Ad

வியாழன், 5 நவம்பர், 2020

`முருகனின் துணை கொண்டு யாத்திரையை தொடங்குகிறோம்!’ - திருத்தணிக்கு புறப்பட்டார் எல். முருகன்

தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் நவம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் முடிக்க பா.ஜ.க தமிழகத் தலைமை திட்டமிட்டிருந்தது. இந்தநிலையில், பா.ஜ.க-வின் வேல் யாத்திரைக்குத் தடைவிதிக்க தமிழக அரசு, டி.ஜி.பி-க்கு உத்தரவிட வேண்டும் என செந்தில்குமார், பாலமுருகன் ஆகியோர் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம்

இது தொடர்பான விசாரணையின் போது, ``கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலை ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில், வேல் யாத்திரை போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என டி.ஜி.பி தரப்பில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுநிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கூடக் கூடாது என தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு நவம்பர் 16-ம் தேதி வரை இருக்கும் நிலையில், அதற்குப் பின்னரே இது குறித்து முடிவெடுக்க முடியும்” என்று தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Also Read: கொரோனா பரவல்; உயர் நீதிமன்ற உத்தரவு! - பா.ஜ.க வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு

பா.ஜ.க தரப்பில், பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், வேல் யாத்திரையைத் தடை செய்வது சரியல்ல. கொரோனா தொற்று குறைந்திருப்பதாக தமிழக அரசே தெரிவித்திருக்கிறது. வேல் யாத்திரையின்போது குறிப்பிட்ட எந்தப் பகுதியிலும் தங்கப்போவதில்லை. அதேபோல், குறிப்பிட்ட எந்தப் பகுதியும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படவில்லை என்று வாதிடப்பட்டது. மேலும், தனிமனித விலகலையே மத்திய அரசு வலியுறுத்திவருவதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது. தமிழக அரசின் வாதத்தை ஏற்று இரண்டு வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.

பா.ஜ.க தலைவர் எல். முருகன்

இந்த நிலையில் பா.ஜ.க தரப்பில் திருத்தணியில் இன்று காலை வேல் யாத்திரை தொடங்கும் என்ற தகவல் வெளியானது. இதனால் தடையை மீறி பா.ஜ.க வேல் யாத்திரையை மேற்கொள்ளபோவதாக பரபரப்பு ஏற்பட்டது. ``வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது. நிபந்தனைகளுக்குட்பட்டுதான் வேல் யாத்திரையை பா.ஜ.க தொடங்கவுள்ளது” என சென்னையில் வி.பி.துரைசாமி கருத்து தெரிவித்தார்

இதனிடையே தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன், ``தங்களுடைய கடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை. அதன் அடிப்படையில் திருத்தணிக்கு செல்கிறேன்” என சென்னையில் தெரிவித்தார். முன்னதாக தமிழகத்தில் விழுப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி வேல் யாத்திரை செல்ல கூடும் என்பதால் இந்த கைது நடவடிக்கை என சொல்லப்பட்டது.

எல்.முருகன்

இந்த நிலையில் சென்னையில் கோயம்பேடு பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி தனது ஆதரவாளர்களுடன் கையில் வேலுடன் தடையை மீறி யாத்திரையை தொடங்கினார் பா.ஜ.க தலைவர் எல். முருகன். முருகனின் துணை கொண்டு திருத்தணியில் யாத்திரையை தொடங்குகிறோம் என பா.ஜ.க வினர் தெரிவித்தனர். திருத்தணி கோயில் பகுதியில் பலத்தன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-state-head-lmurugan-starting-murugan-temple-yatra

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக