Ad

திங்கள், 8 நவம்பர், 2021

கொய்யாக்காய் தருவதாக அழைத்துச் சென்று கழுத்தறுத்த இளைஞர்! -சிறுவன் கொலையில் அதிர்ச்சி வாக்குமூலம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோட்டையூர்-சின்னையம்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் துவரங்குறிச்சியில் தனது அக்கா நடத்தும் ஹோட்டலில் கேஷியராக உள்ளார். இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் திருமணம் முடிந்து வெளியூரில் உள்ளார். இரண்டாவது மகள் திருச்சியில் தங்கி ப்ளஸ் 1 படித்து வருகினார். மூன்றாவது மகள் 9 வகுப்பு படித்து வருகிறார். கடைசியாக ஹரிஹரதீபன் என்ற 6 வயது மகன் 1 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

ஹரிஹரதீபன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ராமகிருஷ்ணன் வேலைக்கு சென்றுவிட்டார். அவருடைய மனைவி வித்யா கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் கணக்கெடுப்புப் பணிக்காகச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் மகன் இல்லாததால் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளார். அப்போது அவரின் மாமா வீட்டின் மாடியில் ஹரிஹரதீபன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்திருக்கிறார். அதனை பார்த்து கதறிய வித்யா, போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். நத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

சின்னையம்பட்டி 200 வீடுகளை கொண்ட சிறிய கிராமம் என்பதால் யாருக்கும் தெரியாமல் வெளியிலிருந்து வந்து யாரும் கொலை செய்திருக்கமாட்டார்கள். முதல்கட்டமாக அக்கம்பக்கத்தில் விசாரிக்கலாம் எனப் போலீஸார் முடிவெடுத்துள்ளார்.

அப்போது ராமகிருஷ்ணனின் தம்பி சந்திரசேகர் குடும்பத்தினருக்கும் இவர்கள் குடும்பத்தினருக்கும் சிறு சிறு பிரச்னைகள் இருந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் சந்திரசேகரின் மகன் அஜய்ரத்தினம்(20) மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்படவே அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது போலீஸாரிடம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். மேலும் எதற்காக, எப்படி கொலை நடந்தது என்பதை அஜய்ரத்தினம் போலீஸாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

அஜய்ரத்தினம்

இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, ''திருச்சியில் படித்துவரும் ராமகிருஷ்ணன் மகள் ஒருவருடன் பழகியுள்ளாராம். அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படங்களை அஜய்ரத்தினம் பார்த்துள்ளார். இதுகுறித்து அஜய், தனது பெரியப்பாவிடம் தெரிவித்துள்ளார். மேலும், வேறு ஒருவருன் செல்போனை வாங்கி அதிலிருந்து தங்கையின் போட்டோவைப் பதிவிட்டுள்ளார். இதை ராமகிருஷ்ணன் வீட்டார் கண்டுபிடித்து அஜய்ரத்தினத்தைக் கண்டித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மீண்டும் சமூகவலைதளத்தில் இவரும் சேர்ந்து இருக்கும் படம் வெளியாளியுள்ளது. இதுகுறித்து ராமகிருஷ்ணன் திண்டுக்கல் சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். போலீஸார் விசாரணையில் மீண்டும் அஜய்ரத்தினம் தான் படங்களை பதிவிட்டது தெரியவந்தது. இருப்பினும் அவரைக் கண்டித்துவிடுமாறும், வழக்கு பதிவு செய்யவேண்டாம் எனவும் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அஜய்ரத்தினம் ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தான் ராமகிருஷ்ணன் வீட்டின் அருகே உள்ள அவரின் மாமா வீட்டின் மாடிக்கு ஹரிஹரதீபனை கொய்யாக்காய் தருவதாக ஏமாற்றி வரவழைத்துள்ளார். பின்னர், ஹரிஹரதீபனின் கைகளை கட்டி, வாயில் துணியை வைத்து ரூ.5 க்கு கடைகளில் விற்கப்படும் சிறு கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்'' என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/the-young-man-who-killed-his-brother-in-family-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக