Ad

வெள்ளி, 26 நவம்பர், 2021

`201 பள்ளிகள்...26,085 மாணவிகள்!' - பாலியல் தொல்லை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய அமைச்சர்

கரூர் மாவட்டத்தில் கோயம்பள்ளி ஊராட்சி பகுதியில் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில், ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தக கட்டடம் அமைப்பதற்கான பூமி பூஜை பணியினை, செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, கரூர் ராயனூர் இலங்கைதமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்துவரும் ஈழத்தமிழர் குடும்பங்களுக்கு 100 புதிய எரிவாயு இணைப்பு, 434 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டும் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர், கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கரூர் மாவட்டத்தில் தொடரும் பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில், கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தினந்தோறும் ஐந்து பள்ளிகளில், 'நிமிர்ந்து நில் - துணிந்து சொல்' என்னும் திட்டத்தினை தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசும் அமைச்சர்

அப்போது பேசிய அவர், "பள்ளி மாணவிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் பிரச்னைகளை தடுக்க ஏதுவாக, தமிழகத்திலேயே கரூரில் இந்த முயற்சி முதலில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 - ம் வகுப்பு வரை உள்ள, 201 பள்ளிகளை சேர்ந்த 26,085 பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இரண்டு முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, 'நிமிர்ந்து நில், துணிந்து சொல்' எனும் திட்டம் இன்று துவக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அரசு துறை சார்ந்த தலைவர்களைக் கொண்டு, 20 குழுக்களாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் பிரிக்கப்பட்டு, ஒரு குழு நாளொன்றுக்கு ஐந்து பள்ளிகளில் சென்று வினாத்தாள் அடிப்படையில் குழந்தைகளுக்கு இடையே பாலியல் வன்முறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர் .

இத்திட்டத்தின் பிரதானமான நோக்கம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது. பெண் குழந்தைகள் பள்ளியில் தெரிவிக்கும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும். மேலும், பாலியல் ரீதியான வன்முறைகள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, கல்வி உதவி வழிகாட்டு மையத்திற்கு 14417 எண்ணிற்க்கும், குழந்தைகள் உதவி எண் 1098 மாவட்ட நிர்வாகத்தின் வாட்ஸ் அப்பில் 8903331098 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டத்தில் உள்ள இருபத்தி ஆறாயிரம் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு, இனி கோவை, கரூர் போன்ற நகரங்களில் நடைபெற்ற சம்பவங்களைப் போன்று தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதாரணமாக பெண்குழந்தைகள் வீரமங்கைகளாகத் திகழ வேண்டும். பெண் குழந்தைகள் நல்ல நிலைக்கு சென்றால் தான் பெற்றோருக்கு பெருமைப்படக்கூடிய அங்கீகாரம், கௌரவம் அனைத்தும் கிடைக்கும். பத்தாம் வகுப்பு படித்துவிட்டு பதினொன்றாம் வகுப்பில் விரும்பிய பாடத்தை தேர்வு செய்யும் உரிமை பெற்ற நீங்கள், இந்த வயதில் விரும்பத்தகாத செயல்களால் பாதிக்கப்படும் போது, அதை தைரியமாக மற்றவர்களிடம் தெரிவிக்கவேண்டும். காலதாமதமாக தெரிவிப்பதினால் குற்றவாளிகள் கண்டறியப்படுவதில் காலதாமதம் ஏற்படலாம். இதனால், குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இனி, கரூர் மாவட்டத்தில் எந்த ஒரு விரும்பத்தகாத செயலும் நடைபெற கூடாது என அனைவரும் உறுதி ஏற்போம்.

இந்தியாவில் முன்மாதிரியான, சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் கரூர் சிறந்த மாவட்டம் என்ற பெயரை பெற, பெண் குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு பெறவேண்டும். அதற்காக, நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்றுவோம்" என்று அமைச்சர் பேசினார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/in-karur-minister-senthil-balaji-inaugurated-awareness-event

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக