Ad

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

How to: சிறுநீரகக் கல் ஏற்படாமல் தடுப்பது எப்படி? | How To Prevent Kidney Stones?

6 வகை சிறுநீரக்கல்

சிறுநீரகத்தில் கல் ஏற்படுவது, சிறுநீரகவியல் சார்ந்து பலரும் எதிர்கொள்ளும் பிரச்னையாக இருக்கிறது. இப்பிரச்னை ஏன் ஏற்படுகிறது என்றும் இப்பிரச்னையிலிருந்து தற்காத்துக் கொள்வது மற்றும் சிகிச்சை குறித்தும் சிறுநீரகவியல் மருத்துவர் கணேஷிடம் கேட்டோம்…

“சிறுநீரகக் கல்லில் 6 வகை இருக்கின்றன. ஒவ்வொரு கல்லுக்கும் தகுந்தாற்போல் அதன் தன்மை இருக்கும். இந்த 6 வகையான கற்களில் மூன்று வகையான கற்கள் மரபணு ரீதியாக ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. தங்கள் குடும்பத்தில் அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ சிறுநீரகக் கல் இருந்தால் அதிக வனமாக இருக்க வேண்டும்.

சிறுநீரகக்கல் உண்டாவது எப்படி

விதைப்பையில் ஏற்படும் தொற்று, பாதுகாப்பற்ற உடலுறவால் ஏற்படும் கிருமித் தொற்றின் காரணமாக சிறுநீர்ப்பாதையில் அடைப்பு ஏற்படலாம். இந்த அடைப்பின் காரணமாக சிறுநீர் முழுவதும் வெளியேறாமல் பாதையிலேயே தங்கி விடுகிறது. நாள்பட நாள்பட உப்புப் படிந்து அது சிறுநீரகக் கல்லாக மாறுகிறது.

சிலருக்கு பெருங்குடல் வியாதிகள் இருக்கும். அவர்களுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். சிறுநீரில் மட்டுமல்ல, மலத்திலும் சில உப்புச் சத்துகள் வெளியேற வேண்டும். பெருங்குடல் தொடர்பான வியாதிகளுக்கு ஆட்பட்டோருக்கு மலத்தில் உப்பு வெளியேறாமல் உள்ளேயே தங்கி விடுகிறது. இதனால் தண்ணீரில் பாசி படிவதைப் போல அந்த உப்பு உள்ளேயே படிந்து கல்லாக மாறி விடும்.

ஆபத்தான மதுப்பழக்கம்

அடிக்கடி சிறுநீர்த் தாரைத்தொற்று (Urinal Track Infection) ஏற்படுகிறவர்களுக்குக்கூட சிறுநீரகக் கல் ஏற்படும். ஏனென்றால் அக்கிருமி சிறுநீர்ப்பாதை வழியாக சிறுநீரகத்திலோ, சிறுநீர்ப் பையிலோ தங்கி சிறுநீரகக் கல்லை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருக்கின்றன. சிறுநீர்த் தாரைத்தொற்று சிறுநீரகக் கல்லை ஏற்படுத்துவதில் முக்கியக் காரணியாக உள்ளது.

உடல் நலத்துக்கு எதிரான மதுப்பழங்களால் சிறுநீரகத்தில் கல் ஏற்படும். மது அருந்துகிறவர்கள் நிறைய சிறுநீர் கழிப்பார்கள். ஆனால் அதற்கு நிகராக தண்ணீர் உட்கொள்ள மாட்டார்கள். போதையில் அவர்களுக்கு தாக உணர்வே ஏற்படாது. இதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து மிகவும் குறைந்து போய் விடும். உடலில் உப்பின் அளவு அதிகரித்து அது உள்ளேயே தங்கி நாளடைவில் கல் ஏற்படுவதற்கான வாய்ப்பை உண்டாக்குகிறது. ஆகவே, உடல் மற்றும் உளவியல் சார்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிற மதுப்பழக்கத்துக்கு ஆளாகக்கூடாது. அப்படியே மது அருந்தினாலும் கூட ஆண் – பெண் இருவருமே மிகவும் குறைந்த அளவில்தான் உட்கொள்ள வேண்டும்.

மது

அதிக புரதம் வேண்டாமே!

நீரிழிவு நோய்க்கு ஆட்பட்டவர்களுக்கும் சிறுநீரகக் கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவர்கள் மேலும் கவனமாக இருக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க வேண்டும். சர்க்கரை அளவு மிகுதியாகும்போது அதன் பக்க விளைவாக உப்புப் படிந்து அது கல்லாக மாறும்.

அதிக அளவில் புரதச்சத்து எடுத்துக் கொள்கிறவர்களுக்குக் கூட உடலில் உப்பின் அளவு மிகுதியாக வாய்ப்பிருக்கிறது. அதிக அளவில் இறைச்சி சாப்பிடுகிறவர்கள், காய்கறிகளிலுமே புரதச்சத்து மிகுந்தவற்றைச் சாப்பிடுகிறவர்கள், ஜிம்மில் தரப்படும் புரதச்சத்துக்கான சப்ளிமென்ட் சாப்பிடுகிறவர்களுக்கெல்லாம் கூட உப்பு மிகுதியின் காரணமாக சிறுநீரகக் கல் ஏற்படலாம்.

நீர்ச்சத்து அவசியம்

கடினமான உடற்பயிற்சி மேற்கொள்கையில் உடலில் இருந்து வெளியேறும் சில வகையான ரசாயனங்கள் கூட சிறுநீரகத்தை பாதிக்கும். ஜிம்முக்குச் செல்லும் இளைஞர்கள் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் சார்ந்து மருத்துவமனைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கு இது போன்று நிறைய காரணங்கள் இருக்கின்றன. என்ன காரணத்தினால் கல் ஏற்பட்டது எனக்கண்டறிந்தால் அது எவ்வகையான கல் என்பதையும் கண்டறிய முடியும்.

தண்ணீர் தண்ணீர்..

எப்போதெல்லாம் சிறுநீர் கழிக்கிறார்களோ அப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீர் பாதையில் உப்புப் படியாது என்பதால் சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு. கோடைக்காலத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக நீர் அருந்த வேண்டும். ஏனென்றால் அதிகமாக வியர்வை வெளியேறுகையில் உடலில் நீர்ச்சத்து குன்றிவிடும். இதனால் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்பதால் உடலை எப்போதும் நீர்ச்சத்துடனயே வைத்துக் கொள்வது அவசியம்.

தண்ணீர்

கரைப்பது எப்படி?

சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டு விட்டால் அது எந்த விதமான கல் மற்றும் அதன் அளவைப் பொறுத்து சிகிச்சை வழங்கப்படும். 6 மில்லி மீட்டருக்குள் இருக்கும் கற்களைத் தாங்கலாம். அதற்கும் பெரிதாக உள்ள கற்கள் சிறுநீர்ப் பாதையை அடைத்து விடும். அப்படிப்பட்ட பெரிய கற்களுக்குதான் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

இன்றைக்கு சிறுநீர் வெளியேறும் துளையின் வழியே மெல்லிய ஒயரைச் செலுத்தி கல்லை வெளியே கொண்டு வருகிற அளவுக்கு மருத்துவத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. லேசர் சிகிச்சை மூலம் கல்லை பொடியாக்கி சிறுநீர் வழியாக வெளியேற்றவும் முடியும். சில வகையான கற்களை மட்டும்தான் அதன் தன்மை தெரிந்தால் மாத்திரை மூலமாகவே கரைக்க முடியும்” என்கிறார் கணேஷ்.

- கி.ச.திலீபன்



source https://www.vikatan.com/health/how-to-prevent-kidney-stones

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக