Ad

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

சட்டப்பேரவை: `கடந்த ஆட்சி... எல்லாம் `சிடி’ போட்டு வைத்திருக்கிறேன்’ - நேரலை விவகாரத்தில் சபாநாயகர்

சட்டப்பேரவையில் நேற்று(18.4.2023) காலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையும் மாலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான மானியக்கோரிக்கை விவாதம் நடந்தது. இதில் மதியம் தொடங்கிய, அதிமுக லைவ் விவகாரம் மாலையிலும் தொடர்ந்தது. ஆளுங்கட்சி பதில்களில் திருப்தியடையாத அதிமுகவினர் அவையைப் புறக்கணித்தனர். என்ன நடந்தது?

மா.சுப்பிரமணியன்

சட்டசபையில் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியபோது, ``அவையில் மானிய கோரிக்கையின் பதிலுரையின்போது அ.தி.மு.க உறுப்பினர்கள் யாரும் இருப்பதில்லை. கடந்த 10 நாள்களாக பார்க்கிறோம். காலை, மாலை என அனைத்து அமைச்சர்களின் தெளிவான பதில்களை வழங்கி வருகின்றனர். அவர்கள் இங்கு இருப்பதில்லை. அது வருத்தமாக இருக்கிறது. தற்போது, நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு தற்போதே விடையளிக்கிறேன். அவர் சொல்லும் ஒவ்வொரு வரிக்கும் இங்கிருந்து பதில் வரும் என்பதை தெளிவாக கூறிக் கொள்கிறேன். மேலும், `அமைச்சர்கள் கூறும் பதில்களை ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மையும் பொறுமையும் அவர்களுக்கு இல்லை’” என்றார்.

இதற்கு பதிலளித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, ``அமைச்சர் பேசும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதில் கூறுவதைக் கேட்க நேரமில்லை என்றார். ஆனால் அது உண்மை இல்லை. அவை ஜனநாயக முறைப்படி நடந்தால் நாங்கள் இருப்போம்.   எங்களின் கோரிக்கை உங்களிடம முன்வைத்திருக்கிறோம். ஆனால் நிறைவேற்றப்படவில்லை. அதனால் அவையைப் புறக்கணிக்கிறோம். தவிர, அவை நடவடிக்கைகளை முற்றிலுமாக நாங்கள் புறக்கணிக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி

வேண்டுமென்றே திட்டமிட்டு அமைச்சர் எதிர்க்கட்சியை அவதூராக பேசுவது தவறு. நேரடி  ஒளிபரப்பு வேண்டும் என பலமுறை உங்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம். ஜனநாயக முறைப்படி எங்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும். ஆளுங்கட்சிக்கு எப்படி வாய்ப்பு கொடுக்கப்படுகிறதோ அதேபோல எதிர்க்கட்சிக்கும் கொடுக்கப்பட வேண்டும். அதனால் நாங்கள் பேசுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

அவைத்தலைவர் அப்பாவு, ``எனக்கு கேட்க வேண்டிய கேள்வியை நான் கேட்கிறேன். இது தொடர்பாக  எதிர்க்கட்சி தலைவர் பலமுறை  பேசியிருக்கிறார். அவைகளிலும் அது பற்றி நாம் விவாதத்திற்கிறோம். `திமுக தேர்தல் வாக்குறுதியில் நேரடி ஒளிபரப்பு என்பது கொடுக்கப்பட்டுள்ளது. அதன் நிறைவேற்றுங்கள் இல்லை என்றால் திரும்ப பெறுங்கள்’ என்று கூறியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி, அப்பாவு

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகத்தில் சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில் கேள்வி நேரங்கள் தவிர்த்து நேரமில்லா நேரத்தில் கேட்கப்படும் கேள்விகளை ஒளிபரப்பு செய்ய சொல்லி எதிர்க்கட்சி சார்பாக கேட்கிறீர்கள். கேள்வி நேரத்தில் யார் என்ன கேள்வி கேட்கிறார்கள் என்பது தெரியும். ஆனால்,நேரம் இல்லா நேரத்தில் யார் என்ன கேள்வி கேட்கிறார்கள்? அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை முன்வரிசையில் அமர்ந்திருக்கிற அனைவரும்பேசுகிறார்கள். எனவே, அதை நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் அவை எப்படி நடந்தது? என்பதை ஒரு சிடி-யில் (CD) பதிவு செய்து வைத்திருக்கிறேன். அப்போதெல்லாம், நீங்கள்(ஆளும்கட்சியாக இருந்த அதிமுகவினர்) பேசுவது முழுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் கேட்பதை, ‘எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்’ என்று மட்டும் தான் கூறப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தரப்பில் கூறிய பதில்கள் எதுவும் அவைக் குறிப்பில் ஏறவில்லை. எனவே, நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டுள்ள அனைத்து நிகழ்வுகளும் ஒன்றின்பின் ஒன்று ஒளிபரப்பு செய்யப்படும். இதில் எந்தப் பாரபட்சமும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது போல உடனடியாக இதற்குத் தீர்வு எட்ட முடியாது. நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி சார்பாக, மற்ற கட்சிகள் சார்பாக என்ன கேள்வி கேட்கப்படுகிறது. அது முன்கூட்டியே தெரிந்தால் மட்டுமே அது ஒளிபரப்பு செய்ய முடியும். அனைத்து கட்சிகளும் இணைந்து இது குறித்து விவாதித்து அதன் பிறகு தான் இது தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும்.

சட்டசபை

இந்த அவை ஜனநாயக முறைப்படி சட்டப்படியும் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை அனைவரும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். குறுகிய கண்ணோட்டத்தோடு எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதை இந்த அரசு யோசிக்கவில்லை. அதை என்னிடமும் புகுத்தவில்லை. இந்த விளக்கத்தை கேட்டுக்கொண்டு பதில் உரையின்போது எதிர்க்கட்சிகள் அவையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

காலையில் இது தொடர்பாக விளக்கம் கொடுத்த பிறகும், மீண்டும் மாலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறையில் நடந்த மானியக் கோரிக்கை விவாதத்தின்போதும் ’அதிமுக நேரடி ஒளிப்பரப்பு’ பிரச்னை கிளப்பப்பட்டது.

``பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதையாவது ஒளிபரப்பு செய்யுங்கள். நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போதும் பலமுறை அவையைப் புறக்கணித்து சென்றிருக்கிறீர்கள். நாங்கள் செய்வது ஒன்றும் முதல்முறையாக அல்ல. அமைச்சர்கள் பதிலுரை கூறுவது நாங்கள் நிச்சயம் கேட்போம்” என்றார் எதிர்க்கட்சி கொறடா வேலுமணி.

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி - வேலுமணி

இது குறித்து  முதலமைச்சர் பேசுகையில், “சட்டமன்ற நிகழ்வுகள் பொறுத்தவரையிலும் ஒளிபரப்பு செய்யப்படுவது என்பது அந்தந்த தொலைக்காட்சிகளின் முடிவுகளைப் பொறுத்தது. நாங்கள் இதைத் தான் போட வேண்டும் என்று கட்டாயப்படுத்திட முடியாது. இதுதான் உண்மை. இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அரசு தரப்பில் இது குறித்து விவாதிக்கப்படும் என உறுதியளித்த பிறகும், திருப்தியடையாத அதிமுக உறுப்பினர்கள் அவையைப் புறக்கணித்து வெளியேறினர்.



source https://www.vikatan.com/government-and-politics/policy/tamil-nadu-assembly-the-admk-walks-out-demanding-live-telecasting-of-the-opposition-party-speech

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக