிரச்னையை மறந்து விட்டு இயல்பாக சிரிக்கத் துவங்கி விடும். ஆனால் பெரியவர்கள் அதை வாரக்கணக்கில் இழுப்பார்கள். சுரேஷின் வீண் பிடிவாதம் இதற்கு நல்ல உதாரணம்.

இன்று பஞ்சாயத்து நாள். ‘தறுதலை’, ‘குசும்பு’, ‘நான் பொய் சொல்லலை… என்று பல விவகாரங்கள் தீர்ப்பதற்காக லைன் கட்டி இருக்கின்றன. கமல் என்ன செய்வார் என்று பார்க்கலாம்.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/aari-as-new-captain-sureshs-comeback-bigg-boss-tamil-season-4-day-33-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக