Ad

வியாழன், 5 நவம்பர், 2020

`தோசைப்பிரியன்' சித்தார்த், ஷீலா கொடுத்த ஷாக்... அபிக்கு அடுத்தடுத்த ட்விஸ்ட்! #VallamaiTharayo

பொதுவாக நீண்ட தூர கார் பயணம் ஜாலியாக இருக்கும். அதிலும் புதிதாகத் திருமணமானவர்களுக்கு இந்தப் பயணம் எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும்! `முன்பே வா என் அன்பே’ பாடலை முணுமுணுக்கும் அபியிடம், `இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்குமா' என்று கேட்கும் சித்தார்த், `கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே’ போன்ற பழைய பாடல்கள்தான் தனக்குப் பிடிக்கும் என்கிறான்.

Vallamai Tharayo

`பேசும்போது பாடல் எதற்கு' என்று அதை அணைத்துவிடுகிறான். அபியின் முகம் மாறுகிறது. பேசுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கும்போது பாடலை நிறுத்தச் சொல்வதில் பிழை ஒன்றும் இல்லை. அபிக்குப் புதுப்பாடல்களைப் பிடிப்பது போல சித்தார்த்துக்குப் பழைய பாடல்கள் பிடிக்கின்றன, அவ்வளவுதான். ஆனால், இந்த விஷயங்கள்தான் பின்னால் பிரச்னைகள் உருவாகக் காரணமாக இருக்கும் போலிருக்கிறது!

சித்தார்த் அமெரிக்காவில் தனியாக இருப்பதால் ஊருக்கு வரும்போது வீட்டைவிட்டு வெளியே செல்லாமல், உறவுகளுடன் பொழுதைக் கழிக்கவும், நம் உணவுகளைச் சாப்பிடவும்தான் பிடிக்கும். அதனால்தான் நான் ஹனிமூன் பற்றி யோசிக்கவில்லை என்கிறான். அவன் சொல்வது சரியாக இருந்தாலும் மனைவிக்கும் விருப்பமும் எதிர்பார்ப்பும் இருக்கும் என்பதை யோசிக்க வேண்டாமா? அக்காவிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்காமல் விட்டுக் கொடுத்துப் போகும் சித்தார்த், அபியை டாமினேட் செய்துகொண்டே இருக்கிறான்.

Vallamai Tharayo

அபிக்கு என்ன வேண்டும் என்று அவள் விருப்பத்தைக் கேட்காமலே, தோசை ஆர்டர் செய்கிறான். `தோசை இல்லை' என்றவுடன் சித்தார்த்தின் கோபம் அதிகமாகிறது. அபியை அழைத்துக்கொண்டு சில ஹோட்டல்களுக்குச் செல்கிறான். அங்கும் தோசை இல்லை. இறுதியில் ஒரு ஹோட்டலில் அமர்கிறார்கள். அங்கு சப்பாத்திதான் இருக்கிறது என்றதும் அதைக் கொண்டு வரச் சொல்கிறாள் அபி.

அப்போது காலேஜ்மேட் ஷீலா வருகிறாள். ``அபி ரொம்ப நல்லா படிக்கிறவ. அனு, பொற்கொடிதான் இவ ஃபிரெண்ட்ஸ். யாரையும் நிமிர்ந்துகூட பார்க்க மாட்டா” என்று ஷீலா சொல்லிக்கொண்டிருக்கும்போது அவள் கணவன் சதீஷ், தோசையுடன் வருகிறான்.

``உங்களுக்கு மட்டும் எப்படித் தோசை கிடைச்சது?” என்று சித்தார்த் ஆச்சர்யமாகக் கேட்க, ``பொண்டாட்டிக்காக கிச்சன்ல தாஜா செஞ்சு வாங்கிட்டு வந்தேன். அவங்க ஹேப்பியா இருந்தாதானே நாமும் ஹேப்பியா இருக்க முடியும்!” என்கிறான் சதீஷ்.

உடனே, ``பொண்டாட்டிக்காக யார் காலிலும் விழ முடியாது” என்கிறான் சித்தார்த்.

சதீஷ் காதல் திருமணமா என்று கேட்க, ``வாய்ப்பே இல்லை. ஆமா, அபி உன் பின்னாலேயே ஒருத்தன் சுத்திக்கிட்டு இருந்தானே, அவன் பேரு என்ன?” என்று கேட்டு, அந்தச் சூழலை இன்னும் கடுமையாக மாற்றிவிடுகிறாள் ஷீலா.

Vallamai Tharayo

அபியும் சித்தார்த்தும் ஒரே நேரத்தில் அதிர்ந்து போகிறார்கள்.

என்ன ஆகப் போகிறதோ?

இன்று இரவு 7 மணிக்குப் பார்ப்போம்!

- எஸ்.சங்கீதா


source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-readers-review-for-episode-9

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக