Ad

திங்கள், 2 நவம்பர், 2020

மும்பை - டு கறம்பக்குடி... ஸ்கூட்டரிலேயே பறந்துவந்து சர்ப்ரைஸ் கொடுத்த பாசப்பெற்றோர்!

புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வம் - சங்கீதா தம்பதி கடந்த பல வருடங்களாகவே மும்பையில் வசித்துவருகிறார்கள். இவர்களுக்கு வேணி என்ற மகளும், யோகேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். விடுமுறையின் போதெல்லாம், பிள்ளைகளைப் புதுக்கோட்டையில் உள்ள தங்களது பெற்றோர்களின் வீட்டில் விட்டுச் செல்வது இவர்களின் வழக்கம். அதன்படி, கொரோனா எதிரொலியாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவே, பிள்ளைகளை மும்பையிலிருந்து அழைத்து வந்த செல்வம், கறம்பக்குடி அருகே பில்லக்குறிச்சியில் உள்ள தனது மாமனார் வீட்டில் விட்டுச் சென்றார்.

செல்வம் - சங்கீதா குடும்பம்

இந்த நிலையில் அடுத்த சில தினங்களிலேயே நாடு முழுவதும் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ரயில், பேருந்து என அனைத்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், பிள்ளைகள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தங்கள் தாத்தா, பாட்டி வீட்டிலேயே இருக்கின்றனர். பெற்றோரைப் பார்க்க முடியாமல் பிள்ளைகளும், பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் பெற்றோரும் தவித்து வந்தனர். இதற்கிடையே, மகன் யோகேஸ்வரனுக்கு அக்டோபர் 28-ம் தேதி பிறந்த நாள். பிள்ளையுடன் பிறந்த நாளைக் கொண்டாட முடிவெடுத்த பெற்றோர், மும்பை-கறம்பக்குடி 1400 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கூட்டரிலேயே பயணம் செய்து தங்களது பிள்ளைகளுடன் சேர்ந்திருக்கின்றனர்.

"அப்பா துறைமுகத்துல இருந்ததால நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில்தான். மனைவி பிறந்து வளர்ந்ததும் மும்பைதான். நான் மும்பைல மளிகைக்கடை வெச்சிருக்கேன். ரெண்டு பேரோட பெற்றோரும் புதுக்கோட்டையில் வசிக்கிறாங்க. எங்க பிள்ளைங்க மும்பைல படிச்சி வளர்ந்தாலும், நம்ம ஊரோட மொழி, கலாசாரத்தை தெரிஞ்சிக்கணும்னு சொல்லித்தான் விடுமுறைக்குக் கொண்டு வந்துவிடுவோம். கொஞ்ச நாள்ல எல்லாம் முடிஞ்சிடும்னு தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, 6 மாசத்துக்கும் மேலாக இந்தப் பிரச்னை நீடிச்சிருச்சு. ஊருக்கு கிளம்பி வந்திடலாம்னா, போக்குவரத்தே இல்லை.

செல்வம் - சங்கீதா

எங்க பக்கத்துலயே இருந்த பிள்ளைங்க. 6 மாசத்துக்கும் மேலாக பார்க்க முடியாம மனைவியும் நானும் ரொம்பவே கஷ்டப்பட்டோம். அக்டோபர் 28-ம் தேதி பையனுக்குப் பிறந்தநாள். ஒவ்வொரு வருஷமும் சிறப்பா கொண்டாடிடுவோம். இந்த வருஷம் பையனோட இருக்க முடியாம போயிடுமோன்னு மொதல்ல கவலை இருந்துச்சு. பஸ்ஸுக்கு முன்னாடி இருந்ததை விட மூன்று மடங்கு செலவு செய்ய வேண்டி இருக்கு. விமானத்துல வர்ற அளவுக்கு வசதி இல்லை. ஆனாலும், எப்படியாவது ஊருக்கு வந்து பிள்ளைகளைப் பார்த்திடணும்னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்பதான், ஸ்கூட்டியிலேயே ஊருக்கு போயிடலாம்ங்கிற ஐடியா வந்துச்சு.

இதுபத்தி சங்கீதாக்கிட்ட கேட்டப்ப, உடனே ஓகே சொல்லிட்டாங்க. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர். மும்பையிலிருந்து 21-ம் தேதி கிளம்பினோம். 300 கிமீ தூரம் நிறுத்தாம வந்துட்டே இருந்தோம். மகாராஷ்டிரா மாநிலத்தை தாண்ட மழை விடலை. மழையால கோலாப்பூரிலேயே தங்கிட்டோம். அடுத்த நாள் விடியற்காலையில வண்டியை எடுத்து 700 கி.மீ தூரம் இடையிலயே நிற்காம நீலமங்கலத்தை தொட்டோம். அன்னைக்கு நீலமங்கலத்திலேயே தங்கிட்டோம். வண்டிக்கு ஆயில் மாத்தி, அதிகாலையில் எடுத்தோம். 400 கி.மீ தூரத்துல கறம்பக்குடிக்கு ரீச் ஆகிட்டோம். 3 பகல், 2 நைட்டு. 37 மணி நேரம் ட்ராவல். ரொம்பவே ரிஸ்க்தான்.

செல்வம் - சங்கீதா

ஆனா பெட்ரோல், ஆயில், ரூம், சாப்பாடுன்னு 5 ஆயிரத்துக்குள்ளேயே எல்லாமும் முடிஞ்சது. ரெண்டு பேரும் பிள்ளைகளைப் பார்க்க ரொம்ப ஆவலா இருந்ததாலயும், விரும்பி டூவிலர்ல வந்ததாலயும் 1400 கி.மீ தூரம் வந்தும் எந்த அலுப்பும் தெரியல. வண்டியும் பிரச்னைப் பண்ணாமல் கொண்டு வந்து சேர்த்திடுச்சு. இப்போதைக்கு மகன் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடினோம். மும்பைக்கு எப்படிப் போறதுங்கிறதைப் பத்தி அப்புறம் பார்த்துக்குவோம்" என்கிறார் செல்வம்.



source https://www.vikatan.com/lifestyle/travel/parents-who-flew-in-scooty-for-children-from-mumbai-to-tamil-nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக