Ad

புதன், 4 நவம்பர், 2020

10 வயது சிறுவனை வெட்டி வீசிய கும்பல்! - வாணியம்பாடியை உலுக்கிய கொடூரம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்துள்ள வெப்பாலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (58). இவரது தம்பி சாம்ராஜ். இருவரின் குடும்பத்தினருக்கும் இடையே பல வருடங்களாக நிலத்தகராறு இருந்துவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் மோதலாக மாறியது. அந்த சமயம் ஆத்திரத்திலிருந்த பெருமாள், தம்பி சாம்ராஜையும், அவரது குடும்பத்தினரையும் கத்தியால் தாக்கியதாகவும் சொல்கிறார்கள்.

கொலை செய்யப்பட்ட பெருமாள்

தொடர்ந்து, மோதல் நீடித்துவந்த நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு பெருமாள் தனது 10 வயது பேரன் சந்துருவுடன் மாவு அரைப்பதற்காக வெப்பாலம்பட்டி கூட்ரோடுப் பகுதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். இடையில் அவர்களை வழிமறித்த மர்ம நபர்கள், பெருமாளையும், அவரது பேரனையும் கொடூரமாக அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பினர். பெருமாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துவிட்டார்.

Also Read: சென்னை:`அக்காவுக்கு ஜூஸ்; மாமாவுக்கு விஷம்!' - சொத்துக்காகக் கொலை... சகோதரிகள் சிக்கிய பின்னணி

தலை, நெற்றிப் பகுதியில் பலத்த வெட்டு விழுந்ததில் அவரது பேரன் சந்துரு உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்துகிடந்தான். அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி சிறிது நேரத்தில் சந்துருவும் இறந்துவிட்டான். இச்சம்பவம் தொடர்பாக, வாணியம்பாடி டி.எஸ்.பி பழனிசெல்வம் மற்றும் தாலுகா இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீஸார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட சந்துரு

முதற்கட்ட விசாரணையில், நிலத்தகராறில் ஏற்பட்டிருந்த முன்விரோதம் காரணமாகவே தாத்தாவும், பேரனும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதற்கேற்ப, கொலையான பெருமாளின் தம்பி சாம்ராஜ் உட்பட இரண்டுப் பேர் தலைமறைவாகியிருக்கிறார்கள். அவர்களைப் பிடிக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கொலையான சிறுவன் சந்துரு அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவந்தான். இரக்கமின்றி சிறுவனை வெட்டி வீசியிருக்கும் சம்பவம் வாணியம்பாடியை உலுக்கியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/10-year-old-brutally-murdered-near-vaniyambadi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக