Ad

திங்கள், 2 நவம்பர், 2020

குமரி: `எங்களையும் என் புருஷன் கிட்டயே அனுப்பி வையுங்க!’ - மகள்களுடன் விபரீத முடிவெடுத்த பெண்

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் அருகே நெசவாளர்  காலணி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(32). இவர் ஒரு ஆண்டுக்கு முன்பு நிகழ்ந்த விபத்துக்குப் பின்னர் ஏற்பட்ட உடல்நலக்குறைவால்  உயிரிழந்தார். ரஞ்சித் குமாருக்கு திருமணமாகி ராசி (29) என்ற மனைவியும், அக்சயா(5), அனியா(3) ஆகிய மகள்களும் இருந்தனர். ரஞ்சித்குமாரின் மறைவுக்கு பிறகு அவரது தாய் தந்தையுடன் அவரது வீட்டிலேயே ராசி வசித்துவந்தார்.

ரஞ்சித்குமாரின் தந்தை ராமதாஸ் (72) கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ராசி மனச்சோர்வுடன்  காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று தனது வாட்ஸ்-அப்  ஸ்டேட்டஸில் கணவனை பிரிந்து வாழ இயலவில்லை என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தனது இரண்டு மகள்களுக்கும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை கொடுத்ததோடு, அவரும் தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளார்.

ஆனால் ராசி அதிகாலையில் மயக்கம் தெளிந்து எழுந்து குழந்தைகளை பார்த்துள்ளார். குழந்தைகள் இறந்த நிலையில் இருந்ததைக் கண்ட ராசி அவரது அறையில் உள்ள பாத்ரூமிற்குச் சென்று உடலில் தீ வைத்துள்ளார். தீ லேசாக எரிந்த நிலையில் அணைந்துள்ளாது. ஆனால் மீண்டும் மயக்கமடைந்த ராசி அதே இடத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

ராசியின் குழந்தைகள்

இன்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் ராசியின் அறைக்கதவு  திறக்காததால் ரஞ்சித்குமாரின் பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினரின்  உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்த போது ராசி மற்றும் இரண்டு குழந்தைகளும் இறந்து கிடந்து உள்ளனர். இச்சம்பவம் குறித்து நேசமணிநகர்  போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீஸார் மூன்று உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ராசி எழுதிய கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், "ராசி எழுதுவது, செழியன் அண்ணா, சரிதா அண்ணி, செந்தில் அண்ணா, ரேகா அவர்களுக்கு, நானும் பிள்ளைகளும் சிலிப்பிங் டேப்லெட் சாப்பிட்டோம். தயவு செய்து என்ன மன்னிச்சிருங்க. நான் எனக்கு ஒரு வருஷம் டைம் கொடுத்து அதுக்கு பிறகுதான் இந்த முடிவு எடுத்திருக்கேன். உங்க யாராலயும் இத தாங்கிக்கமுடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் என்னால இப்பிடி ஒரு வாழ்க்கைய வாழமுடியாது. பிளீஸ் ஸாரி, என்னையும் என் பிள்ளைங்களையும் என் புருஷன் கிட்ட அனுப்பிவையுங்க. பிளீஸ், என் போன்ல வீடியோ போட்டிருக்கேன் அத பாருங்க" என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்கொலை செய்துகொண்ட ராசி

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "ராசியின் கணவர் மெடிக்கல் ஸ்டோர் வைத்திருந்தார். அதற்காக கடன் வாங்கியிருக்கிறார். பின்னர் ஒரு விபத்து ஏற்பட்டதில் காயம் அடைந்தவர் குணாமான பின்னர், மருந்து சரியாக எடுத்துக்கொள்ளாத காரணத்தால் இறந்ததாக கூறப்படுகிறது. கணவன் வாங்கிய கடன் சுமை அதிகமாக இருந்ததாலும், கணவன் இறந்த சோகத்தாலும் ராசி தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. தொடர்ந்து விசாரணை நடத்து வருகிறொம்” என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/women-killed-her-kids-and-suicided-after-her-husbands-death

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக