Ad

சனி, 29 ஏப்ரல், 2023

கேரளா: 5 நாள்கள்; 35 வேதியர்கள்; 4 ஏக்கரில் யாகசாலை; நினைத்த வரம் தரும் அபூர்வமான சோமயாக மகிமைகள்!

சோமயாக மகிமைகள்:

சோமயாகம் என்பது யாகங்களில் மிகவும் சிறப்பு பெற்றது. இந்த யாகத்தின் மூர்த்தி ஶ்ரீ தட்சிணாமூர்த்தி. சோமலதை என்னும் மூலிகையின் சாறு எடுத்து அதை சூர்யோதயத்துக்கு முன்பாக யாகத் தீயில் சமர்ப்பிப்பார்கள். இந்த சோமலதை என்னும் மூலிகை மிகவும் அபூர்வமானது. பார்ப்பதற்கு முல்லைக் கொடியைப்போலவே இருக்கும். இந்தக் கொடியில் அமாவாசை நாளில் ஓர் இலைகூட இருக்காது. மறுநாள் முதல் ஒவ்வொரு இலையாகத் துளிர்க்கும். பௌர்ணமி அன்று 15 இலைகளோடு காணப்படும். பிறகு பிரதமை முதல் ஒவ்வோர் இலையாக உதிர்ந்து அமாவாசை அன்று ஓர் இலை கூட இல்லாமல் ஆகும்.

சோமயாகம்

ஹோமத்தின் முதல்நாள் இரண்டு கட்டைகளைக் கடைந்து ஹோமத்துக்குரிய அக்னியை உருவாக்குவார்கள். இரண்டாம் நாள் ஹோம குண்டத்தைக் குதிரையை விட்டுத் தாண்டச் சொல்வார்கள். மூன்றாம் நாள் சோமப் பிரயம், சோமப் பிரவாகம் ஆகிய கிரியைகள் நடைபெறும். நான்காம் நாள், ஶ்ரீபம், வேதிகரணம் ஆகியவை நடைபெறும். ஐந்தாம் நாள் வபாஹோமம் என்பது நடைபெறும். ஆறாம் நாள் ஹோம ஆகுதி சமர்ப்பணம் நடைபெறும். ஏழாம் நாள் கல்ப பிராயச்சித்த ஹோமம் நடைபெறும். இறுதியில் சக்தி ஹோமம் செய்து எஞ்சியவற்றை அக்னி சமர்ப்பணம் செய்வர் என்கின்றன சாஸ்திர நூல்கள்.

நாயன்மார்களில் ஒருவர் சோமாசி மாறநாயனார். இவர் சோமயாகம் செய்யும் பரம்பரையில் தோன்றியவர். இவரின் சோமயாகத்துக்கு ஈசனே மாறுவேடம் புனைந்து நால்வேதங்களோடும், உமையவளோடும் கணபதி முருகனோடும் வந்து ஆகுதியை நேரடியாகப் பெற்றுக்கொண்டார் என்கிறது புராணம்.

சோமயாகம் செய்தாலோ அதைப் பார்த்தாலோ அதில் பங்கெடுத்துக் கொண்டாலோ சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதோடு நினைத்த காரியம் நிறைவேறும். ஈசனின் அருள், ஞானம் ஆகியன பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதிகம்.

அப்படிப்பட்ட அபூர்வ பலன்களை அருளும் இந்த விஸ்தாரமான ஹோமத்தை அனைவரும் எளிதாக வீட்டில் செய்ய முடியாது. வடக்குக் கேரளாவில் உள்ள கைதாபிரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஶ்ரீகொம்பன்குளம் விஷ்ணுநம்பூதிரியும் அவர் மனைவி உஷாவும் பெருமுயற்சியோடு இந்த ஹோமத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களே இந்த ஹோமத்தின் எஜமானர்கள் எனப்படுவர்.

கைதாபுரம் கிராமத்தில் ஸ்ரீவாசுதேவபுரம், ஸ்ரீ கிருஷ்ணன் மத்திலகம், ஸ்ரீ விஷ்ணுபுரம் ஆகிய மூன்று பழைமையான ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு நடுவே அமைந்திருக்கும் 4 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மான யாகசாலைகள் அமைக்கப்பட்டு இன்று தொடங்கி மே 5- ம் தேதிவரை சோமயாகம் நடைபெறுகிறது.

விஷ்ணுநம்பூதிரியும் உஷாவும் கடந்த ஆண்டு அட்சய திரிதியை நாளில் (மே - 2, 2022) அக்னியாதானம் செய்து அக்னிஹோத்ரிகள் ஆயினர். தொடர்ந்து 360 நாள்கள் அக்னி ஹோமம் செய்து அதைக் கடந்த ஏப்ரல் 27 - ம் தேதி பூர்த்தி செய்தனர். இதைத் தொடர்ந்து பல ஹோமங்களும் வழிபாடுகளும் செய்துவந்த விஷ்ணு நம்பூதிரி தம்பதி இன்று முதல் சோமயாகம் தொடங்கியிருக்கிறார்.

இந்த குறித்து ஹோம ஏற்பாடுகளைச் செய்பவர்களில் ஒருவரான உன்னிகிருஷ்ணனிடம் கேட்டோம்.

" ஹோமங்கள் நம் பண்பாட்டில் ஒன்று. முறையாக ஹோமம் செய்தால் அதற்கான பலன்கள் கிடைக்கும். ஹோமங்கள் இம்மைக்கும் மறுமைக்குமான சகலத்தையும் அளிக்கக் கூடியது. நான்கு வேதங்களிலும் பல ஹோமங்கள் குறித்த செய்திகள் காணப்பட்டாலும் 21 ஹோமங்கள் முக்கியமானவை. அவற்றில் சோமயாகம் மிகவும் பிரசித்திபெற்றது. கடுமையான அனுஷ்டானங்களோடு கூடிய இந்த ஹோமத்தை மிகுந்த முயற்சிகளோடு முன்னெடுத்திருக்கிறோம். இந்த ஹோமத்துக்கான சோமலதை வட இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஹோமத்தைச் செய்துகொடுக்க இந்தியா முழுவதும் இருந்து பல வேதியர்கள் வந்திருக்கிறார்கள். சுமார் 4 ஏக்கர் நிலத்தில் இந்த யாகசாலை கட்டப்பட்டுள்ளது. பல சாஸ்திர நிபுணர்கள் கலந்துகொள்கிறார்கள்.

கைதாபிரம் சோமயாகம்

ஹோமம் நடைபெறும் நாள்களில் இங்கே அறிஞர்களின் விரிவுரைகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் கலை கலாசார நிகழ்ச்சிகள் எனப் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைதாபிரம் பகுதியில் இதற்கு முன்பாக 105 ஆண்டுகளுக்கு முன்பாகவே இதுபோன்று சோமயாகம் நடைபெற்றுள்ளது. இப்போது இங்கு வாழும் யாரும் சோமயாகத்தைக் கண்டதில்லை. எனவே அனைவருக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. இதில் பங்குகொள்வது மிகவும் விசேஷமானது. இந்த ஹோமம் தொடர்பான தகவல்கள், www.kaithapramsomayagam2023.org இணையதளத்தில் உள்ளன. பங்கெடுக்க விரும்பும் ஆஸ்திக அன்பர்கள் அதில் தகவல்களைப் பெறலாம்" என்றார்.



source https://www.vikatan.com/spiritual/gods/news-about-the-rare-somayaga-at-kerala

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக