நண்பரோடு சேர்ந்து வாய்க்கால் கரையில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர், தடுமாறி தண்ணீருக்குள் விழுந்து மூழ்கி இறந்த சம்பவம், அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திலிருக்கும் மாயனூர் கதவணைக்கு மேல்புரத்தில் ஓடுகிறது, கட்டளை மேட்டுவாய்க்கால். அதே கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திலுள்ள வெள்ளக்கவுண்டன் பட்டியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் கரண். இவர், புலியூரிலுள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்துவந்தார்.
Also Read: கரூர்: சிறுவன் காரில் கடத்தல்; ஒரு மணி நேரத்துக்குப் பின் விடுவிப்பு! - வடமாநிலக் கும்பல் கைவரிசையா?
தன் நண்பரோடு சேர்ந்து கட்டளை மேட்டுவாய்க்காலில் குளிக்கச் சென்றிருக்கிறார். அப்போது, கட்டளை மேட்டுவாய்க்கால் கரை ஓரமாக நின்று, இருவரும் செல்ஃபி எடுத்திருக்கிறார்கள்.
தொடர்ச்சியாக செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த இருவரும், கரையோரமாக நின்று செல்ஃபி எடுத்திருக்கிறார்கள். அப்போது நிலைதடுமாறிய கரண், கால்கள் தடுமாறி கட்டளை மேட்டுவாய்க்காலில் ஓடும் தண்ணீரில் விழுந்தார். இதனால், பதறிப்போன நண்பர், நீரில் மூழ்கிய கரணைக் காப்பாற்ற முயன்றார். ஆனால், அவரால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் பதறிபோன அவர், அருகிலுள்ள மாயனூர் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
Also Read: சென்னை: நீரில் மூழ்கி அடுத்தடுத்து உயிரிழந்த சகோதரிகள் - பெற்றோர்கள் கண்முன் நடந்த சோகம்!
அவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, மாயனூர் காவல் நிலைய போலீஸார், சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள் கரண் தண்ணீரில் முழுமையாக மூழ்கி மாயமாகிவிட்டார். இதனால், உடனடியாக கரூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஸ்பாட்டுக்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்களும், மாயனூரைச் சேர்ந்த பொதுமக்களும் கட்டளை மேட்டுவாய்க்காலில் மூழ்கிய கரணைத் தேடினர்.
சுமார் ஒரு மணி நேரத் தேடலுக்குப் பிறகு, நீருக்கு அடியில் உயிரற்ற நிலையில் இருந்த கரணின் உடலை மீட்டு, கரைக்குக் கொண்டுவந்தனர். சரியாக நீச்சல் தெரியாத கரண், தண்ணீரில் மூழ்கி இறந்தது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது குறித்து, வழக்கு பதிவு செய்த மாயனூர் காவல் நிலைய போலீஸார், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். வாய்க்காலில் நண்பரோடு குளிக்கச் சென்ற இளைஞர், செல்ஃபி எடுக்க முயன்றபோது வாய்க்காலில் தவறி விழுந்து இறந்த சம்பவம், அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/accident/karur-youth-drowned-in-canal-body-recovered-after-one-hour
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக