Ad

சனி, 8 ஏப்ரல், 2023

”இந்தியா ஒரு புரட்சியைச் சந்தித்து வருகிறது; தேசபக்தி, தேச உணர்வின் மையம் தமிழ்நாடு’’- பிரதமர் மோடி

சென்னை பல்லாவரத்தில் பிரதமர் மோடி பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க, பா.ஜ.க தொண்டர்கள் பங்கேற்றனர். இதில் முதல்வர் ஸ்டாலின் உரைக்குப் பிறகு பேசிய பிரதமர் மோடி, `வணக்கம் தமிழ்நாடு'. தமிழ்நாட்டுக்கு வருவது என்பது எப்போதுமே அருமையான அனுபவம். இது வரலாறு, பாரம்பரியத்தின் இருப்பிடம். இது மொழி, இலக்கியத்தின் விளைநிலம். தேசபக்தி, தேசிய உணர்வு ஆகியவற்றின் மையம்.

பிரதமர் மோடி

நமது பல முன்னணி சுதந்திர போராட்ட தியாகிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒரு கொண்டாட்ட வேளையில் நான் உங்களிடத்தில் வந்திருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். இன்னும் சில நாள்களில் தமிழ் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. புதிய ஆற்றல், புதிய நம்பிக்கைகள், புதிய எதிர்பார்ப்புகள், புதிய தொடக்கங்கள் ஆகியவற்றிற்கான நேரம் இது. சில புதிய தலைமுறை கட்டமைப்பு திட்டங்கள் மக்களுக்கு இன்றிலிருந்து சேவையாற்ற இருக்கின்றன. இன்னும் சில திட்டங்களுக்கான பணிகளும் இப்போதிலிருந்து தொடங்கப்படவிருக்கின்றன. சாலை வழிகள், ரயில் பாதைகள், விமான மார்க்கங்கள் ஆகியவை உள்ளடக்கிய இந்தத் திட்டங்கள், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

விமான நிலையம்

கடந்த சில ஆண்டுகளில் கட்டமைப்பு துறையில் இந்தியா ஒரு புரட்சியைச் சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட மத்திய வரவு, செலவு திட்ட அறிக்கையை நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். கட்டமைப்பில் முதலீட்டுக்காக சாதனைத் தொகையாக 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறோம். 2014-ம் ஆண்டு ஒதுக்கீட்டை விட ,இது ஐந்து மடங்கு அதிகமானது. ரயில்வே கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்ட தொகை கூட இதுவரை காணாத சாதனை தொகை.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய நெடுஞ்சாலையின் நீளம் கூட்டப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டுக்கு முன்பாக ரயில் பாதை ஒவ்வொரு ஆண்டும் 600 கி.மீ மின்மயமாக்காப்பட்டது. இப்போது ஒவ்வொரு ஆண்டும் 4000 கி.மீ ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டிருக்கிறது. 2014-ம் ஆண்டு வரை உருவாக்கப்பட்ட விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ஆகும். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட 150 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது .தமிழ்நாட்டின் நீண்ட கடற்கரை பகுதி மிக முக்கியமானது. 2014-ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடும்போது, நம் துறைமுகத்தின் திறன் மேம்பாடு கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது.

பிரதமர் மோடி

வெளிப்புற கட்டமைப்பின் வேகத்தின் அளவை மட்டும் நாம் பார்ப்பதில்லை. சமூக டிஜிட்டல் கட்டமைப்பிலும் கணக்கிடுகிறோம். 2014-ல் இந்தியாவிலே 380 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. இன்று இந்தியாவில் சுமார் 660 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. கடந்த 9 ஆண்டுகளில் நமது நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையைப் பொறுத்தவரை நாம் தான் உலகிலேயே முதல் இடத்தை வகிக்கிறோம். உலகின் மிக விலை மலிவான டேட்டா நம்மிடம் தான் இருக்கிறது. 6 லட்சம் கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட கண்ணாடி இழையால் போடப்பட்டு, கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கிராம பஞ்சாயத்துகளை இணைத்திருக்கிறோம். இன்று இந்தியாவில் நகர்புற பயனாளிகளை காட்டிலும் அதிக அளவில் ஊரக இணைய பயன்பாடு அதிகரித்திருக்கிறது.

ஸ்டாலின் - மோடி

இத்தனை சாதனைகளை எது சாத்தியமாக்கியது? இரண்டு விஷயங்கள். பணிக்கலாசாரம். தொலைநோக்கு பார்வை. முதல் விஷயம் பணி கலாசாரம். முன்பு கட்டமைப்பு திட்டங்கள் என்றால் தாமதங்கள் என்பதே விதியாக இருந்தது. இப்போது இவற்றின் பொருள் கொண்டு சேர்த்தல் என்றாகிவிட்டது. தாமதங்களிலிருந்து கொண்டு சேர்த்தல் என்பதன் பயணம் நம் பணி கலாசாரத்தின் காரணமாகவே நடைபெற்றிருக்கிறது. வரி செலுத்துபவரின் ஒவ்வொரு ரூபாயும் முறையாக செலவு செய்யப்பட வேண்டும் என்பது எங்களின் கடப்பாடு. குறிக்கப்பட்ட கால கெடுவை முன்னிறுத்தி நாங்கள் பணியாற்றுகிறோம். குறித்த காலத்திற்கு முன்னதாகவே இலக்குகளை எட்டுகிறோம்.

கட்டமைப்பிற்கான எங்கள் தொழில்நுணுக்கம் கூட முந்தைய காலத்தை விட வித்தியாசமானது. கட்டமைப்பு என்பதை வெறும் கான்கிரீட் கலவை, செங்கல், சிமெண்ட் என்பதாக மட்டும் நாங்கள் கருதவில்லை. நாங்கள் கட்டமைப்பிலே ஒரு மனித முகத்தோடு, மனிதத்தோடு அணுகுகிறோம். மக்களின் சாத்தியங்களோடும், கனவுகளை நிஜங்களோடும் இணைக்கிறோம். இன்றைய சில திட்டங்களையே எடுத்துக்காட்டாக பார்க்கலாம். சாலை வழி திட்டங்களில் ஒன்று, விருதுநகர் - தென்காசி பகுதிகளைச் சேர்ந்த பருத்தி விவசாயிகளை சந்தையோடு இணைக்கிறது. சென்னை - கோயம்புத்தூரை இணைக்கும் வந்தே பாரத் விரைவு வண்டி, சிறு தொழில்களை வாடிக்கையாளர்களோடு இணைக்கிறது. சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் உலகத்தை தமிழ்நாட்டிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. இது இங்கிருக்கும் இளைஞர்களுக்கு வருவாய் சந்தர்ப்பங்களை அளிப்பதோடு, முதலீடுகளையும் கொண்டு வந்து சேர்க்கிறது.

மோடி - ஸ்டாலின்

சாலையிலேயோ, ரயில் பாதையிலேயோ வேகம் எடுப்பது வாகனம் மட்டுமல்ல, மக்களின் கனவுகளும் வேகம் பெருகின்றன. அவர்களின் தொழில் முனைவு உணர்வும் வேகம் எடுக்கிறது. பொருளாதார நிலை உயர தொடங்குகிறது. ஒவ்வொரு கட்டமைப்பு திட்டமும் கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது எங்களுக்கு பெரிய முதன்மையான விஷயம். ரயில்வே துறை கட்டமைப்பிற்காக தமிழ்நாட்டுக்கு இதுவரை காணாத ஒதுக்கீடாக 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி, இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2009 - 2014-ம் ஆண்டிலேயே ஓராண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சராசரி தொகை 900 கோடி ரூபாய். 2004 - 2014 க்கும் இடையில் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் 800 கிலோமீட்டர் போடப்பட்டிருக்கிறது. 2014 - 23 க்கும் இடையே கூட்டப்பட்ட நெடுஞ்சாலைகளில் நீளம் கிட்டத்தட்ட 2000 கிமீ. 2014 - 2015- ல் தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை காண முதலீடு சுமார் 1200 கோடி ரூபாய் 2022- 2023 -ல் ஆறு பங்கு அதிகரித்து 8,200 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளிலே பல முக்கிய திட்டங்களை தமிழ்நாடு கண்டிருக்கிறது. பாதுகாப்பு தொழில் துறை இடைவெளியில், இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, இங்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கவும் செய்கிறது. பி.எம் மித்ரா பெரிய ஜவுளி பூங்கா தொடர்பான அண்மை அறிவிப்பு தமிழ்நாட்டின் ஜவுளித்துறைக்கு சாதகமாக இருக்கும். கடந்த ஆண்டு பெங்களூரு - சென்னை விரைவு சாலைக்கான அடிக்கல் நட்டியிருந்தோம். மாமல்லபுரத்துக்கும், கன்னியாகுமரிக்கும் இடையிலான கிழக்கு கடற்கரை சாலை பாரத் மாதா திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் பல பல திட்டங்கள் நடந்து வருகின்றன. இன்று மேலும் சில திட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன அல்லது அடிக்கல் நாட்டப்பட்டிருக்கின்றன.

மோடி - ஸ்டாலின்

இன்று தமிழ்நாட்டில் மூன்று முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் தொடங்கப்பட்டிருக்கும் அல்லது அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும் திட்டங்களால் நேரடியாக ஆதாயம் அடைகின்றன. சென்னையில் புதிய விமான முனைய கட்டிடம் திறக்கப்பட்டிருக்கிறது. இது அதிகரிக்கும் பயணிகளின் தேவைக்கு ஈடு கொடுக்கும் அளவில் அடிமைக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய முனைய கட்டடம் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் ஏற்கெனவே சில வியப்பை ஏற்படுத்தும் புகைப்படத்தை கவனித்திருக்கலாம். கூரை, தரைப்பகுதி, மேல் தளம் அல்லது சுவராவியங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு அம்சத்தை உங்களுக்கு நினைவூட்டும். விமான நிலையம் பாரம்பர்யத்தையும், நீடித்த தன்மை என்ற நவீன தன்மைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சூழலுக்கு நேசமான பொருள்கள் பயன்படுத்தி பசுமை யுக்திகளான எல்இடி விளக்குகள், சோலார் ஆகியவற்றை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சென்னைக்கு கிடைத்திருக்கிறது. இது சென்னை, கோயம்புத்தூர், ஈரோடை இணைக்கும் முதல் வந்தே பாரத் ரயில். இது சென்னைக்கு வந்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த என் இளைய நண்பர்கள் மிகவும் உற்சாகமடைந்தார்கள் என்பது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. வந்தே பாரத் ரயில் வைரலாக சமூக ஊடங்களில் காணொளிகளாக பரவியதை நான் அப்போது பார்த்தேன். இந்தியாவில் தயாரிப்போம் என்பதில் இருக்கும் பெருமிதம் வ.உ.சிதம்பரம் பிள்ளை பூமியிலே இயல்பான விஷயம் தானே.

பிரதமர் மோடி

ஜவுளித்துறையாகட்டும், சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களாகட்டும், கோயம்புத்தூர் நகரம் தொழில்களின் சக்தி பீடமாக இருந்து வருகிறது. நவீன இணைப்பு என்பது மக்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும். இப்போது சென்னைக்கும், கோயம்புத்தூருக்குமான பயணம் சுமார் ஆறு மணி நேரமாகவே இருக்கும். இந்த வந்தே பாரத் விரைவு ரயில் மற்றும் தொழில் மையங்கள் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆதாயங்களை கொண்டு சேர்க்கும்.

தமிழ்நாட்டின் கலாசார தலைநகரமாக இருப்பது மதுரை. இது உலகின் மிகப் பண்டைய நகரங்களில் ஒன்று. இன்றைய திட்டங்கள் இந்த பண்டைய நகரின் நவீன கட்டமைப்புக்கு ஒரு உந்துதலாக இருக்கும். இவை சிறப்பாக வாழும் தன்மை, சுலபமான பயணம் ஆகிவற்றை மதுரைக்கு அளிக்கும். தென்மேற்கில் இருக்கும் பல மாவட்டங்கள் தமிழ்நாட்டின் கரையோர பகுதிகள் இன்றைய திட்டங்களால் பலனடையும்.

பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு இன்று இந்தியாவின் வளர்ச்சி இன்ஜின்களில் ஒன்று. இன்று தொடங்கப்பட்டிருக்கும் திட்டங்கள் தமிழ்நாட்டின், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஒரு பெரிய ஊக்கியாக இருக்கும் என்பது என் உறுதிப்பாடு. தலைசிறந்த தரம் வாய்ந்த கட்டமைப்பு, இங்கே வேலை வாய்ப்புகளை உருவாக்கும். வேலைவாய்ப்பு உருவாகும் போது வருவாய் அதிகரிக்கிறது. தமிழ்நாடு வளர்கிறது. தமிழ்நாடு வளரும்போது இந்தியா வளர்கிறது. உங்கள் அனைவரின் அன்புக்கும் மிக்க நன்றி வணக்கம்" எனப் பேசி முடித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/if-tamil-nadu-grows-then-india-will-grow-says-pm-modi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக