Ad

வியாழன், 27 ஏப்ரல், 2023

ஆன்லைன் ரம்மி மோகம்; அதிகரித்த கடன் சுமை - ரூ.43 லட்சத்துடன் மாயமான வங்கி காசாளர் சிக்கியது எப்படி?

விழுப்புரம் மாவட்டம், இளங்காடு கிராமத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் முகேஷ். இவர், விழுப்புரம் அடுத்த சிந்தாமணியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் காசாளராக பணியாற்றி வந்தார். கடந்த 25-ம் தேதி காலையில் வழக்கம் போல வங்கி பணிக்கு சென்றிருக்கிறார். சுமார் 10.40 மணியளவில் தனக்கு உடல்நலம் சரியில்லை எனவும், அதனால் அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்கிறேன் எனவும் வங்கி மேலாளரிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார். 

புகார் மனு, கைது செய்யப்பட்ட முகேஷ்

ஆனால், அதன் பின்னர் அவர் வங்கிக்கு திரும்பாமல் போயுள்ளார். எனவே, அவரை போனில் தொடா்புகொண்டபோது இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்துள்ளது. அதன் பின், அவரின் கேபினில் சோதித்த போது மொத்தம் ரூ.43,89,500 வங்கிப் பணம் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், வங்கியின் சி.சி.டி.வி காட்சிகளை சோதித்து பார்த்தபோது முகேஷ் பணத்தை எடுத்துச் சென்றது உறுதியாகியுள்ளது. அதன் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து சிந்தாமணி வங்கி மேலாளர், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸ் வழக்கு பதிவு செய்தது. 

சிந்தாமணி கிளையின் வங்கி மேலாளர், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸ் வழக்கு பதிவு செய்தது. மேலும், காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் முரளி, சந்திரசேகர், பாண்டியன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு முகேஷை தேடும் பணி தீவிரமடைந்தது. இந்த நிலையில், மர்ம நபர்களால் முகேஷ் மிரட்டலுக்கு உள்ளாகி கடத்தப்பட்டதாகவும், இது குறித்து முகேஷே தனது சகோதரிக்கு ஆடியோ ஒன்று அனுப்பியதாகவும் சர்ச்சை கருத்துகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், "அது பொய்யான தகவல். அவரை யாரும் கடத்தவில்லை" என்று தனிப்படை போலீஸார் நமக்கு பதிலளித்திருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு(26th) முகேஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, ஆன்லைன் ரம்மி மீதான மோகத்தில் இந்த தொகை மட்டுமின்றி, நூதன ஏமாற்று வேலையில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஆன்லைன் ரம்மி

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். "முகேஷ் வங்கி வேலைக்கு வருவதற்கு முன்னர், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகியிருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் வெற்றியை பெற்றவர், அதன் பின்னர் பணத்தை இழக்க துவங்கியிருக்கிறார். எனவே, 'விட்ட பணத்தை பிடிக்க வேண்டும்' என்று உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சுமார் 12 லட்சம் வரை கடன் வாங்கியிருக்கிறார். அதே சமயத்தில் அவரின் வீட்டையும் கட்டியிருக்கிறார். இதனால் இன்னும் அவருக்கு கடன் சுமை அதிகரித்திருக்கிறது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பாகதான் வங்கி வேலைக்கே வந்திருக்கிறார். கடன் சுவை அதிகரிப்பால்... 'மீண்டும் பணம் கிடைத்தால் ரம்மி விளையாட்டின் மூலம் வெற்றிபெற்று கடன்களையெல்லாம் அடைத்துவிடலாம்' என்று தவறாக எண்ணியிருக்கிறார். 

அதன்படியே தனது வங்கி ஊழியர்களிடமும் கடன் பெற்று, அந்த பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் போட்டு, இழப்பை சந்தித்திருக்கிறார். மேலும் இவர் வங்கி காசாளர் என்பதால், வங்கியில் லாக்கருடைய ரகசிய எண் இவருக்கு தெரிந்திருந்திருக்கிறது. அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர்...  பல சேமிப்பு கணக்குகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, நீண்ட நாட்களாக அப்படியே இருக்கும் சேமிப்பு கணக்குகளில், தொலைபேசிக்கு குறுஞ்செய்தி செல்லாத கணக்குகளாக டார்கெட் செய்து பணத்தை எடுத்து கையாடல் செய்திருக்கிறார். இவ்வாறாக சுமார் 25 லட்சத்திற்கும் மேல் நூதன முறையில் கையாடல் செய்திருக்கிறார் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. 

விழுப்புரம் தாலுகா காவல் நிலையம்

அந்த வங்கியின் கிளையில் இருந்த பண விவரத்தை இவர்தான் பார்த்து வந்துள்ளார். எனவே, இவ்வாறு குறிப்பிட்ட தொகையை எடுத்து கடனை கொடுத்துவிட்டு... அதில், மீதி பணம் மூலம் ஆன்லைன் ரம்மியில் சம்பாதித்து மீண்டும் அதேபோல் வைத்துவிடலாம் என்றே இவ்வாறு 43.89 லட்சத்தை எடுத்துச் சென்றதாக தெரிய வந்திருக்கிறது. அவரது தொலைபேசி எண் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தற்போது அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும், அவர் எடுத்துச்சென்ற தொகையும் மீட்கப்பட்டிருக்கிறது. அவர் மீது 381-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வங்கி தரப்பிலிருந்து கையாடல் செய்யப்பட்ட பணம் குறித்த விவரம் அளிக்கப்பட்டால், அவர் மீதான வழக்கு பிரிவுகள் மாற்றம் செய்யப்படலாம்" என்றனர். 



source https://www.vikatan.com/crime/a-bank-employee-who-absconded-with-rs-4389-lakh-was-arrested-in-villupuram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக