Ad

வெள்ளி, 16 டிசம்பர், 2022

``டெல்லிக்கே ராஜாவானாலும், தமிழ்நாட்டில்...” - `பாஜக வளர்ச்சி’ குறித்து செல்லூர் ராஜூ

“யாராலும் குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு, கடந்த எட்டு ஆண்டுகளாக எந்தவொரு லஞ்ச லாவண்யத்துக்கும், ஊழலுக்கும் இடம் கொடுக்காமல் மத்திய அரசைச் சிறப்பாக நிர்வகிக்கும் பிரதமர் மோடிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது’ என்று குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அ.தி.மு.க தரப்பிலிருந்து முதல் கருத்தை உதிர்த்திருந்தார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ. அவரிடம் நம் தரப்பிலிருந்தும் சில கேள்விகளை முன்வைத்தோம்!

``’குஜராத் மாடல்’ என்று தொடர்ந்து பாஜக பிரசாரம் செய்து வரும் நிலையில் இந்த வெற்றி தமிழ்நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?”

``மோடியை பொறுத்தவரை நல்லவர் வல்லவர். அவர் தமிழையும், தமிழ் மொழி கலாசாரத்தையும் உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார். எத்தனையோ பிரதமர்கள் இந்தியாவை ஆண்டார்கள். அப்படி எந்த பிரதமரும் இது போல் தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்தியதில்லை. இதனால் குஜராத்தில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அவர்கள் செய்வதை தமிழக மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது வரும் தேர்தலில்தான் தெரியும். அதேநேரத்தில் அ.தி.மு.க தலைமையில் கூட்டணி அமைந்தால் மாபெரும் வெற்றிக்கான வாய்ப்புகள் இருக்கும். ஏனென்றால் படை தளபதிகள், போர்ப்படை வீரர்கள், அம்மாவின் பிள்ளைகள் நிறைந்த கட்சி அ.தி.மு.க. கடந்த பத்து ஆண்டுகளில் சிறந்த ஆட்சியை, வரலாற்றில் அழிக்க முடியாத திட்டங்கள் எல்லாம் அ.தி.மு.க கொடுத்தது. அதை இன்றும் மக்கள் எண்ணி பார்க்கிறார்கள். எனவே அதிமுக தலைமையில் பா.ஜ.க இணைந்து செயல்பட்டால் சிறப்பான வெற்றியை பெறுவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு”

மோடி

``ஆனால், உங்கள் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர், ‘அ.தி.மு.க இல்லாமலேயே நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம்’ என்கிறரீதியில் கருத்து தெரிவித்திருக்கிறாரே?”

அண்ணாமலை

``எந்த கட்சியும் யாரை நம்பியும் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த திராவிட பூமியில் எங்க கட்சியின் தலைமையில் அமையும் கூட்டணியைத்தான் மக்கள் ஆதரிப்பார்கள். என்றைக்கும் திராவிட இயக்கங்கள் அகில இந்திய கட்சியின் கீழ் போய் நின்றதாக வரலாறு கிடையாது. எங்களை நம்பி வருபவர்களை நாங்கள் கை தூக்கி விடுவோம், உயிரைக் கொடுத்து காப்பாற்றுவோம், தோளில் தூக்கிக்கொண்டு சுமப்போம் , பல்லாக்கில் வைத்துக்கொண்டு ஆடுவோம்... அவர்கள் தலைமையில் நாங்கள் சேர்வோம் என்று நினைப்பது நடக்காத விஷயம். அவர்களும் இதுவரை அப்படி சொல்லவும் இல்லை. எனவே கூட்டணி முடிவாகும் போது அதைப்பற்றி பேசுவோம்”

``பா.ஜ.க தொடர்ந்து கொள்கை ரீதியாக எதிர்க்கட்சி நாங்கள்தான், தமிழகத்தில் எங்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்கிறார்களே?”

“பா.ஜ.க வளரும் கட்சி. அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். ஒருவர் பேட்டி கொடுப்பதால் அந்த கட்சி வளர்ந்துவிட்டது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. பேட்டி நல்லா கொடுக்குறாங்க அவ்வளவுத்தான். அ.தி.மு.க-வில் நகரம் முதல் கிராமம் வரை விரிந்து பறந்திருக்கும் அமைப்பு போல் அக்கட்சிக்கு இருக்கிறதா. டெல்லிக்கே ராஜாவாக இருந்தாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை வளர்ந்து கொண்டு இருக்கும் கட்சி பா.ஜ.க”

ஜெயலலிதா நினைவு தினம்

``ஜூலை 11-ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழுவில் குறிப்பிட்டப்படி பொதுச்செயலாளருக்கான தேர்தல் நவம்பர் 11-ஆம் தேதி நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான எந்தவித ஏற்பாடுகளும் இல்லையே?”

“வழக்கு மன்றத்தில் இருக்கும் ஒரு விஷயத்தை பற்றி பேசுவது ஏற்புடையதாக இருக்காது..”

``முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அன்று கூட்டிய கூட்டத்தில் முதலிடம் டி.டி.வி, இரண்டாம் இடம் ஓ.பி.எஸ், மூன்றாம் இடம்தான் இ.பி.எஸ்-க்கு என்று கூறப்படுகிறதே?”

“அப்படி எல்லாம் ஏதும் கிடையாது... எங்களுக்கான கூட்டம் இருந்தது. எல்லா அ.தி.மு.க தொண்டர்களும் யார் உண்மையான தலைவரோ, அவர்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். அதனால் நிச்சயமாக எங்கள் பக்கம்தான் வலுவாக இருக்கிறார்கள். எனவே அன்றைய நாளில் வந்தது பற்றி எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள அவசியமில்லை. அதேவேளையில் அனைத்து அ.தி.மு.க தொண்டர்களும் தேர்தல் நேரத்தில் ஒன்றாகத்தான் இருப்பார்கள்”

முதல்வர் ஸ்டாலின்

“’ஸ்டாலின் உறுமினால் பூனை போல் பதுங்கும் தமிழக பா.ஜ.க’ என்று சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்திருக்கிறாரே?”

“பா.ஜ.க பதுங்குவது போல் தெரியவில்லையே... ஆனால், தமிழ்நாட்டு அமைச்சர்கள் செய்யும் தவறுகளைப் பார்த்துதான் பதுங்குகிறார்கள் போல் தெரிகிறது. நேர்மை, நியாயம் என்று பேசக்கூடிய மத்திய பா.ஜ.க அரசு தாங்கள் மட்டும் நேர்மையாக இருந்தால் பத்தாது. இங்கு தமிழ்நாட்டு அமைச்சர்கள் செய்யும் தவறுகள், அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீது துணிந்து பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும்”

இந்த கேள்வி பதில்களோடு 18.12.2022 தேதியில் வெளியான ஜூ.வி இதழில்

“கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணி அமைந்தது. அப்போது ஏன் வெற்றி கிடைக்கவில்லை?”

“ `பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில், முதல் ஆறு ஆண்டு சீரழிவு, கடைசி நான்கு ஆண்டு மிகப்பெரிய பேரிடர்’ என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருக்கிறாரே?”

“வலுவான எதிர்க்கட்சியாக இருந்தும், நீங்களும் ‘உட்கட்சிப் பிரச்னையிலேயே காலத்தை வீணடிக்கிறீர்கள்’ என்று விமர்சனம் இருக்கிறதே?”

“ `எம்.ஜி.ஆர் என் பெரியப்பா’ என்று பேசி அ.தி.மு.க தொண்டர்களை ஈர்க்கிறாரே ஸ்டாலின்?”

“ஜி20 மாநாடு தொடர்பான கூட்டத்தில் இ.பி.எஸ் கலந்துகொண்டதை எதிர்த்து ஓ.பி.எஸ் கடிதம் எழுதியிருக்கிறாரே?”

“அ.தி.மு.க சின்னம் முடக்கப்படலாம் என்று தகவல்கள் வருகின்றனவே?”

போன்ற கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் காரசாரமாக பதிலளித்திருக்கிறார் செல்லூர் கே.ராஜூ



source https://www.vikatan.com/government-and-politics/politics/former-admk-minister-sellur-raju-interview-regarding-bjp-growth-dmk-activities

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக