Ad

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

"2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும்" - விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், முதன் முறையாக இன்று விழுப்புரம் மாவட்டம் வழியே சேலத்துக்குப் பயணித்தார் எடப்பாடி பழனிசாமி. அதற்காக விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திண்டிவனம் தொடங்கி, விழுப்புரம் வரை 100 அடிக்கு ஒன்று என்ற வீதத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தொடர் வண்டியைப்போல கொடிக்கம்பங்களும் வழி நெடுகிலும் நடப்பட்டிருந்தன. வழிகளில் வைக்கப்பட்ட பேனர்களில்... "மூன்றாம் தலைமுறையே, நிகழ்கால பொன்மனச்செம்மலே" என்றெல்லாம் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. 

வரவேற்பு பதாகை
வரவேற்பு பதாகை
வரவேற்பு பதாகை
வரவேற்பு பதாகை
வரவேற்பு
சி.வி.சண்முகம்
திரண்ட மக்கள் & தொண்டர்கள்

விழுப்புரம் நான்குமுனைச் சந்திப்பில் (சாலை ஓரமாகவே) வரவேற்பளிக்க மேடை அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்துக்குக் கூட்டத்தைக் கூட்டுவதுபோல, விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலிருந்தும் கட்சிக்காரர்களைத் திரட்டியிருந்தார் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம். இதற்காக வரம்புகளைமீறி டாடா ஏஸ் வாகனங்களிலும் அ.தி.மு.க தொண்டர்கள் அழைத்துவரப்பட்டனர். 3,000-க்கும் மேற்பட்டோர் அங்கு திரட்டப்பட்டிருந்தனர். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

காலை 9 மணிக்கு வரவேற்பு இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், பின்னர் 10 மணி என மாற்றப்பட்டது. அதை நம்பி, எடப்பாடி பழனிசாமியின் வருகையை எதிர்பார்த்து அ.தி.மு.க நிர்வாகிகள் கொளுத்தும் வெயிலிலும் காத்துக்கிடந்தனர். அதில் பலரும் வெயிலின் தாக்கம் தாளாமல், அருகில் இருந்த நிழற்குடையில் தஞ்சமடைந்தனர். ஆனால், மதியம் 12 மணி அளவிலேயே விழுப்புரம் நான்குமுனைச் சந்திப்புக்கு வந்தடைந்தார் எடப்பாடி பழனிசாமி. அவரை வரவேற்ற தொண்டர்கள், முண்டியடித்தது ஒருபக்கம் என்றாலும்... சால்வை, மாலை அணிவிப்பதற்கோ; கை குலுக்குவதற்கோ தொண்டர்களை பழனிசாமி அனுமதிக்கவில்லை. இது அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 

காத்துக்கிடந்த அ.தி.மு.க-வினர் & பொதுமக்கள்

சி.வி.சண்முகத்தின் வரவேற்புரையைத் தொடர்ந்து பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "விழுப்புரம் மாவட்டமே விழுப்புரத்தில் குழுமி இருக்கின்ற காட்சியைப் பார்க்கிறேன். புரட்சித்தலைவர் மறைவுக்குப் பிறகு அம்மா அவர்கள் தமிழகத்தினுடைய வரலாற்றில் ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினார்கள். இருபெரும் தலைவர்கள் வகித்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் பொறுப்பை... இன்று எனக்கு நீங்கள் வழங்கியிருக்கிறீர்கள். எனவே, அனைத்துத் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது கனிவான நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். 

இன்று இந்த அ.தி.மு.க இயக்கத்தை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும், முடக்க வேண்டும் என்று தி.மு.க எத்தனையோ சூழ்ச்சிகளைச் செய்தது. அத்தனையையும் முறியடித்து, தி.மு.க-வை எதிர்காலத்தில் வீழ்த்தும் மகத்தான பணியை நீங்கள் என்னிடத்திலே வழங்கியிருக்கிறீர்கள். உங்களுடைய அன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாக நான் என்றும் செயல்படுவேன். தொண்டர்கள் நினைப்பதை நிறைவேற்றுவதே என்னுடைய பணியாக அமையும். அ.தி.மு.க-வை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக... சில சூழ்ச்சியாளர்கள் நம்மோடு இருந்து, இன்று பிரிந்து, தி.மு.க-வோடு கைகோத்து, அவர்களின் 'பி' டீமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் சட்டத்தின் மூலமாக இன்று வென்றிருக்கிறோம். எம்.ஜி.ஆர்., அம்மா கண்ட கனவை நாம் நிறைவேற்றுவோம். இன்றைய தமிழகத்தின் ஆட்சியாளர் ஸ்டாலின் அவர்கள், வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க நிர்வாகிகள்மீது பொய் வழக்கு புனைந்துவருகிறார். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சட்டரீதியாகத் தகர்த்தெறிவோம். 

டாடா ஏஸ்-களில் அழைத்துவரப்பட்ட மக்கள்

அ.தி.மு.க ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியைத் தொடர்ந்து செய்வோம். அ.தி.மு.க-வை யார் சீண்டிப் பார்த்தாலும் அவர்கள்தான் அழிவார்கள். இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர்கள் எம்.ஜி.ஆர்., அம்மாதான். அவர்களுக்கு வாரிசு கிடையாது. நம் அனைவரையும்தான் வாரிசாகப் பார்த்தார்கள். ஆகவே, இந்த இயக்கத்தை யாரும் சீண்டிப் பார்க்க முடியாது. ஏன் தொட்டுக்கூட பார்க்க முடியாது. ஏதோ வழக்குகளைத் தொடுத்து, அச்சுறுத்தி, அ.தி.மு.க-வை அழிக்கப் பார்த்தால் அது கானல்நீராகத்தான் அமையும்.

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க மீண்டும் ஆட்சி அரியணையில் அமரும், அது வெகுதொலைவில் இல்லை. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரலாம். அடிக்கடி மத்தியிலுள்ள ஆட்சியாளர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள் 'ஒரே நாடு... ஒரே தேர்தல்...' என்று. ஆகவே, 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருகின்றபோது, சட்டமன்றத் தேர்தலும் வரும். நமக்கு விடிவுகாலம் பிறக்கும். ஒளிமயமான எதிர்காலமும் நம் கண்முன்னே தெரிகிறது. அதற்காக ஒன்றிணைந்து பாடுபடுவோம்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-general-secretary-edappadi-palanisamy-speech-at-villupuram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக