Ad

திங்கள், 2 நவம்பர், 2020

`இப்ப மவுசு இன்னும் ஏறிடுச்சு!' - சூடுபிடிக்கும் காரைக்குடி கண்டாங்கி சேலை விற்பனை

செட்டிநாடு பகுதியில் தனித்துவமாகத் தயாராகும் காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு எப்போதும் மவுசு உண்டு. ஒரு காலத்தில் நகரத்தார் வீட்டுப் பெண்கள் அதிகம் பயன்படுத்திய இந்தச் சேலைகளை தற்போது தமிழகத்தில் பலரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். Geographical Indication என்று சொல்லக்கூடிய புவிசார் குறியீடு பெற்ற பின்னர், காரைக்குடி காட்டன் கண்டாங்கி சேலை தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளதாக நெசவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

காரைக்குடி கண்டாங்கி

இது குறித்து காரைக்குடி கானாடுகாத்தான் பகுதியைச் சேர்ந்த நெசவாளர் வெங்கட்ராமனிடம் பேசினோம்.

"காரைக்குடி கண்டாங்கி சேலை தனித்துவமானது. ஆரம்பத்தில் முழுக்க முழுக்க இயற்கை சாயம்தான் இதற்குப் பயன்படுத்தினோம். அப்போதெல்லாம் சேலைகளை தலைசுமையாய் சுமந்து செட்டிநாடு பகுதி முழுக்க விற்பனை செய்வோம். தற்போது காலத்திற்கு ஏற்ப ஆன்லைனில் விற்பனை செய்கிறோம். கொரோனா காலத்தில் எங்கள் தொழில் முடங்கி இருந்தாலும் தீபாவளி உற்பத்தி மற்றும் விற்பனை ஆரம்பித்த பிறகு நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறோம்.

பல்வேறு இடங்களில் பவர்லூம் சேலைகள் வந்தாலும், கைத்தறி நெசவை விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்கள்தான் எங்களை இந்தப் போட்டியில் கைகொடுத்துக் காப்பாற்றுகின்றனர்.

பார்க்க பளபளப்பாகவும் சீராக நூல் பின்னல் தெரிந்தாலும் பவர் லூம் சேலைகளால் கைத்தறி சேலையின் உழைப்பையும் இதமான உடுத்தல் அனுபவத்தையும் கொடுக்க முடியாது. காரைக்குடி நெசவாளர்கள் கையால் உருவாகும் இந்தக் கண்டாங்கி சேலைகளுக்குக் கடந்தாண்டு புவிசார் குறியீடு கிடைத்தற்குப் பின்னர், இதன் மவுசு அதிகரித்துள்ளது.

கண்டாங்கி சேலை தயாரிப்பில் வெங்கட்ராமன்

கைத்தறி நெசவுத் தொழிலை மூன்று தலைமுறைகளாகச் செய்துவருகிறோம். ஆரம்பத்தில் பல குடும்பங்கள் செட்டிநாடு பகுதியில் கைத்தறி கண்டாங்கிச் சேலை நெசவு செய்து வந்தார்கள். பின்னர் மக்களின் ரெடிமேடு மோகத்தால் தொழிலில் தொய்வு ஏற்பட்டபோது, அவர்களில் பலர் வெவ்வேறு தொழில்களுக்குச் சென்றுவிட்டனர். ஆனாலும், நாங்கள் இந்தத் தொழிலை விடாமல் தலைமுறைகளாகச் செய்து வருகிறோம்.

காரைக்குடி கண்டாங்கி சேலைகள் ஆரம்பத்தில் எடை அதிகமாக இருக்கும். தற்போது இந்தக் காலப் பெண்களுக்கு ஏற்றார்போல் எடை குறைவான சேலைகளை உற்பத்தி செய்கிறோம்.

ஆன்லைன் மூலம் பெங்களூரு, ஹைதராபாத், மும்பை எனப் பிற மாநிலங்களுக்கும் அனுப்ப முடிகிறது. வெளிநாட்டு வாழ் தமிழர்கள் ஊருக்கு வரும்போது சேலைகளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.

தற்போது தீபாவளிக்கு செட்டிநாடு தாழம்பூ கோர்வை கரையை விரும்பி வாங்குகின்றனர். இந்த டிசைன் பாரம்பர்ய டிசைன். இதை இரண்டு நபர்கள் சேர்ந்துதான் நெய்ய முடியும். அதேபோல் பாலும் பழமும் டிசைன், தேன் நிலவு டிசைன், ஆட்டு முழி டிசைன், கோட்டையூரான் கண்டாங்கியும் எல்லா காலகட்டத்திலும் விரும்பப்படுகிறது.

கண்டாங்கி சேலை

ஊசி வாழை டிசைன், பிளைன் த்ரெட் பார்டர் டிசைன்களை இளம் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்த ரகம் மிகவும் லேசாக இருப்பதால் அவர்களுக்குப் பிடிக்கிறது. கட்டும்போது பூப்போல இருக்கும்.

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஸ்வர் பிரதாப் ஷாஹி கரைக்குடி பகுதிக்கு வந்தபோது, என் தறிக்கு வந்து சேலை நெய்யப்படுவது பற்றிக் கேட்டறிந்தார். ஆர்வத்துடன் சில சேலைகளையும் விலைக்கு வாங்கிச் சென்றார். கொரோனா தொய்விற்குப் பின்னர் தற்போது அதிக ஆர்டர் கிடைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் கைத்தறி கண்டாங்கிச் சேலைகளுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/demand-increases-for-karaikudi-kandangi-sarees-ahead-of-diwali

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக