Ad

வெள்ளி, 26 நவம்பர், 2021

விழிப்புணர்வுக்காக மாரத்தான் ஓடுவது ஏன்? | Doubt of Common Man

விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் சுகன் என்ற வாசகர், ``மாரத்தான் ஓட்டம் என்றால் என்ன? விழிப்புணர்வுக்காக மாரத்தான் ஓடுவது ஏன்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
Doubt of common man

மாரத்தான் ஓட்டமென்பது முன்பெல்லாம் முக்கிய நகரங்களில் வருடத்திற்கு ஒரு முறை நடக்கும். ஆனால், தற்போது நோய்க்கான விழிப்புணர்வு, சமூக விழிப்புணர்வு, உலக அமைதி, வீரவணக்கம், கொண்டாட்டம் என்று ஏதேனும் தலைப்பில் தமிழகத்தின் பல்வேறு நகர வீதிகளில், அவ்வப்போது மாரத்தான் ஓட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மாரத்தான் ஓட்டம் என்றால் என்ன? மாரத்தான் ஓட்டத்திற்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது? மாரத்தான் ஓட்டம் நகரப்பகுதிகளை மட்டுமே மையமாகக் கொண்டு நடத்தப்படுவது ஏன்? என்கிற கேள்விகளோடு திருநெல்வேலி, ம.தி.தா. இந்துக் கல்லூரியின் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜெ. கார்த்திகேயன் அவர்களைத் தொடர்பு கொண்ட போது, அவர் சொன்ன தகவல்கள் இங்கே தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.

ஓட்டம்

இதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்

மாரத்தான் ஓட்டம்

மாரத்தான் ஓட்டம் என்பது சாதாரணமான ஓட்டமல்ல, அது வெற்றிச் செய்தியின் ஓட்டம். கி.மு. 490 - ம் ஆண்டில் நடந்த மாரத்தான் போரில் (Battle of Marathon) கிரேக்கர்கள் பாரசீகர்களைத் தோற்கடித்தனர். கிரேக்கர்கள் வெற்றி பெற்ற செய்தியை ஏதென்ஸ் நகரிலிருந்தவர்களுக்குத் தெரிவிப்பதற்காக, பெய்டிபைட்ஸ் எனும் கிரேக்க வீரன் மாரத்தானிலிருந்து ஏதன்ஸ் நகருக்கு இடையில் எங்கும் நிற்காமல், தொடர்ந்து ஓடிச் சென்றான். வெற்றிச் செய்தியைச் சொன்ன சிறிது நேரத்தில் அங்கு மயங்கி விழுந்து அவன் இறந்து போனான்.

மாரத்தான் போர்

இத்தகவலை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரப்பூர்வமான தகவல்கள் எதுவுமில்லை என்று சொல்லப்பட்டாலும், எரோடோட்டசு என்ற கிரேக்க வரலாற்று அறிஞர், பெய்டிபைட்ஸ் ஏதென்சிலிருந்து ஸ்பார்டாவுக்கு ஓடிய ஒரு தூதுவன் என்று குறிப்பிட்டிருக்கிறார். பெய்டிபைட்ஸ் மாரத்தானுக்கும் ஏதென்சுக்கும் இடையில் ஓடினார் என்பது பிற்கால எழுத்தாளர்களால் புனையப்பட்டது என்றேப் பலரும் சொல்கின்றனர். இந்நிகழ்வு புனையப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், நீண்ட தூரம் நிற்காமல், தொடர்ந்து ஓடும் ஓர் ஓட்டத்திற்கான முதல் நாயகனாக பெய்டிபைட்ஸ் இருந்திருக்கிறார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

மாரத்தான் ஓட்டம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 1896 ஆம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம் 1984 -ம் ஆண்டு கோடை கால ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்க காலத்தில் மாரத்தான் ஓட்டப் போட்டிக்குத் தூரம் எதுவும் தீர்மானிக்கப்படவில்லை. அனைத்துப் போட்டியாளர்களும் ஒரே தடத்தில் ஓடுகிறார்கள் என்பது மட்டும் முக்கியமானதாக இருந்தது.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மாரத்தான் ஓட்டத்திற்கான தொலைவு, போட்டி நடைபெற்ற இடத்திற்குத் தகுந்தபடி மாறிக் கொண்டேயிருந்தது. 1896 -ம் ஆண்டில் மாரத்தான் ஓட்டத்திற்கான தொலைவு 40 கி.மீ (24.85 மைல்) என்றிருந்தது. 1900 -ம் ஆண்டில் 40.26 கி.மீ (25.02 மைல்), 1904 -ம் ஆண்டில் 40 கி.மீ (24.85 மைல்), 1906 -ம் ஆண்டில் 41.86 கி.மீ (26.01 மைல்), 1908 -ம் ஆண்டில் 42.195 கி.மீ (26.22 மைல்), 1912 -ம் ஆண்டில் 40.2 கி.மீ (24.98 மைல்), 1920 -ம் ஆண்டில் 42.75 கி.மீ (26.56 மைல்) என்றிருந்தன. இந்நிலையில், 1921 -ம் ஆண்டில் பன்னாட்டுத் தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் சங்கம், மாரத்தான் ஓட்டத்திற்கான தொலைவினை 42.195 கி.மீ (26.22 மைல்) என்று இறுதி செய்தது. அதன் பிறகு, 1921 -ம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமின்றி, பொதுவாகப் பல்வேறு இடங்களில் நடத்தப்பெறும் மாரத்தான் ஓட்டத்திற்கான தொலைவு 42.195 கி.மீ (26.22 மைல்) என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மாரத்தான் ஓட்டம்

மாரத்தான் ஓட்டம் என்பது நெடுந்தொலைவு தூரம் ஓட வேண்டும் என்றிருந்தாலும், போட்டிகளில் எவ்வளவு பேர் கலந்து கொள்ளலாம் என்கிற எண்ணிக்கை எதுவும் வரையறுக்கப்படாததால், இப்போட்டியில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில்தான் இருக்கின்றன. மேலும், இப்போட்டியில் பங்கேற்பவர்களிடம் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, குறிப்பிட்ட நோக்கத்திற்காக, நாமும் அதில் பங்கேற்க வேண்டுமென்கிற எண்ணமே மேலோங்கியிருக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு அமைப்புகள், மாரத்தான் ஓட்டத்தை விழிப்புணர்வு நிகழ்வுகளாகவும், கொண்டாட்ட நிகழ்வுகளாகவும் ஏற்பாடு செய்கின்றன. குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கான மாரத்தான் ஓட்டத்தில் ஓட்டத்திற்கான தொலைவு தூரம் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. ஓட்டத் தொலைவைக் குறைத்து, அரை மாரத்தான், கால் மாரத்தான் என்று கூட நடத்துகின்றனர். சில வணிக நிறுவனங்கள் தங்களது வணிகப் பொருள்களை பொதுமக்களிடையே அறிமுகப்படுத்துவதற்குக் கூட மாரத்தான் ஓட்டத்தை நடத்தத் தொடங்கியிருக்கின்றன.

விழிப்புணர்வுகளுக்காகவும், விளம்பரங்களுக்காகவும் நடத்தப்படும் மாரத்தான் ஓட்டமானது, பெரும்பான்மையாக, நகரப்பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் ஓர் இடத்தில் தொடங்கி, மக்கள் அதிகம் கூடும் மற்றொரு இடத்தில் நிறைவடைவதாகவே இருக்கும். இந்த ஓட்டத்திற்கான பாதையும் நகரின் முக்கியமான சாலைகளாகவே இருக்கின்றன. இதன் மூலம், நகரப்பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் பயணித்துக் கொண்டிருப்பவர்களிடையே விழிப்புணர்வையோ, விளம்பரத்தையோ எளிதாகக் கொண்டு சேர்த்துவிட முடிகிறது. செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் போன்ற ஊடகங்களில் விளம்பரம் செய்யும் செலவினைக் காட்டிலும், மிகக் குறைவான செலவில் சிறந்த பயனைப் பெற்றிட முடிகிறது.

மாரத்தான் ஓட்டம்

இந்த மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்பவர்கள் போட்டிக்கான ஓட்டத் தொலைவைக் கடக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை. மாரத்தானில் பங்கேற்பது மனதில் ஒரு விதமான உற்சாகத்தையும் மனவலிமையையும் அதிகப்படுத்தும் என்பதால் ஆண், பெண் என்கிற பாலினப் பாகுபாடின்றி மாரத்தான் ஓட்டப்போட்டியில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man


source https://www.vikatan.com/oddities/miscellaneous/doubt-of-common-man-why-marathon-is-held-for-awareness

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக